Friday, December 7, 2007

சாட்சாத் இராமர் - அனுமரை கோர்ட்டுக்கு வரச் சொல்லி சம்மன்!



செய்தி :

பீகார் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் தாகையா பகுதியில் ஒரு கோயில் உள்ளது. அங்கு இராமரும், அனுமாரும் வழிபடும் தெய்வங்களாக உள்ளனர்.

இக்கோயில், ஜாரியா மன்னரால், கடந்த 1922 - ல் இந்தி எழுத்தாளர் மகன்மோகன் பதக் என்பவரின் தாத்தாவுக்கு வழங்கப்பட்டது ஆகும்.

இந்நிலையில் ஹால்தர் என்பவர், இந்தக் கோயிலை பொதுச் சொத்தாக அறிவிக்கும்படியும் வழக்கில் கடவுள்களான இராமர் மற்றும் அனுமாரைச் சேர்க்க வேண்டும் என்று கோரி வழக்குப் போட்டார்.

அதில் கோவிலை பொதுச் சொத்தாக மாவட்ட துணை நீதிமன்றம் அறிவித்தது. இதற்கிடையே இந்த வழக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரியில், மனுதாரர் ஹால்தர் மற்றும் கடவுள்கள் இராமர், அனுமார் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக, நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதில் கடந்த 17-ந்தேதி ஹால்தர் கோர்ட்டில் ஆஜரானார்.

ஆனால், இராமரும், அனுமாரும் வராததால் அவர்களுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். உடனே கோர்ட்டு ஊழியர்கள் சம்மன்களைக் கொடுப்பதற்காக கோயிலுக்குச் சென்றனர். ஆனால் அதை யாரும்
வாங்கவில்லை.

பார்வை-1

இந்தப் பீகார்காரர்களைப் போன்ற காமெடியர்களைப் பார்க்கவே முடியாது. "மிஸ்டர் பீன்' காமெடிக்காக எவ்வளவு தூரம் அடிமுட்டாள் சேஷ்டைகள் செய்கிறாரோ, அதைவிட தாண்டி நிஜத்தில் செய்யக்கூடியவர்கள்
இவர்கள்.
இதில் பீகார் மாநில நீதிபதிகளும் சளைத்தவர்கள் இல்லை. "அம்பாள் எந்தக் காலத்திலடா வந்தாள்' என்கிற டயலாக்கை மாற்றி "ராமர்- எந்தக் காலத்திலடா வந்தார், அனுமார் - எந்தக் காலத்திலடா வந்தார்'என்று கேட்காமல், (ஒருவேளை தமிழ்ப்படம் என்பதால் அவர்களுக்குப் புரிந்திருக்காதோ?), மனுதாரர் இராமரையும் அனுமாரையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதால், சட்டத்தின்
கிளிப்பிள்ளையாகச் செயல்பட்டிருக்கிறார்.
மனுதாரரின் கோரிக்கையின்படி அந்தக் கோயிலை பொதுச் சொத்தாக அறிவித்த பின்பும், இராமருக்கும், அனுமாருக்கும் சம்மன் அனுப்பிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி நீதிமன்றத்தினுடைய நேரமும், அரசாங்கத்தினுடைய பொருள்களும் வீணடிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பொதுவழக்கு தொடர்கிறபோது, அந்த வழக்குப்
போட்டவர்களின் நோக்கம் காரணம் சரியானதாக இல்லை என்றால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக வழக்குப் போட்டவர் மீது அபராதம் போடவில்லையா? அதைப்போல நீதிபதிகளுக்கும் போடலாமா?
வேண்டாமா? ஏனென்றால் பீகார் மாநில நீதிபதிகள் இப்போதுதான் முதல்முறையாக இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரம். பீகார் மாநில நீதிமன்றம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு பத்திரிகை நீதிபதிகளுக்குப் பணம் கொடுத்து, வாஜ்பாய், அத்வானி, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் உட்பட பலருக்குச் சம்மன் வாங்கி அனுப்பி சந்தி சிரிக்க வைத்தது. வாஜ்பாய் என்றால் அவரது இல்ல முகவரி உட்பட எல்லாமே குறிப்பிட்டுதான் சம்மன் கொடுக்க வேண்டும். ஆனால் நீதிபதிகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு யாருக்குச் சம்மன்? என்ன வழக்கு? என்கிற
எதையுமே பார்க்காமல் சம்மன் அனுப்பி வைத்தார்கள். இந்தக் காமெடியர்கள் இராமருக்கும், அனுமாருக்கும் சம்மன் அனுப்பியதில் ஆச்சர்யம் இருக்க வாய்ப்பில்லை. அடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்.

பார்வை- 2

ராமருக்கும் அனுமாருக்கும் சம்மன் அனுப்பியதற்காக ஒரு வகையில் நீதிபதியைப் பாராட்டலாம்.
அம்பாளைப் போல ராமரும், அனுமாரும் எந்தக் காலத்திலும் வரமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உலகத்திற்குச் சொல்வதற்காகச் செய்ததாக எடுத்துக் கொண்டு பாராட்டலாம்.
இதைப்போல இன்னொரு வகையிலும் பாராட்ட வேண்டும் அந்த நீதிபதியை. ராமர் பாலப் பிரச்சினையில், முதலில் ராமர் வாழ்ந்ததற்கான
சான்று இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, பாஜக தாம்தூம் என்று குதித்ததும் உடனே வாபஸ் பெற்றுக் கொண்ட காங்கிரஸ் அரசின் கோழை செயலைச் செய்யாததற்காக அந்த நீதிபதியைப் பாராட்டலாம்.

உண்மையை, நீதியை நிலைநாட்டுவதற்காகவே அமர்ந்திருக்கிற உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராமர் வாழ்ந்தார் என்பதற்கான சான்று இல்லை என்று முதலில் தாக்கல் செய்துவிட்டு, பிறகு வாபஸ் வாங்கியவுடன் இராமர் இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்பதற்கான சான்றைக் கொடுங்கள் என்று கேட்டிருக்க வேண்டாமா? ஏன் கேட்கவில்லை? சரி நீதிபதிகளை விடுங்கள்.
ராமர் வாழ்ந்ததற்கான சான்று இல்லை என்று சொன்னவுடன்
இந்த ஜெகத்தினை அழிப்பதற்கு ராமர் வந்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவாவது வந்திருக்க வேண்டாமா?
நல்லவேளை சுனாமி முன்பே வந்து போய்விட்டது. இல்லையென்றால் அதனால்தான் சுனாமி வந்தது என்று பணம் பறிக்கும் பூசாரியும், ஜோசியரும்
சொல்லியிருப்பார்கள்.
இந்த மக்களும் இராமரைக் குளிர்விக்க கடலில் போய் பாலையும் தேனையும் ஊற்றிக் கொண்டிருப்பார்கள்.
இன்னொரு வகையிலும் சம்மன் வழங்கிய நீதிபதியைப் பாராட்ட
கடமைப்பட்டிருக்கிறோம். உங்களோடு இராமர் விஷயம் தொடர்பாகப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக......

No comments: