![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiy4D8UHSyVh2NXSzEbaaWurfl-qwPM3x1csihKS98JK29UvVHH1t_cYwP4tcWZhHYMsWgBp0tQxYUlWIjDFqsBEeYhGnefFb42rNZuGsGJ8hf6s4WNuTrT0To4HOtC2LYdttpom9Dt3Y/s320/child2.bmp)
கடந்து போதல்...
---------------------
பிஞ்சுச் சுவடுகளைக்
கவிதைகளாகப் பதிக்கும்
செல்ல மகள் ஆளுமை பற்றிக் கேட்க
நண்டின் கால்களால் எழுதி
கடற்கரை சொன்னது:
"கடலைக் கடந்ததே கவிதை'
காகிதக் கத்திக்கப்பலில் பயணித்து
அபாய எதிரலைகளில் உருக்கொள்ளும்
வெள்ளைத் தாள்களையெல்லாம்
கிழித்தெழுதி போவதைப்
பார்த்து கடல் சொன்னது:
"ஆகாயம் கடந்ததே கவிதை'
குளிர்ச்சியைப்போல் மழையை
வீட்டிற்குள் அழைத்து
வரமுடியாத கோபத்தில்
ஈசல் உதிர்த்துப் போன சிறகுகளால் பறந்து
வார்த்தைகளைப் பால்வீதியில்
தனித்தனிக் கிரகமாய் மிதக்கவிட
ஆகாயம் சொன்னது:
"சூரியனைக் கடந்ததே கவிதை'