Sunday, February 24, 2008

ஷில்பாஸ் யோகா!


யோகாசனங்களுக்குப் புதுப்பெயர் வைத்திருக்கிறார்கள் லண்டன்வாசிகள். அப்பெயர் "ஷில்பாஸ் யோகா'. டிவிடி மூலம் ஷில்பா ஷெட்டி யோகா சொல்லிக் கொடுக்கிறார் என்றால் அந்தப் பெயரை லண்டன்வாசிகள் வைக்கத்தானே செய்வார்கள்?
"பிக்பிரதர்' நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பிறகு லண்டன் மக்கள் ஹாலிவுட் படவாய்ப்புகள் உட்பட பல்வேறு வாய்ப்புகளை வாரிக் கொடுக்க அங்கேயே செட்டிலாகி விட்டார் ஷெட்டி. அங்கு செல்கிற இடமெங்கும் அவருக்கு அதிக வரவேற்பு கொடுப்பதுடன், அவர் செய்கிற காரியங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. "பாம்பே ட்ரீம்ஸ்' என்கிற நாடகம் ஒன்றில் நடித்தார். அதன் கதை தொடர்பாக சர்ச்சையாகி அந்த நாடகமும் அவருக்கு அதிகப் புகழைத் தேடிக் கொடுத்தது. இப்போது அவரே வெளியிட்டிருக்கிற யோகா டிவிடியும் அதிகப் புகழை அவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால் இதில் எவ்வித சர்ச்சையும் ஏற்படவில்லை என்பது வியப்பு! சினிமாவில் நடிப்பதுபோல யோகா செய்வதுபோல டிவிடி வெளியிடுவதற்காக நடித்திருக்கிறாரா?
பாபா ராம்தேவ் நடத்திய யோகா பயிற்சி முகாம் ஒன்றில் ஷில்பா இதற்குப் பதில் சொன்னார்: ""கழுத்து எலும்பில் எனக்குத் தேய்மானம் ஏற்பட்டபோதுதான் யோகா செய்யத் தொடங்கினேன். போகப்போகப் தேய்மானப் பாதிப்பு நீங்கியதுடன், என்னைச் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்க வைத்தது. அதிலிருந்து தொடர்ந்து தினமும் யோகா செய்து வருகிறேன்.'' ஷில்பா சொன்னது உண்மை என்பதைக் கச்சிதமான அவர் உடலைப் பார்த்தும் நம்பாதவர்கள், டிவிடியில் அவர் யோகா செய்வதைப் பார்த்தால் நிச்சயம் நம்புவார்கள்.

"இந்தியா முழுவதும் சுற்றக் கூடியவராக நீங்கள் இருக்கலாம்; அல்லது உலகம் முழுவதும் சுற்றக்கூடிய நபராக இருக்கலாம். உங்களுடனே ஒரு ஜிம்மைச் சுமந்துகொண்டு போக முடியுமா? முடியாது. வாங்க.. 15 நிமிடம் குயிக் பிக்ஸ் ப்ரோகிராம்... ஆளே மாறிடுவீங்க'' என்ற ஸ்கை ப்ளு வண்ண ஆடையில் சிரித்தபடியே அழைக்கிறார்.
அடுத்தநொடி. உடலோடு ஒட்டிய சிவப்பு உடற்பயிற்சி பனியனோடு தோன்றுகிறார். யோகாசனங்கள் செய்யத் தொடங்குகிறார். ஷில்பா செய்யச் செய்ய, பின்னணியில் அந்தப் பயிற்சிகளுக்கு ஒருவர் விளக்கம் அளிக்கிறார்.
தியானநிலை ஆசனங்கள், நின்றநிலையில் செய்கிற ஆசனங்கள். உட்கார்ந்த நிலையில் செய்கிற ஆசனங்கள். படுத்துகொண்டு செய்கிற ஆசனங்கள் என்று ஒவ்வொரு ஆசனமாக அமைதியாக நேர்த்தியாகச் செய்துகாட்டுகிறார். "எனக்கு யோகா செய்யத் தெரியாது. ஷில்பாஸ் டிவிடியைப் பார்த்தபோது நானே யோகா செய்தது போன்ற அமைதியையும் சுறுசுறுப்பையும் பெற்றேன்'' என்று இணைய வாசகர் ஒருவர் எழுதியிருந்தார். அவர் எழுதியிருப்பதுபோலத்தான் ரம்மியமாய் எடுக்கப்பட்டிருக்கிறது.
டீச்சர் வேடத்தில் நடிகைகள் நடிக்கிறபோதே, அதில் கவர்ச்சியைப் புகுத்திவிடுகிறவர்கள் ஒரு நடிகை யோகா சொல்லிக் கொடுக்கிறார் என்றால் எப்படி விளையாடி இருப்பார்கள்?

தவறான சலனத்தை ஏற்படுத்தாத வகையில் எடுத்திருக்கிறார்கள். கேரளத்தின் ஆற்றங்கரையோரங்களில் உள்ள பசும்புல்வெளிகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையின் அழகில் கவனம் திரும்பிடக்கூடாது என்ற எண்ணத்தில் காமிரா ஷாட்டுகள் எல்லாமே குளோஸ் அப்பிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

குப்புறப்படுத்து, கால்களைக் கைகளால் வளைத்துப்பிடித்து, வயிற்றுப் பகுதியை ஊன்றி வில்லைபோல் வளைகிற தனுராசனம், மல்லாந்து படுத்து இரண்டு கைகளையும், இரண்டு கால்களை ஊன்றி உடலை மட்டும் உயர்த்துகிற சக்ராசனம் போன்ற சிரமமான ஆசனங்களையும் விட்டு வைக்காமல் பெரும்பாலான ஆசனங்களைச் செய்து காட்டியுள்ளார் ஷில்பா.

"யோகாவைத் தொடர்ந்து செய்து வந்தால் செதுக்கி வைத்ததுபோன்ற உடலமைப்பைப் பெறலாம். மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் நோய்கள் அண்டாத வண்ணம் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். மனச்சோர்வு நீங்கும், சுறுசுறுப்பு அதிகரிக்கும்' என்று சொல்லும் இந்த டிவிடி இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை.
ஷில்பா இங்கு வெளியிடாவிட்டாலும் இணையம் வழியே இங்கு வந்துவிட்டது! http://www.tumtube.com/ என்ற முகவரிக்கு இணையத்தில் சென்றால் இலவசமாய் ஷில்பாஸ் யோகா டிவிடியைப் பார்க்கலாம். கட்டாயம் யோகா செய்ய வலியுறுத்தும்!

இந்த டிவிடியைப் பாராட்டி நிறைய "கமெண்ட்'கள் இணையத்தின் நிறைய blogspot- களில் இருக்கின்றன. இதற்கு எதிர்மறையாக http://www.lovebollywood.blogspot.com/ கார்டூன் வடிவில் அடித்துள்ள ஒரு கமெண்ட்:


"யோகாசனம் எனக்கு முன்பே தெரியும்... இப்போது நான் செய்வது பப்ளிசிட்டியாசனம்!'



Monday, February 18, 2008

தலைகீழ்- ஷில்பா!





"சாவரியா...சாவரியா' என்ற ஹிந்தி பாடலை யாராவது பாடுகிற சத்தம் கேட்டால் சுற்றும் முற்றும் தேடிப் பாருங்கள். பாடுவது -விஜய் டிவியில் "அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சி மூலம் பலரைப் பேட்டி காணும் ஷில்பாவாக இருக்கலாம். அடிக்கடி அவர் முணுமுணுக்கும் பாடலாம் இது. ஹிந்துஸ்தானி இசையில் பாடுவதற்குப் பயிற்சி பெற்று வரும் கேரளப் பெண்ணான அவரை ஓர் இசைவேளையில் சந்தித்தோம்.

பேட்டி எடுப்பது சிரமமா? பேட்டிக் கொடுப்பது சிரமமா?

கொடுப்பதுதான். எடுக்கிறபோது கேள்விதான் கேட்கப்போகிறோம். நம் இஷ்டம்போல் கேட்கலாம். ஆனால், பேட்டி கொடுக்கிறபோது அப்படியில்லை. யோசித்துப் பேசவேண்டும். சொல்கிற தகவல் தவறாகிவிடக் கூடாது. அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பேட்டிக் கொடுப்பதுதான் சிரமம்.

கல்லூரியில் படித்த காலத்திலிருந்த இயல்பிற்கும் இப்போது தொகுப்பாளினியாக இருப்பதற்கும்
ஏதாவது மாற்றத்தை உணர்கிறீர்களா?

இல்லை. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். கலகலப்பான காரெக்டர் என்னுடையது. என் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அந்தக் கலகலப்பும் புன்னகையும்தான் "ரேடியோ ஒன்'னில் பணியாற்றவும், ஜெயா டிவியில் "உங்க ஏரியா உள்ளே வாங்க' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் உதவியது என்று நினைக்கிறேன். இப்போது விஜய் டிவியில் "அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கும் இதுதான் உதவுகிறது. இதனால் என்னளவில் எவ்வித இயல்பு மாற்றமும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

"அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியில் பலரைப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த பிரபலத்தின் பேட்டி?

பிரபலங்களிடம் எடுத்த அனைத்துப் பேட்டிகளுமே சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தன. இதில் நான் மிகவும் விரும்பி எடுத்தது நடிகர் மாதவனுடைய பேட்டி. பிரமிப்புடனே அவருடன் பேட்டி எடுத்தேன். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் பேசத் தொடங்கிய பிறகு அந்தப் பயம் போய்விட்டது. பெரிய பிரபலம்போல் பேசாமல் வெகு இயல்பாகப் பேசினார். "ஸ்கூல் போகிற பெண்போல இருக்கிறாய்' என்று என்னைக் கேலியும் செய்தார். மாதவனுடன் நான் எடுத்த பேட்டிக்குத் தோழிகள் மத்தியில் அதிகப் பாராட்டு கிடைத்தது. அதுவே என்னைக் கவர்ந்த பேட்டியும்.

ஹிந்துஸ்தானி இசை கற்றுவருகிறீர்கள்... திரைப்பாடல் பாட விருப்பமிருக்கிறதா?

ஹிந்துஸ்தானி இசை எனக்கு உயிர். செüம்யா மதன்கோபாலிடம் நாலைந்து வருடங்களாகக் கற்று வந்தேன். இப்போது ராமமூர்த்தியிடம் கற்றுவருகிறேன். இருப்பினும் முழுதாய் கற்றோம் என்கிற எண்ணம் எனக்கு வரவே இல்லை. இசை என்பது கடல். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட விருப்பம் உள்ளது. யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்கவில்லை. நிச்சயம் பாடுவேன்.

நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததா?

சீரியலில் நடிப்பதற்கு இரண்டு பேர் அழைத்தார்கள். எனக்குத்தான் விருப்பமில்லை. எதையும் முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். நடிப்பதற்கு எனக்கு ஆர்வமே இருந்ததில்லை. தொகுத்து வழங்குவது என்பது நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நன்றாகப் பேசுகிறோம் என்பதற்காக நடிக்கமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. திரைத்துறையிலிருந்து அழைப்பு வந்தாலும் நிச்சயம் நடிக்கப் போகமாட்டேன்.

வேறெதில் ஆர்வம்?

இசை...இசை..இசைதான். வேறெதிலும் ஆர்வமில்லை. ஹிந்துஸ்தானி இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். திட்டமிட்டு பயிற்சி பெற்று வருகிறேன். சாதிப்பேன்.

பிடித்தது கேரள வாசமா? சென்னையா?

கேரளாவை எல்லோருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் "கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கிறளவுக்குப் பார்க்கிற இடமெங்கும் பசுமையைப் போர்த்திக்கொண்டிருப்பதுதான். எனக்குப் பிடிக்காததற்கு முக்கியக் காரணமும் அதுதான். அழகழகான கட்டடங்கள் இருக்கிற இடம்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதன்படி எனக்கு சென்னைதான் மிகவும் பிடிக்கும். நான் எல்லாவற்றிலும் தலைகீழ்!

Wednesday, February 13, 2008

நாக் அவுட் - டான்ஸ்!



படத்தில் காணும் இந்தப் பெண்ணின் கையால் உங்களுக்கு அடி வாங்க விருப்பம் இருக்கிறதா? "வாங்க... க்ளவுஸ் எடுத்து மாட்டிக்கிங்க... பாக்ஸிங் பண்ணுங்க.. ஆனால், இவரின் முதல் குத்திலேயே உங்கள் மூக்கு உடைந்துபோனால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை...'
ஹரிஷா ஒரு பாக்ஸர். ஸ்டேஜில் ஏறி இவர் பாக்ஸிங் செய்யத் தொடங்கினால் அதிரடியாக எதிரியின் மீது குத்துகள் இறங்கும். மூன்று நான்கு ரவுண்டுகளிலேயே எதிரியை நாக்-அவுட் செய்துவிடுவார். இப்போது ஹரிஷா பாக்ஸிங் இல்லாத வேறொரு ஸ்டேஜிலும் ஏறி வருகிறார். அது வெஸ்டர்ன் டான்ஸ் ஆடும் ஸ்டேஜ்.
அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் அவரை ஒரு காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்:

""கிரிக்கெட், புட்பால் உள்பட பெரும்பாலான விளையாட்டுகள் குழுக்களாகச் சேர்ந்து விளையாடக் கூடியவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஒருவரின் தனித்திறமையை வெளிப்படுத்துகிற வகையிலான விளையாட்டாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தபோது எனக்கு பாக்ஸிங் மீது ஆர்வம் வந்தது.
"பெண்ணாக இருந்துகொண்டு பாக்ஸிங் எல்லாம் செய்யக்கூடாது' என்று அப்பாவும், அம்மாவும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரே பெண் என்பதால், அடம்பிடித்தப் பிறகு ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒத்துக் கொண்டதற்கு இன்னொரு முக்கியமான காரணம், பாக்ஸிங் கற்றுக் கொண்டால் பெண் தைரியமாக இருப்பாள் என்பதற்காகவும்.
விளையாடத் தொடங்கிய ஆரம்பத்தில் பயிற்சியாளர்கள் சிலரிடம் பயிற்சி பெற்றேன். இப்போது யாரிடமும் பயிற்சி பெறவில்லை. நானேதான் பயிற்சி செய்கிறேன். காலையில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரையும், அதேபோல மாலையில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரையும் பயிற்சி செய்கிறேன். பாக்ஸிங் செய்வதற்கு கை பலமும் கால் பலமும் அதிக முக்கியம். கால் பலத்திற்கு ஜாக்கிங்கும், கை பலத்திற்கு மணல் மூட்டையில் குத்தியும் பயிற்சி செய்கிறேன். மனப்பலத்திற்குத் தியானம் செய்வேன்.
பிரபல வீரர்கள் மோதுவதை சி.டி.யில் போட்டுப் பார்ப்பதுண்டு. ஆனால், அவர்களின் ஆட்ட முறைகள் எதையும் நான் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. இயல்பாக எனக்கு எப்படி மோத முடிகிறதோ அப்படித்தான் மோதுவேன். அதேசமயம் இக்கட்டான சிலநேரங்களில் அவர்களின் யுக்தி பயன்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் போட்டியில் மோதுகிறபோது முதல் சுற்றில் தடுப்பாட்டம்தான் ஆடுவேன். போகப்போகத்தான் அதிரடியாகத் தாக்குதல் தொடுப்பேன். இதுதான் என் யுக்தி. இதே யுக்தியை எல்லா ஆட்டங்களிலும் கடைப்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. எதிரில் விளையாடுகிறவர்கள் எப்படி விளையாடுகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல்தான் நாம் விளையாட முடியும். முதல் சுற்றிலேயே ஒருவர் அதிரடியாகத் தாக்கத் தொடங்கிவிட்டார் என்றால் அதற்கு தகுந்தாற்போல்தான் நாம் ஆட வேண்டியிருக்கும். அப்போது நாம் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்க முடியாது. அதற்காக நாம் அதிகமாக டென்ஷனாகவும் கூடாது. அதை எதிரில் விளையாடுகிறவர்கள் சாதகமாக்கிக் கொள்வார்கள். "கூலா'க இருந்துகொண்டே தாக்குதல் தொடுக்க வேண்டும்.
மேடையில் ஏறிய பிறகு நீயா? நானா? என்பதிலேதான் மனது குறியாக இருக்கும். குத்தும்போது அவருக்கு அடிப்பட்டுவிடுமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. குத்தி நாக்-அவுட் செய்வதற்காகத்தானே மேடையில் ஏறியிருக்கிறோம்?
இப்போது 65 கிலோ பிரிவில் நான் மோதுகிறேன். 2005-ம் ஆண்டு, ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற போட்டியிலும், மதுரையில் நடைபெற்ற போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். அப்போது 60 கிலோ பிரிவில் இடம்பெற்றிருந்தேன். தற்போது மாநில அளவிலேயேதான் சாதித்து வருகிறேன். போகப்போக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சாதிப்பேன்.
பாக்ஸிங்கில் எனக்கு எவ்வளவு ஆர்வமோ, அதைப்போல வெஸ்டர்ன் டான்ஸிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதையும் முறையாகக் கற்றிருக்கிறேன். அதிலும் புதியமுறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது'' என்கிறார் ஹரிஷா.
-பாக்ஸிங், டான்ஸ் இரண்டிலுமே நாக்-அவுட் உண்டு. பாக்ஸிங் செய்யும்போது ஹரிஷா நாக்-அவுட் செய்வது ஒருவரை... டான்ஸ் ஆடும்போது பலரை..!

Tuesday, February 12, 2008

வெளிச்சக் கதவுகள்




* உதடுகள் நீட்டி
உறைப்பைத்
தணித்துக் கொண்டன
நீ
தொடுகையில் மிளகாய்கள்

மிருகம் கலவாத
மோகமலர்களாய்
என்னை
மலர்த்துகிறது
உன்
மென் வருடல்கள்

உன்னால்
நேரும்
விபத்துகள்
திறக்கக் காத்திருக்கும்
வெளிச்சக் கதவுகள்.


* வானவில்லிலிருந்து
ஒரு
வண்ணத்தை
உருவியதுபோல
தேடுகிறேன்
அழகானச் சொற்களை

ஒரு
முறை
திரும்பிப் பாரேன்.


* விழுந்த
நட்சத்திரங்களைப்
பொறுக்கிக்கொண்டே
வந்தேன்
நீ
கூந்தல் தட்டுகிற
தாளத்தோடு செல்கிறாய்

மனப்புழுக்கத்தில்
சாளரம் சாத்துகிறது
தென்றலின் மனைவி

கடல் தாண்டி...
நிலம் தாண்டி...
ஓடிய வானம்
உன்னைத்
தொட்டு நின்றது.


* மின்னல்கள்
பதுங்கி ரசிக்கும்
தும்பியின்
சிறகுகளோடு நீ

உயிர்த்துக்கொள்ள
உவமைகள்
உன்னை
உட்கார அழைக்கின்றன

நீ
சூட நினைத்த நொடி
பூக்களைப்
பகையில் வைதன செடிகள்.


* உன்
பெயர்களிலுள்ள
எழுத்துக்களுக்கிடையே
உரிமைக்காக
நடக்கிறது
வெட்டு குத்து

என்
ஏக்கமூச்சுகளின்
இழைகளால்
உன்னுள்
வலை பின்னுகிறது
காதல் சிலந்தி

தெருவெங்கும்
நடந்து
காணுகிற கண்களிலெல்லாம்
நம்
வெட்கத்தை விதைப்போம்.


* தேனடைகளின்
ஒவ்வொரு
துளைதோறும்
நாம்

கைகளில்
சிக்காத காற்று
உயிர்களில்
கூடு கட்டுவதுபோல
காதலுக்கு
நாம்

விண்ணிலுமில்லை
இந்த
மண்ணிலுமில்லை
நம்
உள்ளத்தில் உலவும் சந்தோஷம்.