Tuesday, February 12, 2008

வெளிச்சக் கதவுகள்




* உதடுகள் நீட்டி
உறைப்பைத்
தணித்துக் கொண்டன
நீ
தொடுகையில் மிளகாய்கள்

மிருகம் கலவாத
மோகமலர்களாய்
என்னை
மலர்த்துகிறது
உன்
மென் வருடல்கள்

உன்னால்
நேரும்
விபத்துகள்
திறக்கக் காத்திருக்கும்
வெளிச்சக் கதவுகள்.


* வானவில்லிலிருந்து
ஒரு
வண்ணத்தை
உருவியதுபோல
தேடுகிறேன்
அழகானச் சொற்களை

ஒரு
முறை
திரும்பிப் பாரேன்.


* விழுந்த
நட்சத்திரங்களைப்
பொறுக்கிக்கொண்டே
வந்தேன்
நீ
கூந்தல் தட்டுகிற
தாளத்தோடு செல்கிறாய்

மனப்புழுக்கத்தில்
சாளரம் சாத்துகிறது
தென்றலின் மனைவி

கடல் தாண்டி...
நிலம் தாண்டி...
ஓடிய வானம்
உன்னைத்
தொட்டு நின்றது.


* மின்னல்கள்
பதுங்கி ரசிக்கும்
தும்பியின்
சிறகுகளோடு நீ

உயிர்த்துக்கொள்ள
உவமைகள்
உன்னை
உட்கார அழைக்கின்றன

நீ
சூட நினைத்த நொடி
பூக்களைப்
பகையில் வைதன செடிகள்.


* உன்
பெயர்களிலுள்ள
எழுத்துக்களுக்கிடையே
உரிமைக்காக
நடக்கிறது
வெட்டு குத்து

என்
ஏக்கமூச்சுகளின்
இழைகளால்
உன்னுள்
வலை பின்னுகிறது
காதல் சிலந்தி

தெருவெங்கும்
நடந்து
காணுகிற கண்களிலெல்லாம்
நம்
வெட்கத்தை விதைப்போம்.


* தேனடைகளின்
ஒவ்வொரு
துளைதோறும்
நாம்

கைகளில்
சிக்காத காற்று
உயிர்களில்
கூடு கட்டுவதுபோல
காதலுக்கு
நாம்

விண்ணிலுமில்லை
இந்த
மண்ணிலுமில்லை
நம்
உள்ளத்தில் உலவும் சந்தோஷம்.

No comments: