Friday, May 30, 2008

நடவு... நெறிப்படுத்தினால் அடவு!



"செக்கச் சிவந்தவளே கண்ணம்மா
எம்பக்கம் வந்து பேசினாக்க என்னம்மா
கண்சாட காட்டுற
காலில் கோலம் போடுற
தாவித்தாவி நடக்கற
தாவணிய முறுக்குற
பாத்துபாத்து பேசு கண்ணம்மா
பரிசம் போட வாயேன் செல்லமா'
- ஒரு கிராமிய நிகழ்ச்சியில் வேல்முருகன் பாடுகிறார். அந்தப் பாடலுக்குப் பறையடித்து ஆடுகிறார் அவர் மனைவி கலா.
கிராமியப் பாடலுடன் ஆடலையும் தரும் இந்த இசை ஜோடிக்கு மக்கள் மத்தியில் அதிக "வந்தனம்... வந்தனம்'.
திரைத் துறையிலும் குரல் பதித்து வரும் வேல்முருகனை ஓர் இசைவேளையில் சந்தித்தோம். ஓடை தண்ணீர் ஓட்டமாய் பேசினார்.

""ஆடு மாடு மேய்க்கப் போகிறபோது பாடுவது எனக்கிருந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இளையராஜா பாடல்கள், புஷ்பவனம் குப்புசாமி பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன். உடன் வருபவர்கள் பலர் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரிக்க இதுவும் ஒருவகையில் காரணம் என்று சொல்லலாம்.
முதலில் பிறர் பாடல்களை மட்டும் பாடி வந்தேன். புஷ்பவனம் குப்புசாமியின் "ராசாத்தி உன்னை எண்ணி' பாடலைப் பாடித்தான் என்னுடைய சொந்தவூரான விருத்தாசலத்தில் உள்ள முதனை அரசு பள்ளிக்கூடத்தில் படித்தபோது பரிசு வாங்கினேன்.
போகப்போக வயல், வரப்பு, ஆறு என ஒன்றுவிடாமல் எல்லாவற்றைப் பற்றியும் சொந்தவரி போட்டு பாடத் தொடங்கிவிட்டேன். எனக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணன் பெரியசாமிதான் வளர்த்தார். வேப்பங்கொட்டை பொறுக்கி விற்பதுபோன்ற சின்னச்சின்ன வேலைகள் செய்துதான் படித்தேன். கோயமுத்தூரில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரிகல் முடித்தேன்.
இதன்பிறகு இசைக் கல்லூரியில் கர்நாடக இசை பாடுவதற்குப் பயின்றேன்.கல்லூரிக் காலகட்டத்தின்போதுதான் என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கினேன். "இராணுவ வீரர்கள்' பற்றி நான் எழுதி, பாடிய பாடலுக்கு அப்துல்கலாம் உட்பட பலரின் பாராட்டுகள் கிடைத்தன. இதோடு என்னுடைய மனைவி கலாவையும் இங்குதான் சந்தித்தேன்.
கல்லூரியில் எனக்கு அவர் ஜூனியர். மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர். மூன்றாம் ஆண்டு நான் படித்தபோது அவர் இரண்டாம் ஆண்டு பரதம் கற்றுக் கொண்டிருந்தார். நட்பு ரீதியாகத்தான் இருவரும் பழகிக் கொண்டிருந்தோம். முதலில் அவர்தான் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார். அதுவும் என்னிடம்கூட சொல்லவில்லை. அவருடைய அப்பா அம்மாவிடம்தான் சொல்லியிருக்கிறார். அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான் என்னிடம் சொன்னார். நன்றாக யோசித்துக் கொள்ளுமாறு நான் சொன்னேன்.
அதற்கு அவர் இதில் யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அப்பா, அம்மா விரும்புவதுபோல என்ஜினீயரை மணந்து கொள்வதற்கு என்றைக்குமே விருப்பம் இருந்ததில்லை. இசை தெரிந்த உங்களோடு வாழவே விரும்புகிறேன். நாமிருவரும் இசை துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்றார். என்னுடைய அண்ணன் உதவியுடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இருவரும் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் செய்யத் தொடங்கினோம். இதுவரை 500க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். கிராமியப் பாடல் நான் பாட அதற்கு அவர் பரதமும் ஆடுவார், பறையடித்தும் ஆடுவார். பாட்டின் தன்மையைப் பொறுத்து ஆட்டத்தை முடிவு செய்வோம்.
கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டு கிராமியப் பாடல்கள் பாடுவதற்கு அதிக ஈர்ப்பே காரணம். கிராமியப் பாடல்களில் இருந்துதான் கர்நாடக இசையே வந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. இதைப்போலதான் பரதநாட்டியமும். நாற்று நடுகிற பெண்கள் நடவின்போது நாற்றை மிதித்துவிடக்கூடாது என்பதற்காகக் காலைத் தூக்கி வைத்து நடுவார்கள்.
பரதம் கற்றுக் கொள்கிறவளுக்கு அடிப்படை பயிற்சி அடவு. நடவை ஒத்த ஒன்றுதான் அடவும். நடவை நெறிப்படுத்தினால் அடவு. இதனால் கிராமியப் பாடல்களுக்கு பரதம் ஆடுவது ஒன்றும் தவறில்லை. என்னுடைய மனைவி பறையாட்டத்தையும் முறைப்படிதான் கற்றுக்கொண்டு ஆடுகிறார்.

கிராமியப் பாடல் பாடுகிறவர்கள் சினிமாக்களில் பாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. குத்துப் பாடல் வகையிலான பாடல்களையே பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் கிராமியப் பாடல்கள் வளர்வதற்கு இது சிறிதளவிற்கேனும் உதவுகிறது என்று நினைக்கிறேன்.
சினிமாவில் பாடுவதன் மூலம் கிடைக்கிற அறிமுகத்தில் கிராமியப் பாடல்கள் பாடுவதற்கு நிறைய பேர் அழைக்கிறார்கள். வரவேற்பும் கிடைக்கிறது.
கிராமிய இசை மட்டும் அல்ல, அழிந்து வருகிற பல கலைகளைச் சினிமாவில் பயன்படுத்தத் துவங்கினால் அந்தக் கலை வளர்வதற்கு வாய்ப்பாகத்தான் அமையும். இதன் காரணமாகத்தான் நான் சினிமாவில் பாடுகிறேன்.
தற்போது "சுப்பிரமணியம்' என்ற படத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில், யுகபாரதியின், "மதுரை குலுங்க..குலுங்க.. நீ நையாண்டி பாட்டு பாடு.. புழுதி பறக்கபறக்க நீ போடாத ஆட்டம் போடு' வரி வரும் திருவிழா பாடல் பாடியிருக்கிறேன். இதைப்போல "வெடிகுண்டு முருகேசன்' படத்தில் தினா இசையில் பசுபதியுடன் சேர்ந்து ஒரு பாடலும் பாடியிருக்கிறேன். இரண்டும் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்து கிராமிய இசையை வளர்க்க உதவும் என்று நினைக்கிறேன்.
கிராமியக் கலைகள் அழிந்துவிடாமல் இருக்க அரசாங்கம் எடுக்கும் முதன்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டியது பள்ளியில் இருந்தே எல்லாக் கலைகளையும் சொல்லிக் கொடுப்பதுதான். அப்படிச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களாக மூத்த கலைஞர்களைப் போடுகிறபோது கலையும் வாழும். கலைஞர்களும் வாழ்வார்கள்'' என்கிறார் வேல்முருகன். அருகிலிருக்கும் அவர் மனைவியின் கொலுசு "ஆம்' என்கிறது.

Monday, May 19, 2008

மானாட...மயிலாட... சண்டை எப்போது?


"டான்ஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படுவதைவிட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும்'' என்கிறார் கலா. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள்!


"புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்து 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ள அவரை ஏவி.எம். ஸ்டூடியோவில் சந்தித்தோம்.


"ஆடத் தெரியாதவன் அரை மனிதன்' என்பதுபோன்ற ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளதே?
இது வரவேற்கத்தக்க நிலை. சினிமா பாட்டுக்கு ஆடுவதை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிற நிலைதான் முன்பு இருந்தது. அடியோடு இப்போது மாறியிருக்கிறது. இதற்கு ஊடகங்களின் உறுதுணை முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. பரதம் ஆடுகிறவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

வழிபாட்டுக்கு உரியவர்கள்போல் டான்ஸ் மாஸ்டர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். பெரிய நடிகர், நடிகைகளெல்லாம் கூட அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறார்களே?
எல்லோரும் இதைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது தவறில்லை. குருவிற்கு வணக்கம் செலுத்துவது போன்ற செய்கைதான். ஒவ்வொரு நாளும் நான் வீட்டிலிருந்து புறப்படும்போது நாட்டியக் கடவுளான நடராஜர் காலைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் கிளம்புவேன். அவருடைய நாட்டியத்தில் பாதியையாவது நான் கற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். அதேபோலத்தான் டான்ஸ் மாஸ்டர் காலைத் தொட்டு வணங்குகிறவர்களும் நினைக்கிறார்கள்


நடிகர், நடிகைகளால் போற்றப்பட்டாலும், பரதம் சொல்லிக் கொடுக்கிறவர்களுக்கு நிகரான மரியாதையை திரைப்படத் துறையில் நடனம் அமைக்கும் மாஸ்டர்களுக்கு சமூகம் கொடுக்கவில்லையே?
உண்மைதான். ஆனால், இந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பார்க்கப் போனால் பரதம் உட்பட எல்லா ஆட்டங்களையும்விட சினிமாவிற்கு ஆடுவதுதான் மிகவும் சிரமமானது.


மெல்லிசை பாடல்கள் போய் துள்ளல் இசை பாடல்களாக ஆனது போல சினிமா ஆட்டங்களும் அதிரடியாக இருக்கிறது. ஆட்டத்திற்கேற்ப பாட்டு மாறியதா? அல்லது பாட்டிற்கேற்ப ஆட்டம் மாறி இருக்கிறதா?
இசை, பாட்டிற்கேற்ப மாறிய மாற்றம்தான். கால மாற்றத்திற்கேற்பதான் எல்லாமே இருக்கும்.


ஆட்டம் என்ற பெயரில் பாடல்களில் ஆபாசம் வெளிப்படுத்துவதற்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் காரணம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?
பாடலைப் பொறுத்தவரை டான்ஸ் மாஸ்டர்கள் பங்களிப்பு அதிகம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆபாச ஆட்டங்களுக்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் பொறுப்பு என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இசை, பாடலுக்கேற்ப நாங்கள் ஓர் ஆட்டம் வைத்திருப்போம். அதை அப்படியே இயக்குநர்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொல்லமுடியாது. அவர்களுடைய விருப்பத்திற்கே கமர்ஷியலாக மாற்றி அமைக்கச் சொல்லுவார்கள்.
உதாரணத்துக்குச் சொல்கிறேன். "கொக்கரக்கர கிரிகிரி' பாடல். அதற்கு நான் ஒரு வகையில் நடன அசைவுகளை அமைத்திருந்தேன். அது இயக்குநருக்குப் பிடிக்கவில்லை. மாற்றி அமைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியாக மும்தாஜ் காலைத் தூக்கி வைக்க, அவர் காலுக்கு அடியில் பிரசாந்த் புகுந்து வருவதுபோல மாற்றி அமைத்தேன். உடனே ஓ.கே. ஆகிவிட்டது. இந்தப் பாடலுக்கு வெகுவான பாராட்டு கிடைத்தது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.


கதாநாயகிகளைப் போல கதாநாயகர்களும் ஆடவேண்டும் என்பதாக மாறிவிட்டது. இதனை மாற்றியமைத்த பெருமை யாரைச் சாரும் என்று நினைக்கிறீர்கள்?
காலமாற்றத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்காக இப்போதுதான் நாயகர்கள் ஆடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. சந்திரபாபு சார், நாகேஷ் சார், ரவிச்சந்திரன், சிவக்குமார் என பலர் டான்ஸ் செய்திருக்கிறார்கள். இப்போது நகைச்சுவை நடிகர், வில்லன், கதாநாயகன் என எல்லாருமே ஆடவேண்டிய கட்டாயம் இருக்கிறது.


நீங்கள், உங்கள் தங்கை என ஒரு சிலரே இந்தத் துறையில் நிலைத்து இருக்கிறீர்கள். பெண்கள் இந்தத் துறைக்கு அதிகம் வருகிறார்களா?
பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.


ஒரு பாடலுக்கான ஆட்டத்தை நடிகர்களை வைத்து தீர்மானிப்பீர்களா? அல்லது தீர்மானித்ததற்கேற்ப நடிகர்களை ஆட வைப்பீர்களா?
நடிகர்களுக்கேற்ப தீர்மானிப்பதுதான் என்னுடைய ஸ்டைல். அப்படித் தீர்மானித்தால்தான் நடிகர்களால் ஆடமுடியும். பிரபுதேவா ஆட்டத்தை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. யாராருக்கு எப்படி ஆடமுடியுமோ அப்படிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.


நன்றாக ஆடக்கூடியவர்களாக நீங்கள் கருதும் நடிகை, நடிகர்?
நடிகை சிம்ரன். பிரமாதமா ஆடுவா. ரம்பா ஹிப் மூவ்மெண்ட் சூப்பரா செய்வா. உணர்ச்சியை வெளிப்படுத்தி ஆடுவதில் ஜோதிகா. நடிகர்களை இப்படி வரையறுக்க முடியாது. விஜய், அஜித், சூர்யா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்.


"மானாட.. மயிலாட' நிகழ்ச்சியில் ஆர்த்தியைச் சேர்க்க எப்படி முடிவு எடுத்தீர்கள். முன்பே அவர் ஆடுவார் எனத் தெரியுமா?
குண்டாக இருப்பதற்கும் ஆடுவதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் யார் வேண்டுமானாலும் ஆடலாம். ஆர்த்தியைத் தேர்வு செய்தபோது, "அவர் எப்படி ஆடுவார்?' என்றுதான் எல்லோரும் கேட்டார்கள். ஆனால், இப்போது பார்க்கிறபோது அவரைப்போல உணர்ச்சியை வெளிப்படுத்தி ஆடுவதற்கு யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரபு அண்ணன் குண்டாகத்தான் இருக்கிறார். அவர் ஆடவில்லையா?... குஷ்பு. என்ன ஆட்டம் ஆடுகிறார். எனவே ஆடுவதற்கு மனம்தான் தேவை.


இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெறும் ஜட்ஜ்களிடையே சண்டை நடப்பது இப்போதைய ட்ரென்ட். உங்கள் மூவரிடையே எப்போது சண்டை?
டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் இப்படிச் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக் காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!


ஜட்ஜ் என்றால் கறாராக இருக்க வேண்டாமா? இரக்கப்பட்டுக் கொடுப்பது போல பத்து மதிப்பெண்களை ரம்பா அடிக்கடி வழங்குகிறாரே?
ஷூட்டிங்கிற்கு வருவது வீட்டிற்குப் போவது என்று வளர்ந்த பெண் ரம்பா. அவருக்கு வெளி உலகம் தெரியாது. யாரும் தோற்பதை அவர் விரும்பவில்லை. தோற்றுப் போகிறவர்களுக்குக்கூட அவருடைய சொந்த செலவில் பரிசு கொடுப்பவர். வேறு யாரும் அப்படிக் கொடுப்பதில்லை. இப்போது கறாராகத்தான் கொடுக்கிறார்.