Friday, December 28, 2007

காபி பார்களும் காதல் போர்களும்!



சண்டைக்கோழிகளைத் தேடி புறப்பட்டோம். சண்டைக்கோழி என்றதும் உங்கள் மனம் ஒரு மைதானத்தில் போய் நிற்கும். "கூட்டம் கூடி நின்று கரவோஷம் எழுப்பும். கால்களில் கட்டியிருக்கும் கத்திகளோடு கோழிகள் இரண்டு சண்டையிட்டுக் கொள்ளும்.
இறுதியில் ஏதாவது ஒரு கோழி, மற்றொரு கோழியைக் குத்திக் கிழித்துக் கொல்லும். அந்தக் கோழி வென்ற கோழியாகக் கருதப்படும் ' -இப்படி யாரேனும் நினைத்தால் அது சுத்தமா தப்பு. இதுல நாங்க சொல்லுற சண்டைக்கோழிங்களே வேற.... இந்தக் கோழிங்க போடுறது காதல் சண்டை.
காஃபி பார்களும், கடற்கரை ஓரங்களும் இந்தக் கோழிங்க நடத்தும் காதல் போர்களின் காவியக் களங்கள்!

சட்டு சட்டுன்னு நிறம் மாறுற வானம் மாதிரி இந்த இளசுங்க சண்டையிலிருந்து சமாதானத்துக்கும் சமாதானத்தில இருந்து சண்டைக்கும் தாவுதுங்க. நேரிலும் செல்போனிலும் செல்லச் சண்டையின் சிணுங்கல்கள் கொலுசு ஒலிக்கிற மாதிரி கேட்டுக்கிட்டே இருக்குது. எல்லா ஊடலும் எதுக்கு. அது கூடலுக்குத்தானே. ஊடல்தானே காதலுக்கு ஊட்டம் தர்ற எரு.
இப்படி சில சண்டைக்கோழிகளைத் தேடிபோய் இதுங்களின் சண்டை ரகசியங்களைக் கிளறுனோம். தேடிப் போன சண்டைக்கோழிங்க வழக்கம் போல காபி பார்லர்கள்; பீச், இளமை ததும்பும் பிளாசாக்களிலேதான் மாட்டின.
""சண்டைக்கோழி..சண்டைக்கோழி...கொஞ்சம் தடவு உன் சொந்தக் கோழிதான்.''என்று பாடுகிற காதல் இந்தக் கோழிகள் என்ன
சொல்லுதுன்னு கேளுங்களேன்....

எம்.திருசங்கு, வனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பிசினஸ் செய்றேன். மூணு வருஷமாக லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். சண்டையில்லாம காதல் இல்லை. சண்டை இருந்தாதான் காதலே இனிக்கும். எங்களுக்குள்ள சண்டை அடிக்கடி வரும். எங்களுக்குள்ள வர்ற முக்கியமான சண்டைன்னு பார்த்தீங்கனா, அவுங்க பிரண்ட்ஸ்கிட்ட நான் பேசுனா சண்டைப் போடுவாங்க.(ரொம்ப வழிவீங்களாக்கும்), அதே போல என் ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசுனாலும் சண்டை வரும். இது எங்களுக்குள்ள வர்ற சின்ன சண்டை. சில காதலர்களுக்குள்ள பெரிய சண்டையும் வர்றதுண்டு.
முதல்ல என்ன சாதி ன்னு சொல்லாம லவ் பண்ணிடுவாங்க. அப்புறம் ஒவ்வொருத்தரும் வெவ்வேறு சாதி இருக்கிறப்ப..தங்களுடைய சாதியைப் பெரிசா பேசிக்கிட்டு சண்டைப் போட்டுப்பாங்க. இப்படிச் சண்டை போட்டுக்கிட்டாலும், இந்தச் சண்டையெல்லாம் கொஞ்சம் நேரத்துக்குத்தான் நீடிக்கும். ஐந்து நிமிஷத்துல மறந்துபோயிடும். சண்டை வருகிற காதல்தான் உண்மையான காதல்னு நான் நினைக்கிறேன். சண்டையில்லாத காதல் போன்-லெஸ் காதல் போல.

உமாசங்கர்
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
ஒன்பது வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நான் லவ் செய்யிற பொண்ணு எங்க சொந்தக்கார பொண்ணுதான். ஆனாலும் எங்க ரெண்டு பேரு வீட்டிலையும் ஒத்துகலை. லவ் பண்ணுற பொண்ணு பி.பி.ஏ படிச்சிருக்கு. நான் படிக்கல.
அதனால ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் மேரேஜ் பண்ணனும்னு ஆசை. அவர்கள் சம்மதம் வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறோம். நாங்க காதலிச்சி ஒன்பது வருஷமாகிவிட்டது. பத்தாவது வருஷம் பெத்தவங்க ஒத்துக்கிறாங்களானு பார்ப்போம். இல்லைன்னா நாங்களே கல்யாணம் பண்ணிப்போம். இத்தனை வருஷமா லவ் பண்ணுறோம் எங்களுக்குள்ள சண்டை வர்றாமயா இருக்கும். அடிக்கடி சண்டை வரும். சண்டைதான் காதலை வளர்க்கும். இதுக்குதான் சண்டை வரும்னு சொல்லமுடியாது. சின்ன விஷயத்துக்கும் வரும். சில்லரை விஷயத்துக்கும் வரும். சண்டை எந்த விஷயத்துக்காக வந்தாலும் காதலை வளர்க்கும் என்பது மட்டும் நிச்சயம்.

தேவி, கண்ணன்
""சண்டை நான்தான் அடிக்கடி போடுவேன். இவுங்க 4 மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு பஸ்ஸ்டாண்டுல நிக்க சொல்லிடுவாங்க. நான் நிப்பேன் நிப்பேன் 6 மணிக்கு மேலதான் வருவாங்க. இதே லவ் பண்ணுன காலத்தோட ஆரம்பத்துல பார்த்துங்கீன்னா 4 மணிக்கு வர்றேன்னா 3 மணிக்கே வந்து நிப்பாங்க. இப்ப ஏன் லேட்டா வர்றீங்கன்னு கேட்டு வம்பு வளப்பேன். இதுபோல சின்ன சின்னச் சண்டைதான் வருமே ஒழிய பெரிய பெரிய சண்டையெல்லாம் வர்றாது.
நான் சண்டை போட்டாலும், என்னைச் சமாதானம் பண்ணுறதுக்கு, சினிமாவுக்குப் போலாமா? பீச்சிக்கு போலாமா?ன்னு கேட்டாவது அல்லது ஏதாவது ஜோக் அடிச்சாவது சமாளிப்பாங்க. அப்ப கிடைக்கிற சந்தோஷம் இருக்கே. அதைவிட பெரிய சந்தோஷம் இருக்கிறதா எனக்குத்
தெரியல.

காஞ்சனா, ரமேஷ்
சண்டை வர்றாத நாளே இல்லைன்னு சொல்லலாம். இன்னைக்கு வெளியில அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லுவாங்க. ஆனா, வேலை இருக்குன்னு அழைச்சிட்டு போகமாட்டாங்க. அதேசமயம் அவுங்க வீட்டு விஷயமா ஏதாவது போகணும்னா கரெக்ட் டயத்துக்குப் போயிடுவாங்க. சில நேரத்துல லீவு கூட போடுவாங்க. ஆனால எனக் காக ஒரு நாள் கூட லீவு போடமாட்டாங்க. எனக்காக லீவு போடணும்னா அப்பதான் பாஸ் திட்டுவாரு... லீவு எடுக்கமுடியாது..
சம்பளத்தைப் பிடிச்சிருவாங்க...அப்படி இப்படின்னு கதை அளப்பாங்க. இது எனக்குப் பிடிக்காது.
அதுதான் எங்களுக் குள்ள வர்ற சண்டை. கோபமா சண்டைப் போடுறேனே.. அவரா வந்து சமாதானம் செய்வாரா? அது செய்யமாட்டாரு. "உனக்கு அறிவில்ல... உங்க அப்பனா கம்பெனி கட்டி விட்டிருக்கான்னு கேட்டுட்டு' விட்டுடுவாரு.. இப்ப டியே கொஞ்சம் நேரம் போகும். அவர பாக்க பாவமா போயிடும்.
அப்புறம் நானே தான் போயி பேசுவேன்''

No comments: