Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள்! (1)


அலுவலக அரசியல்

நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் மகள் அழுது கொண்டிருந்தாள். விவரம் விசாரித்தபோது, "தன் அலுவலகத்தில் ஆண்கள் செய்கிற அரசியலால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை. இனிமேல் வேலைக்குச் செல்லப்போவதில்லை.'' எனக் கூறி அழுதாள். இதைக் கேட்டதும் எனக்கு வேதனை கலந்த சிரிப்புதான் வந்தது.இதன்பின்னர், அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு, "இது கோட்டை அலுவலகங்கள் முதல் கொத்தவால்சாவடிக் கடைகள் வரை நடக்கிற அரசியல்தான். வீதியில் செல்கிறபோது ஓரிடத்தில் பாம்பைக் கண்டுவிட்டோம் என்பதற்காக மறுமுறை அவ்விடத்திற்குச் செல்லாமல் இருக்கமுடியுமா? என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பணிக்குச் செல்!' சுதந்திரம் வாங்கும்போது பெண்களுக்கும் சேர்த்துதான் வாங்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டபோது பெண்களுக்கும் சேர்த்துதான் வழங்கப்பட்டது. இதனைப் புரிந்துகொண்டு சீர் நடை போட்டர்வர்கள்தான் கல்பனா சாவ்லா, கிரண்பேடி போன்றோர். ஆண்களின் அரசியலைக் கண்டு அஞ்சி ஒதுங்கியிருந்தால் அவர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?'' என்று கூறி அவளைத் தேற்றினேன்.இந்நிகழ்வுக்கு நேர் எதிரான கருத்துடைய இளைஞன் ஒருவனைச் சந்தித்தேன். அவன் சொன்னான்: "எங்க பார்த்தாலும் பெண்கள் ராஜ்யம்தான். ஆண்களெல்லாம் புடவைதான் கட்டணும் போலிருக்கு...'' எனப் பெண்கள் குறித்து அவன் கொண்டிருந்த கீழ்த்தரமான மதிப்பீடுகளைக் கூறினான்."போதும்' என்பதுபோல சைகை செய்துவிட்டு, "ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடத்தைப் பிடிப்பதும்; தேர்ச்சி அதிகம் பெறுவதும் பெண்களே! திறமை, அறிவு, கடின உழைப்பு இல்லாமலா அவர்கள் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்?'' என்று கேட்டேன். அவனிடமிருந்து பதில் வரவில்லை. இந்த ஆண், பெண் அரசியலைவிட இன்னும் மட்டரகமான அரசியல் எல்லா அலுவலங்களிலும் நடக்கிறது. கட்சி நடத்துகிற அரசியல்வாதிகள், அலுவலக அரசியல்வாதிகளிடம் சிறப்புப் பயிற்சிக்கே செல்லலாம்.எல்லா அலுவலகங்களிலும் ஹிட்லர் பட்டமோ, முசோலினி பட்டமோ பெற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஹிட்லர் பட்டம் பெற்றவர்களோ அல்லது ஹிட்லர் பட்டம் பெற்றவர்களைக் கவிழ்ப்பதற்காக அணி அமைத்தவர்களோ செய்யும் அரசியல் செயல்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை. அவர்கள் கையாளுகிற யுக்தி } எதிரியை முதலாளியிடம் "போட்டுக் கொடுத்தல்', இல்லாத ஒன்றைத் "திரித்துக் கூறல்'. இத்தகைய அரசியலால் அதிகம் பாதிக்கபடுவது அப்பாவிகள். கலவரப்பகுதியில் மாட்டிக்கொண்ட குழந்தைகள்போல் அப்பாவிகள பரிதவிக்கிறார்கள். இப்படிச் அரசியல் செய்வதால் எவ்வித தனிப்பயனும் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை.உண்மையில் அலுவலகங்களில் அரசியல் செய்பவர்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்: (அ). தகுதியற்ற ஒருவர் எப்படியோ உயர் பதவியை எட்டிப்பிடித்து இருப்பார். அந்தப் பதவியைத் தக்க வைக்க, அவர் தகுதி உள்ளவர்களை எதிரியாகக் கொண்டு அரசியல் செய்வார்.(ஆ). எல்லாத் தகுதியும் உடையவராக இருப்பார். அவருக்கு என்ன பயமெனில் தம்மைவிட எவரும் வல்லவராக வந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அரசியல் செய்வார்.(இ). அலுவலகத்திற்குப் புதிதாக வந்து அனுபவக்குறைவு உடையவராக இருப்பார். அதேவேளையில் வேகமாக முன்னேற விரும்புவார். அதன்காரணமாக குறுக்கு வழியில் செல்ல அரசியல் செய்வார்.(ஈ). திறமை மீது சிறிதும் நம்பிக்கையற்று அதன் காரணமாக அரசியல் செய்பவர்கள்.(உ). மேலே கண்ட நால்வகையினராலும் பாதிக்கப்பட்டோ அல்லது அவர்களிடமிருந்து தப்பிக்கவோ சிலர் அரசியல் செய்வர்.ராஜ சூழ்ச்சியோடு ஐந்து வகையினரும் என்னதான் அரசியல் செய்தாலும் திறமை உள்ளவர்களைச் சூரியன்போல் மறைத்திட இயலாது. போட்டி உலகில் திறமையே பிதாமகன். அதன்மூலமே எல்லோரையும்விட முதன்மையான மனிதனாக வரமுடியும். மரத்திலிருந்து விழுந்த ஆப்பிளை எல்லோரும் எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஐசக் நியூட்டன்தான் புவிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். தனித்திறன் உடையோர் என்றும் தோற்றுப் போக மாட்டார்கள். திறமை மீது நம்பிக்கை வையுங்கள். பொதுவாக அரசியலைச் சாக்கடை என்பார்கள். அந்தச் சாக்கடை அலுவலகங்களிலும் ஓடாமல் அணை கட்டுங்கள்.

No comments: