Friday, December 14, 2007

உயிர் காக்கும் உன்னதப் பணி!



"எங்கிட்ட ரெண்டு பொண்ணுக இருக்கு. அங்கவை... சங்கவை. கட்டிக்கிறதா இருந்தா... கட்டிக்குங்க. பழகுறதா இருந்தா... பழகிக்குங்க.''
கறுப்பாக இருக்கும் பெண்களைக் காட்டி பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா "சிவாஜி' படத்தில் செய்யும் நகைச்சுவை இது.

சமூகத்தைச் சீர்திருத்துபவராகக் காட்டப்படும் சிவாஜிக்கு ஏனோ கறுப்புநிறப் பெண்களைப் பிடித்ததாய்க்கூட படத்தில் காட்ட மறந்துவிட்டனர்.
கறுப்பு நிறம் பிடிக்காவிட்டால் போகட்டும். கறுப்புக் காகங்கள் நமக்குச் சொல்வதென்ன?

"எங்ககிட்ட ரெண்டு குணம் இருக்கு. நல்லவை. அல்லவை. நல்லவையைக் கைப்பிடி. அல்லவையைக் கைவிடு' என்று சொல்கின்றன.

நல்லவைக்கு உ - ம்: ஒருபிடிச் சோறு சிதறிக் கிடந்தாலும் ஊர் முழுவதும் உள்ள காகங்களை அழைத்துக் கொண்டு உண்ணுவது.

அல்லவைக்கு உ-ம்: ஒரு காகம் ஏதோ விபத்தில் அடிபட்டுக் கிடந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கூடி நின்று ஒப்பாரி வைப்பது. அவற்றால் ஒன்றும் செய்யமுடியாது என்பது உண்மை நிலை.

ஓர் இடத்தில் வாகன விபத்து நடக்கிறதென்றால், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சையை யாராவது செய்கிறார்களா? இல்லவே இல்லை. காகங்கள்போல கூடி நின்று வேதனையோடு எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகிறார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இதுபோன்ற செய்கைகளுக்கு மனிதநேயம் குறைந்து வருவது ஒரு காரணம் என்றாலும் மிக முக்கியமான காரணம் முதலுதவி சிகிச்சை குறித்து பெரும்பான்மையோருக்குத் தெரியாததுதான்.

இந்தக் குறையைப் போக்க உள்ள அமைப்புதான் ராஷ்டிரிய லைஃப் சேவிங் சொசைட்டி. இதன் கிளை தற்போது தமிழகத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரிப் பெண்கள் பலர் வாலண்டியர்சாக உள்ளனர். இதன் தமிழகச் செயலாளராக இருப்பவர் வாசவி சுந்தரம். சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் பயோடெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அமைப்பின் செயல்பாடு குறித்து அவர் சொன்னவை:

"லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராயல் லைஃப் சேவிங் சொசைட்டியின் இந்திய கிளைதான் ராஷ்டிரிய லைஃப் சேவிங் சொûஸட்டி. 98-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இதைத் தொடங்கி நடத்துபவர் அட்மிரல் பி.டி.சர்மா. பூணாவைச் சேர்ந்தவர். தற்போது பல்வேறு மாநிலங்களிலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மும்பை ரயில் வெடிகுண்டு விபத்தில் பாதிக்கப்பட்ட பலரின் உயிரை பிரவீன் சித்திக் என்ற வாலிபர் காப்பாற்றியதற்காகப் பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்த வாலிபர் ராஷ்டிரிய லைஃப் சேவிங் சொசைட்டியில் பயிற்சி பெற்றவர்தான். இதைப்போல பல நிகழ்வுகளில் ராஷ்டிரிய லைஃப் சேவிங் சொசைட்டியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்த அமைப்பு குறித்து கேள்விப்பட்டபோது தமிழகத்திலும் இதைத் தொடங்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு சர்மாவிடம் பேசினேன். 25 பேர் சேர்ந்து பயிற்சி பெறுவதாக இருந்தால் நானே நேரில் வந்து சொல்லித் தருகிறேன் என்றார். இதனையடுத்து, நீச்சல் வீராங்கனைகள் அபூர்வா, ஆர்த்தி உட்பட 25 பேர் அவரிடம் முதலுதவி சிகிச்சை பயிற்சி பெற்று தற்போது இந்த அமைப்பைத் தொடங்கி உள்ளோம்.

ஒருவர் விபத்தில் சிக்கிக்கொண்டால் முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதை ஒரு கட்டமாகவும், பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இரண்டாம் கட்டமாகவும் சொல்லித் தருகிறோம்.

உதாரணமாக விபத்தில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார் என்றால் அந்த இடத்தில் இருக்கும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். இரத்தம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். சுவாசிக்க முடியாத நிலையில் இருப்பார்களேயானால் அவர்களுடைய வாயில் நம் வாயை வைத்து ஊத வேண்டும். படங்களில் குளத்தில் விழுந்த கதாநாயகியை கதாநாயகன் ஊதி காப்பாற்றுவதுபோல் எல்லாம் ஊதினால் காப்பாற்ற முடியாது.
பாதிக்கப்பட்டவரின் கழுத்தை நன்கு உயர்த்தி, வாயை நன்றாகத் திறந்து, காற்று நுரையீரலை நிறைக்கிற வரை ஊத வேண்டும். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது ஏனோதானோ என்று வாரிபோட்டு எடுத்து சென்றால் சில எலும்புகளை இழக்க வேண்டி இருக்கும். இது உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கலாம். அதனால் கையை காலை எப்படி வைத்து தூக்கிச் செல்லவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

முதலுதவி சிகிச்சை என்பது ஏதோ விபத்தில் காயமானவர்களை மட்டும் காப்பாற்றும் செயல் இல்லை. வீட்டில் இருக்கிறபோதுகூட பல்வேறு நிகழ்வுகள் நடக்கலாம். தேள் கொட்டலாம், பாம்பு தீண்டலாம், மின்சாரத்தில் சிக்கிக் கொள்ளலாம். இதுபோன்ற நேரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கிறோம். இதைப்போல கிணறு, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் விழுந்தவர்களையும் காப்பாற்றுவதற்குப் பயிற்சி கொடுக்கிறோம்.

நீர்நிலைகளில் விழுந்தவர்களைக் காப்பாற்றுகிற பயிற்சி நீச்சல் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான். அதுவும் எடுத்தவுடனேயே நீரில் குதித்துக் காப்பாற்றுங்கள் என்று சொல்வதில்லை. ஒரு பெரிய குச்சியைக் கொண்டு விழுந்தவரைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி இழுத்துப் பாருங்கள், டியூப் போட்டு அதைப் பிடித்து கொண்டு வரச் செய்து பாருங்கள். இந்த முயிற்சியிலேயும் முடியாத பட்சத்தில் நீந்தி காப்பாற்றச் சொல்கிறோம். அப்போது பாதிக்கப்பட்டவரை எப்படி வைத்துகொண்டு நீந்தி வரவேண்டும் என்றும் சொல்கிறோம்.

இந்த அமைப்பைத் தொடங்கிய பிறகு நாங்கள் தெரிந்து கொண்ட ஓர் உண்மை என்னவென்றால் முதலுதவி சிகிச்சை அளித்து ஒருவரை எடுத்துச் சென்றால்கூட "போலீஸ் கேஸ்' என்று மருத்துவமனையில்
பார்க்காமல் இருக்கிறார்கள். இதனாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது'' என்கிறார் வாசவி.

முதல் சிகிச்சையை மருத்துவமனையில் இருந்தே தொடங்குங்கள்!

No comments: