Wednesday, August 19, 2009

பாலை, மழை, காளான்


பார்த்துப் பார்த்து
கால்நகங்களின் அழுக்கு நீங்கத் தேய்த்து
சிலீரிட நன்றாய்க் குளிக்க
எதிர்படுகிறவர்களிடமெல்லாம்
தாராளமாய்ச் சொற்களைக் கொடுத்து வைக்க
வெறிப்பற்களால் குதறிக் கொண்டு
நாய்கள் போடும் சண்டையெதையும்
அலுவலகக் கோப்புகளில் பார்க்காமல் கடக்க
துயரை பின்னால் நிறுத்திக் கொண்டு வராத
மகிழ்ச்சியை விரல் பிடித்து நடக்க
சென்றும் செல்லாமலும்
நிலைகொண்ட காட்சியோடு
வெறித்து, பிதுங்கிக் கிடக்கும்
விபத்துக்கண்களெதையும் வழிகளில் காணாமல் வீடு திரும்ப
அருவியில் குளிக்க வைக்கும் புத்தக வரியிலிருந்து
அப்படியே நெட்டித் தள்ளி பாறையில் சிதறவிடும்
இடையூறற்று வாசித்துக் குளிர
புகார்கள், கோரிக்கைகளால்
புடைத்திருக்காத அவள் புருவங்களைக் காண
அவசரமின்றி பதற்றமின்றி
நெடுநேரம் நொறுங்கிப் புணர
நினைவு வௌவாலெதும் கொத்தி எழுப்பாது
பற்றாக்குறையற்று தூங்க
வாயில் வழுக்கியோடும் அல்வாதுண்டுபோல
புதுச் சூரியனுக்குள் கால் பதித்துப் போக -
என்றாவது வாய்க்கும்
அந்த மழைநாள்களின் வெள்ளத்தில்
எல்லாப் பாலைநாள்களும்
அடித்துப்போய்
காளான்களாய் முளைக்கின்றன.
நன்றி: உயிரோசை

Thursday, August 6, 2009

காட்ஸில்லா முட்டைகள்


மனவீதிகள்
தானே குலைத்துக் கொள்ளும் பொழுதில்
காற்றிலிருந்து வரும் காட்ஸில்லா
அந்த வீதிகளில் ஓடத் தொடங்கும்.
தானே எழுப்பிக்கொண்ட பிரம்மாண்டம்
தானே கற்பித்துக்கொண்ட நியாயம்
தானே கொடுத்துக்கொண்ட கையூட்டு
தானே ரசித்துக்கொண்ட திருட்டு
தானே திறந்து பார்க்கக் கூசும் இரகசியம்
தானே புணர்ந்துகொண்ட உவகை
தானே
தானே
தானே என்று நிர்மாணித்ததெல்லாம்
அதன் வால்பட்டு துகள்துகளாக உடையும்.
வீதிகள்
வளையவளைய
கடும் தோட்டாக்கள் தீரத்தீர
அசுரமாய் புனைதிகைப்பு சுட்டு விரட்ட
திருப்பிக்கொள்ளும் காட்ஸில்லா
வானூர்தியை லாவகமாகப் பிடித்து
கடித்து மென்று துப்பி மறையும்.
ராட்சத பாதச்சுவடைப் பின்தொடர்ந்து வந்து
மறதியை மீன்களாய்க் குவித்து
மறைவெளிகளிலிருந்து வரவழைத்து
ஒரு பொழுதில்
தந்திரங்கள் அதனைச் சுடலாம்
விரட்டி கடலில் விடலாம்.
ஆனால்
காற்றைப் புணரும் காட்ஸில்லாக்கள்
மூர்ச்சையடைவதில்லை.
காற்றெங்கும் முட்டைகளை நிரப்புகின்றன.
நன்றி :உயிரோசை