Thursday, November 17, 2011

நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா




ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன்
தமிழில்: ஆர்.சிவகுமார்


கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு நாள் அப்பா ஒரு படகுக்கு ஆர்டர் கொடுத்தார். அப்பா அது குறித்து மிகவும் தீவிரமான அக்கறையோடு இருந்தார். அந்தப் படகு பிரத்யேகமான அவருக்கு மட்டும் துவரை இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் கட்டைகளால் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், ஒரு ஆளுக்கான இடவசதி உடையதாகவும் அது இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அம்மா அது பற்றி மிகவும் புலம்பிக் கொண்டேயிருந்தாள். திடீரென்று அவளுடைய கணவன் மீனவனாகப் போகிறானா? அல்லது ஒரு வேட்டைக்காரனாக? அப்பா எதுவும் சொல்லவில்லை. எங்கள் வீடு நதியிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. அந்த நிதி ஆழமானது; அமைதியானது; நதியின் அந்தக் கரையைப் பார்க்க முடியாத அளவுக்கு அகலமாகவும் இருந்தது.

அந்தத் துடுப்புப் படகு அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா மகிழ்ச்சியையோ அல்லது வேறு எந்த உணர்ச்சியையோ வெளிக் காண்பிக்கவில்லை. எப்போதும் செய்வது போன்று தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு, எங்கள் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். உணவையோ
அல்லது வேறு எந்தப் பொருளையுமோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மா ஆர்ப்பாட்டம் செய்து கத்துவாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் அப்படி ஒன்றும் செய்யவில்லை. அவள் வெளிறிப் போயிருந்தாள்; உதட்டைக் கடித்துக் கொண்டாள். 'நீங்கள் வெளியே போவதானால் அங்கேயே தங்கி விடுங்கள். எப்போதும் திரும்பி வர வேண்டாம்' என்று மட்டுமே அம்மா சொன்னாள்.

அப்பா பதிலொன்றும் பேசவில்லை. என்னை மென்மையாகப் பார்த்துத் தன்னுடன் வரும்படி சைகை செய்தார். அம்மாவின் கோபத்திற்கு நான் பயந்தாலும், அப்பா சொன்னதை ஆர்வத்துடன் செய்தேன். இருவரும் ஒன்றாக நதியை நோக்கி நடந்தோம். 'அப்பா, என்னையும் உங்கள் படகில் அழைத்துப் போகிறீர்களா?' என்று கேட்குமளவிற்கு
நான் தைரியமும் கிளர்ச்சியும் அடைந்திருக்கிறேன்.

அப்பா என்னை ஒரு கணம் வெறுமனே பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து, ஒரு சைகையின் மூலம் திரும்பிப் போகச் சொன்னார். அவர் சொன்ன மாதிரி செய்வதாகப் போக்குக் காட்டிவிட்டு, அவர் திரும்பியதும், சில புதர்களுக்குப் பின்னால் குனிந்து என்னை மறைத்துக்கொண்டு அவரைக் கவனித்தேன். அப்பா படகில் ஏறி உட்கார்ந்து துடுப்பு
போட்டுக்கொண்டு போய்விட்டார். படகின் நீளமான அமைதியான நிழல் ஒரு முதலையைப் போல நீரின் குறுக்காக நழுவிச் சென்றது.

அப்பா திரும்பி வரவில்லை. அதேசமயம் வேறெங்கும் போய்விடவுமில்லை. நதியின் குறுக்காகவும், சுற்றியும் துடுப்பு போட்டுக்கொண்டும் மிதந்து கொண்டுமிருந்தார். எல்லோரும் திகைத்துப் போனார்கள். எது எப்போதும் நடந்ததில்லையோ, எது அநேகமாக நடக்க முடியாததோ அது நடந்துகொண்டிருந்தது. எங்கள் உறவினர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் இந்த முக்கிய நிகழ்வை விவாதிக்க வந்தனர்.

அம்மா அவமானமடைந்தாள். கொஞ்சமாகவே பேசினாள்; மிகுந்த அமைதியுடன் நடந்து கொண்டாள். அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் இதை வெளியே சொல்லவில்லை. கடவுளுக்கோ அல்லது யாரோ ஒரு புனிதருக்கோ கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத்தான் அப்பா இப்படிச் செய்வதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். அல்லது அவருக்குத் தொழுநோய் போன்ற ஏதோ ஒரு
நோய் இருந்ததனால், குடும்ப நன்மை கருதி வெளியேற முடிவு செய்து அதே சமயம் குடும்பத்திற்கு அருகிலேயும் இருக்கத்தான் அப்பா அப்படிச் செய்தார் என்றும் சிலர் சொன்னார்கள்.

இரவிலும் சரி, பகலிலும் சரி அப்பா நிலத்தில் கால் வைப்பதே கிடையாது என்று நதியில் பயணம் செய்பவர்களும், நதியின் இரண்டு கரைகளில் வசிப்பவர்களும் சொன்னார்கள். ஒரு கைவிடப்பட்டவர் மாதிரி தனியாக எந்த இலக்கும் இன்றி அவர் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டே இருந்தார். படகில் அப்பா மறைத்து வைத்திருக்கும் உணவு நிச்சயம்
சீக்கிரம் தீர்ந்துவிடும்; அதன் பிறகு நதியை விட்டு நீக்க வேறெங்காவது சென்று விடுவார்; அல்லது செய்த தவறுக்கு வருந்தி வீடு திரும்புவார் என்று அம்மாவும் உறவினர்களும் நம்பினார்கள். அவர் வேறெங்காவது சென்றுவிடுவது வீடு திரும்புவதை விடவும் கொஞ்சம் கெüரவமானது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

உண்மைக்கும் அவர்கள் நினைத்ததற்கும் எவ்வளவு தூரம்! அப்பாவுக்கு உணவு கிடைப்பதற்கு ஒரு ரகசிய வழி இருந்தது: அது நான்தான். ஒவ்வொரு நாளும் உணவைத் திருடி அதை அவருக்குக் கொண்டு சென்றேன். அவர் சென்றுவிட்ட முதல் இரவு நாங்கள் அனைவரும் கரையில் தீமூட்டி வழிபட்டு அவரை அழைத்தோம். நான் ஆழ்ந்த
வேதனையுற்றேன். மேலும் ஏதாவது செய்யவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். சோள ரொட்டித்துண்டு ஒன்று, ஒரு சீப்பு வாழைப்பழம், பழுப்புச் சர்க்கரைக் கட்டிகள் ஆகியவற்றுடன் அடுத்த நாள் நதிக்கரைக்குச் சென்றேன். நீண்ட நேரம் பொறுமையுடன் காத்திருந்தேன். பிறகு, தூரத்தில் தனியாக நதியின் இழைவான போக்கில், அநேகமாக பார்க்க முடியாத அளவுக்கு மெல்ல நகர்ந்து வரும் படகைக் கண்டேன். அப்பா படகின் ஒரு கோடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்ட பிறகும், என்னை நோக்கி படகைச் செலுத்தவோ அல்லது சைகை செய்யவோ இல்லை. அவரிடம் உணவைக் காண்பித்துவிட்டு, நதிக்கரையிலிருந்த ஒரு பாறையின் இடுக்கில் அதை வைத்தேன். மிருகங்கள், மழை, பனி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் உணவு அந்த இடத்தில்
பாதுகாப்பாக இருக்கும். நான் இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்தேன். நான் செய்து கொண்டிருந்தது அம்மாவுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் எளிதாகத் திருடக்கூடிய இடத்தில் அவள் உணவை வைத்தாள். வெளிக் காண்பிக்கப்படாத பல உணர்ச்சிகள் அவளுக்கு இருந்தன.

பண்ணையையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ள அம்மா தன் சகோதரனைக் கூப்பிட்டுக் கொண்டாள். ஆசிரியரை வீட்டிற்கே அழைத்து வந்து நாங்கள் இழந்து விட்ட பாடங்களை சொல்லித்தரச் செய்தாள். ஒரு நாள் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, பாதிரியார் சமய உருப்புக்களை அணிந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று அப்பாவின் உடம்பில் நுழைந்துவிட்ட பேய்களை விரட்ட முயற்சி செய்தார். புனிதமற்ற பிடிவாதத்தை அப்பா கைவிடவேண்டுமென்று பாதிரியார் கத்தினார். வேறொரு நாள் அம்மா இரண்டு சிப்பாய்களுக்கு ஏற்பாடு செய்து அவரை பயமுறுத்த முயற்சி செய்தாள். எதுவும் பயனளிக்கவில்லை. அப்பா தூரமாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய்விடுவார்; சில சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாத தூரத்திற்குச் சென்றுவிடுவார். அவர் யாருக்கும் ப
தில் சொல்லவில்லை; யாரும் அவர் அருகில் போகவும் இல்லை. ஒரு சமயம் ஒரு பத்திரிகையாளர்கள் அவரைப் படம்பிடிக்க விசைப்படகில் சென்றபோது, அப்பா படகை நதியின் அடுத்த கரைக்கு இயக்கிச்சென்று சில சதுப்பு நிலப்பகுதிகளில் மறைந்து கொண்டார். தன்னுடைய உள்ளங்கையை அவருக்கு எப்படித் தெரியுமோ அந்த அளவுக்கு அவருக்கு அந்த இடங்களைத் தெரியும்; ஆனால் மற்றவர்கள் அந்த இடங்களில் எளிதில் வழிதவறி விடுவார்கள். பல மைல் நீளத்திற்கு விரிந்திருந்த அந்த குழப்பமான இடம் அவருக்கே சொந்தமானது. தலைக்கு மேலே அடர்த்தியான சிலைகளுடன் கூடிய செடிகளுடனும், நாலா பக்கமும் நாணற்புதர்களும் மண்டியிருந்த அந்த இடத்தில் அவர் பாதுகாப்பாக இருந்தார்.

அப்பா நதியிலேயே வாழ்ந்து வருவது என்கிற கருத்துக்கு எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது - ஆனால் எங்களால் அது முடியவில்லை. எப்போதும் முடியவும் முடியாது. அப்பா எதை விரும்பினார், எதை விரும்பவில்லை என்று நான் ஒருவன் மட்டும்தான் ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தான் அனுபவித்த துன்பத்தை அவர் எப்படி தாங்கிக்கொண்டார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ளவே
முடியவில்லை. வாரக்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக, தலையில் ஒரு பழைய தொப்பியோடு, குறைச்சலான ஆடையோடு, வீணாகவும் வெறுமையாகவும் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படித்தான் இரவிலும் பகலிலும், வெய்யிலிலும் மழையிலும், பயங்கர குளிரிலும் அவர் வாழ்ந்து வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிலத்திலோ புல்தரையிலோ, தீவிலோ, கரையிலோ
அவர் கால் பதிக்கவே இல்லை. ஆனால் சில சமயங்களில், ஒரு ரகசிய இடத்தில், ஏதோ ஒரு தீவின் முனையில் படகைக்கட்டி விட்டுத் தூங்கினார். எப்போதும் அவர் தீ உண்டாக்கியதே இல்லை; ஒரு நெருப்புக்குச்சியைக் கூடக் கிழித்ததில்லை. அவரிடம் ஒரு டார்ச் விளக்குகூட இல்லை. பாறை இடுக்கில் நான் வைக்கும் உணவில் கொஞ்சம் மட்டுமே அவர் எடுத்துக்கொண்டார். அது, அவர் உயிரோடு இருக்கத் தேவையான அளவாக எனக்குத்
தோன்றவில்லை. அவர் உடல்நலம் எப்படி இருந்திருக்கும்? படகைக் கட்டுப்படுத்த துடுப்புகளைத் தள்ளியும் இழுத்தும் அவருடைய சக்தி எப்படி வடிந்து போயிருக்கும்? வருடாந்திர வெள்ளத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து ஆபத்தான பொருள்களான மரக்கிளைகளையும் இறந்த மிருகங்களின் உடல்களையும் நதி அடித்துச் சென்றபோது
அவற்றை எப்படிச் சமாளித்தார்? அவை அவருடைய படகின் மீது திடீரென்று மோதினால் என்னவாகியிருக்கும்?

யாருடனும் அவர் பேசவில்லை; நாங்களும் அவரைப் பற்றிப் பேசவே இல்லை. அவரைப் பற்றி நினைத்துக்கொண்டு மட்டுமே இருந்தோம். அப்பாவை மனதிலிருந்து எங்களால் எப்போதும் நீக்கவே முடியவில்லை. எப்போதாவது நாங்கள் அவரைப் பற்றி கொஞ்ச நேரம் நினைக்காமலிருப்பதாகத் தோன்றினால் அது ஒரு சிறு இடைவெளிதான். அப்பா இருக்கும் அச்சுறுத்தும் சூழலைப் பற்றிய உணர்தல் திடீரென்று எங்களை அந்த இடைவெளியிலிருந்து
கூர்மையாக விடுபடச் செய்யும்.

என் சகோதரிக்குத் திருமணம் நடந்தது; ஆனால் அம்மா திருமண விருந்து வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அது ஒரு சோகமான நிகழ்வாகப் போயிருக்கும். ஏனென்றால் நல்ல உணவைச் சாப்பிடும் போதெல்லாம் நாங்கள் அப்பாவை நினைத்துக் கொண்டோம். குளிரும் கடும் மழையும் நிறைந்த இரவில் படகில் சேரும் நீரை தன் கைகளாலும் ஒரு சுரைக் குடுக்கை மூலமாகவும் மட்டுமே வாரி வெளியே இறைத்துக் கொண்டிருக்கும் அப்பாவை
எங்களுடைய செüகரியமான படுக்கைகளில் படுத்துக் கொண்டு நினைத்துக் கொள்வோம். அவ்வப்போது யாராவது ஒருவர் நான் அப்பா மாதிரியே தோற்றம் கொண்டு வளர்ந்து வருவதாகச் சொல்வார். அந்த நேரத்தில் அப்பாவின் தலைமுடியும் தாடியும் பறட்டையாக மாறியும், நகங்கள் நீண்டும் வளர்ந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். முடியாலும் சூரிய வெப்பத்தாலும் கறுத்துப்போய் ஒல்லியாகவும் நோய்வாய் பட்டவராகவும் தோற்றமளிக்கும்
அப்பாவை, நான் எப்போதாவது அவருக்காக உடைகளை விட்டுச் சென்றும்கூட அநேகமாக நிர்வாணமாகவே இருக்கும் அப்பாவை நான் கற்பனை செய்து கொள்வேன்.

அவர் எங்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. நான் ஏதாவது நல்லது செய்ததனால் பாராட்டப்படும்போது, என்னுடைய அப்பாதான் அப்படி நடந்துகொள்ள எனக்குச் சொல்லிக்கொடுத்தார் என்று கூறிக்கொண்டேன். நான் அப்படிச் சொன்னது முற்றிலும் சரியல்ல; ஆனால் அது மாதிரியான உண்மை சார்ந்த பொய் நான் முன்பே சொன்ன மாதிரி அப்பா எங்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. பின் ஏன் அவர் அங்கேயே தங்கிவிட்டார்? நாங்கள் அவரைப் பார்க்க முடியாத மாதிரியும் நதியின் மேல் எல்லைக்கோ அல்லது கீழ் எல்லைக்கோ ஏன் அவர் செல்லவில்லை? அவருக்கு மட்டுமே இதற்கான விடை தெரிந்திருக்கும்.

என் சகோதரிக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அப்பாவுக்கு அவருடைய பேரனைக் காட்ட வேண்டுமென்று அவள் மிகவும் வற்புறுத்தினாள். ஓர் இனிமையான நாளில் நாங்கள் அனைவரும் நதிக்கரைக்குச் சென்றோம்; என் சகோதரி அவளுடைய வெண்மை நிற திருமண உடையில் இருந்தாள். அவள் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள், அவள்
கணவன் அவர்கள் இரண்டு பேருக்கும் மேலே ஒரு குடை பிடித்தார். நாங்கள் அப்பாவைக் கத்தி அழைத்து விட்டுக் காத்திருந்தோம். அவர் வரவே இல்லை. என் சகோதரி அழுதாள்; நாங்கள் அனைவரும் ஒவ்வொருவரின் கைகளப் பிடித்துக் கொண்டு அழுதோம். என் சகோதரியும் அவளுடைய கணவனும் தொலைவான இடத்துக்குச் சென்றுவிட்டனர். என் சகோதரன் ஒரு நகரத்துக்கு வசிக்கச் சென்றுவிட்டான். காலங்கள், அவற்றின் வழக்கமான
சூட்சும வேகத்தோடு மாறிவிட்டன. கடைசியாக அம்மாவும் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள், வயதாகிவிட்டதால் தன் மகளோடு அவள் வாழச் சென்றுவிட்டாள். நான் மட்டுமே மிச்சமாக அங்கேயே தங்கிவிட்டேன். திருமணம் செய்து கொள்வது பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையின் இடர்ப்பாட்டோடு நான் அங்கேயே தங்கிவிட்டேன். துணையற்று தனியாக நதியில் அலைந்து கொண்டிருந்த அப்பாவுக்கு நான் தேவைப்பட்டேன். அவர் ஏன் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார் என்று என்னிடம் எப்போதும்
சொன்னதில்லையாயினும் அவருக்கு நான் தேவைப்பட்டேன். அப்பா ஏன் அப்படிச் செய்கிறார் என்று வலியுறுத்தியும் மழுப்பலின்றியும் சிலரிடம் நான் கேட்டபோது, படகைச் செய்து கொடுத்தவரிடம் எல்லாவற்றையும் அவர் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த ஆள் இறந்துவிட்டதால் யாருக்கும் எதுவும் தெரியுமில்லை; நினைவிலுமில்லை. மழை தொடர்ந்தும் கடுமையாகவும் பெய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு முட்டாள்தனமான பேச்சு பரவியது. அதாவது, நோவாவைப் போல அறிவுக்கூர்மையோடு அப்பா ஒரு பெரும் வெள்ளத்தை எதிர்பார்த்து ஒரு படகைச் செய்துகொண்டிருந்தார் என்றார்கள். மக்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு மங்கலாக நினைவில் உள்ளது. எப்படியிருப்பினும், அவர் செய்து கொண்டிருந்ததை நான் கண்டிக்கவில்லை. என் தலைமுடி நரைக்க ஆரம்பித்தது.

சோகமான விஷயங்கள் மட்டுமே எனக்குச் சொல்ல இருக்கின்றன. நான் எந்தத் தீங்கைச் செய்தேன்? என் மிகப் பெரிய குற்றம் எது? அப்பா எப்போதும் தொலைவிலும் அவருடைய இராமை எப்போதும் என்னுடனும். அந்த நதி, முடிவேயில்லாமல் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த நதி. எப்போதும் அந்த நதியேதான். அரை உயிரோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்த முதுமையின் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்தேன். நோயும் கவலையும் என்னைத் தாக்கின. ஓயாது தொல்லைப்படுத்தும் கீல்வாதமும் எனக்கு வந்தது. அவர், ஏன், ஏன் அதைச் செய்துகொண்டிருக்கிறார்? மிக வயதானால் அவர் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்திருப்பார். வலிமை குறைந்து கொண்டிருப்பதால் ஒரு நாளைக்கு படகை அவர் கவிழ்த்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போக விட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போகவிட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம். இந்த நினைவு என் இதயத்தை அழுத்தியது. அங்கே வெளியே அவர்; அமைதியைப் பறிகொடுத்துவிட்டு நான். என்னவென்று தெரியாத குற்றமொன்றைச் செய்துவிட்ட உணர்வு எனக்கு; என் துயரம் எனக்குள்ளே ஒரு ரத்தம் கசியும் காயம். சூழ்நிலைகள் வேறாக இருப்பின், ஒருவேளை இந்தச் சிக்கலை நான் புரிந்து கொள்ளலாம். என்ன தவறு நடந்ததென்று நான் யூகிக்க ஆரம்பித்தேன்.

அப்பா வெளியேறியதின் காரணமாக தெரிந்தே ஆக வேண்டும். நான் பைத்தியமாகிப் போனேனா? இல்லை. இத்தனை ஆண்டுகளாகவும் அந்த வார்த்தை எங்கள் வீட்டில் உச்சரிக்கப்பட்டதேயில்லை. யாரும் யாரையும் பைத்தியம் என்று கூப்பிட்டதேயில்லை; காரணம் யாரும் பைத்தியமில்லை. அல்லது ஒருவேளை எல்லோருமே பைத்தியமாக இருந்திருக்கலாம். நதிக்கரைக்குச் சென்று, அவர் என்னைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு கைக்குட்டையை அசைத்தேன். நான் செய்ததெல்லாம் இதுதான். என் உணர்ச்சிகளை முழுக்க அடக்கிக்கொண்டு காத்திருந்தேன். கடைசியாக தொலைவில், மறுகரையில், படகின் பின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த தெளிவற்ற உருவம் ஒன்று தோன்றியது. அவரை நோக்கி சிலமுறை கூப்பிட்டேன். முறையாகவும் ஆர்வத்தோடும் ஒரு சபதம் போன்று நான் சொல்ல விரும்பியதைச் சொன்னேன். எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு
உரக்கச் சொன்னேன், "அப்பா நீங்கள் நெடுங்காலம் அங்கே இருந்து விட்டீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டது... திரும்ப வாருங்கள்; இனிமேலும் நீங்கள் அங்கே இருக்க வேண்டாம்.... நீங்கள் திரும்ப வாருங்கள்; உங்களுக்குப் பதிலாக நான் போகிறேன்; நீங்கள் விரும்பினால் இப்போதே. எப்போது வேண்டுமானாலும் சரி, நான் படகில் ஏறிக்கொள்கிறேன்; நான் இதைச் சொல்லி முடித்ததும் என் இதயம் மேலும் உறுதியுடன் துடித்தது. நான் சொன்னதை
அவர் கேட்டார். எழுந்து நின்றார். என்னை நோக்கி படகைச் செலுத்தினார். என் விருப்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார். திடீரென்று நான் உடல் முழுக்க நடுங்கினேன். ஏனெனில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அவர் கையைத் தூக்கி அசைத்தார். நான் நிலையிழந்தேன். திகிலில் மயிர்க்கூச்செறிய நான் ஓடினேன். மூர்க்கத்தனமாக ஓடினேன். ஏனென்றால் வேறொரு உலகத்திலிருந்து அவர் வருவதாகத் தோன்றியது. நான் மனமார மன்னிப்பை வேண்டிக்கொண்டே, வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.

கொடிய பயத்தில் பிறக்கும் அந்தப் பயங்கரக் குளிர் உணர்வை நான் அனுபவித்தேன். என் உடல் நலங்கெட்டது. யாரும் அவரை மீண்டும் பார்க்கவோ அவரைப் பற்றிக் கேள்விப்படவோ இல்லை. அத்தகைய ஒரு தோல்விக்குப் பின் நான் ஒரு மனிதன்தானா? எப்போதும் இருந்திருக்கக் கூடாத ஒன்றாக நான் இருக்கிறேன். அமைதியாக எது
இருக்க வேண்டுமோ அதுவாக நான் இருக்கிறேன். காலங்கடந்து விட்டதென்று எனக்குத் தெரியும் என் வாழ்க்கையின் எல்லையிடப்படாத சமவெளிகளிலும் பாழ்நிலங்களிலும் நான் தங்க வேண்டும். இந்தத் தங்குதலை நான் குறுக்கிக் கொள்வேன் என்று பயப்படுகிறேன். ஆனால் சாவு எனக்கு நேரும்போது, இரு நீண்ட கரைகளுக்கிடையே இடையறாமல் ஓடும் இந்த நீரில் ஒரு சிறிய படகில் நான் வைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். நான்
நதியில் ஆழத்தில், நதியில் மறைந்து போய், நதியின் உள்ளே.... நதி.





ஜோவோ கிமேரஸ் ரோஸா

ரோஸா (1908-67) பிரேஸில் நாட்டவர். நாவலாசிரியர்; சிறுகதையாளர். மருத்துவப் பயிற்சிக்குப் பின் கிராமப்புறத்தில் பணிபுரிந்தவர். தான் பணிபுரிந்த கிராமப் பகுதியின் நாட்டுப்புறக்கதைகளைச் சேகரித்துத் தொகுத்தவர். பிரேஸிலின் அயல்நாட்டு உளவுத்துறையில் பணியாற்றியவர். இவருடைய மிகப் பிரபலமான நாவலான 'The Devil to pay in the backlands'படங் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.

Sunday, November 13, 2011

தீர்ப்பு - ஃப்ரனஸ் காஃப்கா





ஆங்கில மொழிபெயர்ப்பு : வில்லா - எட்வின்மூர்
தமிழில்: சி.மோகன்




அது, வசந்த காலம் உச்சத்திலிருந்த ஒரு ஞாயிறு காலை. இளம் வியாபாரியான ஜார்ஜ்பெந்தெமன், ஆற்றின் அருகே பரந்து விரிந்திருந்த, பராமரிப்பின்றிப் பழுதடைந்திருந்த, நீண்ட வரிசையிலான சிறிய வீடுகளொன்றின் முதல் மாடியில் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். உயரத்தாலும் வண்ணத்தாலும் மட்டுமே வித்தியாசப்பட்டு, மற்றபடி
ஒன்றுக்கொன்று துளி வேறுபாடுமின்றி அந்த வீடுகள் அமைந்திருந்தன. தற்சமயம் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் தன் பழைய நண்பனுக்கு அவன் அப்போதுதான் கடிதமொன்றை எழுதி முடித்துவிட்டு, கனவுப் பாங்கான பாணியில், மிக மெதுவாக, அதற்கான உறையில் அதைப் போட்டுவிட்டு, எழுது மேஜை மீது முழங்கைகளை ஊன்றியபடி, ஜன்னல்களின் வழியாக ஆற்றையும் பாலத்தையும் தொலைதூரக் கரையில் இ
ளம்பசுமையோடு காணப்பட்ட குன்றுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சொந்த நாட்டில் தனக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த அதிருப்தி காரணமாக, சில வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவுக்கு ஓடிப் போய்விட்ட தன் நண்பனைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புரிந்துவரும் தொழிலானது, ஆரம்பத்தில் செழித்திருந்தபோதிலும் பல காலமாக இறங்குமுகத்தில்தான் இருக்கிறதென்று, அவன் வருகையின் இடைவெளி அதிகரித்து, அவன் வருவதே
அபூர்வமாகிவிட்ட தருணங்களில் குறைப்பட்டுக் கொண்டது விரயமாகிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஜார்ஜ் நன்கு அறிந்திருந்த அவன் முகம், புதிதாய் வளர்த்திருந்த முழுமையான தாடியில் புதைந்து போகவில்லை என்றாலும் வித்தியாசமான தோற்றமளித்தது. உள்ளுறைந்திருக்கும் ஒரு நோயின் தடயமாக, அவனின் தோல் நிறம் மிகவும் மஞ்சளாக மாறிவிட்டிருந்தது. தனக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரம்மச்சாரி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கென்றே தன் சகநாட்டவர் வசிக்கும் காலனியுடன் சீரான தொடர்பு வைத்துக் கொள்ளாததோடு, ரஷ்யக் குடும்பங்களோடும் நெருங்கிய உறவேதும் கொள்ளாமல் தனித்திருப்பதாக அவன் கூறியிருந்தான்.

பக்கத்துணைகளின்றிப் பரிதவிக்கும் அத்தகையதோர் மனிதனுக்கு ஒருவன் என்னதான் எழுத முடியும்? அத்தகைய மனிதனுக்கு அனுதாபம் காட்டலாமே தவிர அவனுக்கு உதவி செய்ய முடியாது. சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து வேரூன்றிக் கொள்வதோடு, மீண்டும் பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டு - அவ்வாறு அவனைச் செய்ய விடாமல் தடுக்கக் கூடியதாக எதுவுமில்லை - நண்பர்கள் உதவியைச் சார்ந்திருக்கும்படி அவனுக்கு ஒருவன்
ஆலோசனை கூற முடியுமா? ஆனால் அப்படிச் சொல்வதானது, அவன் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் திசை தப்பிவிட்டதால், வழி தவறிச் சென்று மனம் திருந்தித் திரும்பி வந்தவனாக அவனை எல்லோரும் வியந்து பார்ப்பதை ஏற்றுக்கொண்டு, சொந்த நாட்டிலேயே வெற்றிகரமானவர்களாகவும் குடும்ப வாழ்வைச் செம்மையாக நடத்துபவர்களாகவும் இருக்கும் தராதரம் அறிந்த அவனுடைய நண்பர்களின் வழிகாட்டுதலின்படி, வளர்ந்துவிட்ட பெரியதோர் குழந்தையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்வதாக ஆகிவிடும். இதை மிகக் கனிவாகச் சொன்னாலும் கடுமையாகவே தெரியும். இதெல்லாம் ஒருபுறமிக்க, அந்த அளவுக்குச் சிரமமெடுத்து அவனை வற்புறுத்தினாலும் அந்த நோக்கம் நிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? அவனைத் தன் சொந்த நாட்டுக்கு வர வைப்பதே கூட சாத்தியமில்லாமல் போகலாம்; தன் சொந்த நாட்டின் வணிகப் போக்கோடு தற்சமயம்தான் தொடர்பிழந்துவிட்டதாக அவனே சொல்லியிருக்கிறான். அதன்பிறகு, அவன் வெளி
நாட்டில் ஒரு அந்நியனாகவே தனித்து விடப்படுவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களின் ஆலோசனைகளினால் மனம் நொந்துபோய், நட்பு பாராட்டிய அவர்களிடமிருந்து முன்னைவிடவும் ஒதுங்கும் படியாக வேறு ஆகிவிடும். ஆனால், அவர்களின் ஆலோசனையை அவன் ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, ஒருவேளை அவனால் சொந்த
நாட்டில் முரண்டு காரணமாக என்றில்லை, சந்தர்ப்பங்களின் ஆற்றல் காரணமாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாது போய்விடுமானால், நண்பர்களோடு ஒத்துப்போகவும் முடியாமல் அவர்களிடமிருந்து ஒதுங்கவும் முடியாமல் அவமானத்துக்கு ஆளாகி விடுவானென்றால், இனி ஒருபோதும் தனக்கென்று நாடோ நண்பர்களோ
இல்லையென்று உணரும்படி ஆகிவிடுமென்றால், அவன் இப்போது இருக்கிறபடியே வெளிநாட்டில் இருந்துவிடுவது அவனுக்கு உகந்ததாகாதா? இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் சொந்த நாட்டில் அவன் வெற்றிகரமானதோர் வாழ்க்கையை நடத்துவான் என ஒருவனால் எப்படி நிச்சயமாகக் கருத முடியும்?

இத்தகைய காரணங்களினாலேயே, அவனோடு தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் ஒருவனால், மிக லேசாகத் தெரிந்த ஒருவரிடம் சொல்ல முடிவது போலக்கூட எத்தகைய உண்மையான செய்திகளையும் அவனுக்குத் தெரியப்படுத்தமுடியாது. அவன் கடைசியாக வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு அவன், ரஷ்யாவின் அரசியல் நிலைமை மிகவும் ஸ்திரமற்றியிருக்கிறது என்றும் லட்சக்கணக்கான ரஷ்யர்களை வெளி
நாடுகளுக்கு அமைதியாகப் பயணம் செய்ய அனுமதிக்கும் அதேசமயம் ஒரு மிகச் சிறிய வியாபாரியைச் சில நாள்களுக்கு வெளியில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்றும் நொண்டிச் சமாதானம் சொன்னான். ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு
அவனுடைய அம்மா இறந்துவிட்டாள்; அதிலிருந்து அவனும் அவன் தந்தையும் வீட்டைச் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்கள். இவ்விஷயம் அவனுடைய நண்பனுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவனும் தன் அனுதாபத்தை வறட்டுத்தனமான வார்த்தைகளால் அமைந்த ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தான். அப்படியான ஒரு சம்பவம் தரக்கூடிய வேதனையைத் தூரதேசத்திலிருந்து உணர முடியாது என்ற முடிவுக்கே இதிலிருந்து வர முடிகிறது. அந்தச்
சமயத்திலிருந்து, எது எப்படியிருந்தபோதிலும், வியாபாரத்திலும் சரி, மற்ற எல்லா விஷயங்களிலும் சரி, ஜார்ஜ் மிகுந்த முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

ஒருவேளை, அம்மா உயிரோடிருந்த வரை தொழில்ரீதியான ஒவ்வொரு விஷயத்திலும் தனதான வழிமுறைகளைத் தந்தை வலியுறுத்திக் கொண்டிருந்ததால், சுயமாய் முயற்சிகளெடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ள அவனுக்கு முடியாமல் போயிருக்கலாம். அம்மா இறந்ததற்குப் பிறகு, தந்தை தொழிலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் அவரின் தீவிரம் மட்டுப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்; ஒருவேளை அது, பெரும்பாலும், தற்செயலாகக் கூடிவந்த நல்ல காலத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். அநேகமாக இதுதான் அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு வருடங்களில் தொழில் சற்றும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி அடைந்தது; பணியாளர் எண்ணிக்கை இரு மடங்காகியது; விற்பனை ஐந்து மடங்காகப் பெருகிறது; மேலும் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியங்கள் அண்மையில் இருக்கின்றன- சந்தேகமே இல்லை.

ஆனால், இந்த வளர்ச்சி பற்றிய எவ்வித முகாந்திரத்தையும் ஜார்ஜின் நண்பன் அறிந்திருக்கவில்லை. முந்தையை வருடங்களில், கடைசி முறையாக அது அவனின் அனுதாபக் கடிதத்திலாக இருக்கலாம் - ஜார்ஜை ரஷ்யாவுக்கு வந்துவிடும்படி அவன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். குறிப்பாக, ஜார்ஜின் தொழிற்கிளை அங்கு வெற்றிகரமாக
அமைவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக முன்வைத்திருந்தான். ஜார்ஜ் தற்சமயம் எட்டியிருக்கும் எல்லையோடு ஒப்பிடும்போது, அவன் எடுத்துக்காட்டியிருந்த கணக்குகள் கடுகளவே. எனினும், தன் தொழிலின் வெற்றி குறித்து நண்பனுக்குத் தெரியப்படுத்த அவன் தயங்கினான். நடந்து முடிந்தவற்றை இப்போது தெரியப்படுத்தினால் அது நிச்சயம் விசித்திரமாகவே படும்.

ஆக, அமைதியான ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவன் எதையாவது சும்மா யோசித்துக் கொண்டிருக்கும்போது, மேலெழுந்த வாரியாக எழும் நினைவுகளான, முக்கியத்துவமற்ற வம்பு விவகாரங்களையே தன் நண்பனுக்குத் தெரிவிப்பதென்று அவன் வரையறுத்துக் கொண்டிருந்தான். தன் நண்பன், தனது சொந்த ஊர் பற்றி, இந்த நீண்ட இடைவெளியில், தன் விருப்பத்திற்கேற்ப எப்படியெல்லாம் கற்பனைக் கோட்டை எழுப்பியிருப்பானோ அதற்குக்
குந்தகம் நேராமல் பார்த்துக் கொள்வதையே அவன் விரும்பினான். அதற்கேற்ப அவன், தன் நண்பனுக்கு, சற்றே விரிவாக எழுதிய மூன்று வெவ்வேறு கடிதங்களில் எவ்வித முக்கியத்துவமுமற்ற ஒருவனுக்கும், அது போன்றதொரு பெண்ணுக்கும் ஏற்பாடாகியிருந்த நிச்சயதார்த்தம் குறித்து மூன்று முறையும் எழுதினான். இதுவரையான அவனது தீ
ர்மானங்களுக்கு முற்றிலும் மாறாக, அவனுடைய நண்பன் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துக் கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்.

எனினும், ஜார்ஜ் இப்படியான விஷயங்களை எழுத முன் வந்தானே தவிர, ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென் ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு தனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதைத் தெரிவிக்க முன்வரவில்லை. அவன், தன் மணப்பெண்ணிடம், இந்த நண்பனைப் பற்றியும்
பரிமாற்றங்களின் மூலம் அவர்களுக்கிடைய உருவாகியிருந்த விசித்திரமான உறவு பற்றியும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டான். "ஆக, அவர் நம்முடைய திருமணத்துக்கு வரமாட்டார்'' என்றாள் அவள். "எனினும், உங்கள் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை இருக்கிறது.'' "என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்'' ஜார்ஜ் பதில் சொன்னான். "நான் அவனுக்குத் தொந்தரவு தர விரும்பவில்லை. ஒருவேளை அவன் வரக்கூடும், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கவாவது செய்கிறேன். ஆனால் தன்னைப்
பிடித்து இழுத்து வந்துவிட்டதாகத்தான் அவன் நினைப்பான். மேலும், அவன் அதற்காக வருத்தப்படுவான்; ஒருவேளை அவன் என்மீது பொறாமை கொள்ளவும் கூடும்; நிச்சயம் அவன் அதிருப்தி கொள்வான். தன் அதிருப்தி குறித்து எதுவும் செய்ய இயலாத நிலையில் அவன் தனியனாகவே திரும்பிப் போக வேண்டியிருக்கும். தனியன் - அதற்கு என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?'' "அதுசரி, ஆனால் நம் திருமணம் பற்றி வேறு எந்த
வகையிலாவது அவர் கேள்விப்படமாட்டாரா?'' "எனனால் அதைத் தடுக்க முடியாது என்பதென்னவோ உண்மைதான்; ஆனால் அவன் வாழும் விதத்தைப் பார்க்கும்போது அநேகமாக அப்படியேதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.'' "உங்கள் நண்பர்கள் அப்படியிருக்கும்பட்சத்தில், ஜார்ஜ், நீங்கள் ஒருபோதும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கக்கூடாது.'' "அது சரி, ஆனால் அதற்கு நம் இருவரையும் தானே குறை சொல்ல வேண்டும். இப்போது என்னால் வேறொன்றும் செய்ய முடியாது.'' அதன் பிறகு, அவனின் முத்தங்களால் வேகவேகமாக மூச்சு வாங்கிய அவள், "எல்லாமே ஒன்றுதான்; நானும்கூட மனம் குலைந்துதான் இருக்கிறேன்.'' ஒருவேளே, தானே தன்
நண்பனுக்குத் தகவல் தெரிவித்தாலும் அதனால் தனக்கொன்றும் தொந்தரவு வந்துவிடாது என்று அவன் நினைத்தான். "என் சுபாவம் அப்படி, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் அவன் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். "அவனுக்கு ஏற்றபடி என்னை நான் வேறுவிதமாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.''

ஆனால், உண்மை என்னவென்றால், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அவன் எழுதிய நீண்டதோர் கடிதத்தில் தன் நிச்சயதார்த்தம் பற்றித் தன் நண்பனுக்கு இத்தகைய வார்த்தைகளில் தெரியப்படுத்தி இருந்தான்: "ஒரு நல்ல செய்தியைக் கடைசியாக எழுதலாமென்று இருந்தேன். ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென்ஃபெல்டு என்ற வசதியான
குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நீ ஊரை விட்டுப் போய் வெகு காலத்துக்குப் பின் இங்கு வசிக்க வந்தவள் அவள். எனவே, அவளைப் பற்றி உனக்கு எதுவுமே தெரிந்திருக்காது. அவளைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொல்ல பின்னர் அவகாசமிருக்கும். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இன்று சொல்கிறேன். உன்னையும் என்னையும் பொறுத்தவரை நம் உறவில் ஏற்பட்டிருக்கும் ஒரே மாறுதல், மிகச் சாதாரணமானவனாய் இருந்ததற்குப் பதிலாக, ஒரு சந்தோஷமான நண்பனாக இன்று நான் உன்னில் இருக்கிறேன் என்பதுதான். இது ஒருபுறமிருக்க, நான் மணக்கவிருக்கும் பெண், தன் உளம் கனிந்த வாழ்த்துகளை உனக்குத் தெரிவிக்கிறாள். மேலும், அவளே உனக்கு வெகு விரைவில் கடிதம் எழுத இருக்கிறாள். இதன் மூலம் நீ ஒரு
உண்மையான தோழியைப் பெறுகிறாய். ஒரு பிரமச்சாரிக்கு இதைவிட வேறென்ன வேண்டும். எங்களைப் பார்ப்பதற்கு உன்னால் வர முடியாது என்பதற்கான பல்வேறு காரணங்களையும் நான் அறிவேன். ஆனால் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு நீ இங்கு வருவதற்கு இது ஒரு சரியான தருணமாக அமையாதா? எனினும்,
என்னவாகவும் இருக்கட்டும், உன்னுடைய சொந்த நலன்களைத் தவிர வேறெதையும் பொருட்படுத்தாது, உனக்கு எது நல்லதென்று படுகிறதோ அதையே செய்.''

ஜார்ஜ் இக் கடிதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு, எழுது மேஜையின் முன் முகம் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருக்க, வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். தெருவில் கடந்துபோன அறிமுகமான ஒருவர் அவனைப் பார்த்துக் கையசைத்ததை அவன் வெறுமனே புன்சிரிப்பின்றி ஏற்றுக்கொண்டான்.

கடைசியாக அவன், அந்தக் கடிதத்தைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறி, சிறிய தாழ்வாரத்தைக் கடந்து, பல மாதங்கள் அவன் நுழைந்திராத, தன் தந்தையின் அறைக்குள் சென்றான். அவன் தினமும்
வியாபார ஸ்தலத்தில் தன் தந்தையைப் பார்ப்பதாலும், அவர்கள் இருவரும் ஒரு உணவு விடுதியில் ஒன்றாகவே மதிய உணவைச் சாப்பிடுவதாலும் உண்மையில் அங்கு செல்ல அவனுக்கு எந்தவித அவசியமும் இருக்கவில்லை. மாலை நேரத்தை அவர்கள் தங்கள் விருப்பப்படி கழிப்பார்கள். பெரும்பாலும் , ஜார்ஜ் தன் நண்பர்களோடு வெளியில் செல்வான். சமீப நாட்களாக அவன் தன் மணப் பெண்ணைச் சந்திக்கச் சென்றான். மற்றபடி, பொதுவாக
அவர்கள், வீட்டின் பொது அறையில் அவரவரின் செய்தித்தாளோடு சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

சூரிய வெளிச்சம் நிறைந்த அந்தக் காலை நேரத்தில்கூட, தந்தையின் அறை இருட்டாக இருந்தது ஜார்ஜ்க்கு வியப்பளித்தது. குறுகலான வராந்தாவுக்கு மறுபுறமிருந்த உயரமான சுவரும் சேர்ந்து அந்த அறையில் இருளை நிரப்பியிருந்தது. ஜார்ஜின் இறந்துபோன அம்மாவின் பல்வேறு ஞாபகார்த்தச் சின்னங்களைத் தாங்கிய ஜன்னலருகே ஒரு மூலையில் உட்கார்ந்தபடி அவனுடைய தந்தை பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். பார்வைக் கோளாறைச் சமாளிக்கும் வகையில் அவர் அந்தப் பத்திரிகையைத் தன் கண்களினருகே ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். மேஜையின் மீது அவரின் காலை உணவு, அதன் பெரும்பகுதி சாப்பிடப்படாமல் மிச்சம்
வைக்கப்பட்டிருந்தது.

"ஆ, ஜார்ஜ்'' என்றபடி அவனுடைய தந்தை அவனைச் சந்திப்பதற்காக சட்டென எழுந்தார். அவர் நடந்து வந்தபோது, அவருடைய கனத்த அங்கி பிரிந்து அசைந்தாடியபடி அவரைச் சூழ்ந்தது. "என் தந்தை இப்போதுகூட ஒரு பிரும்மாண்டமான மனிதர்தான்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"இங்கு இருள் சகிக்க முடியாதபடி இருக்கிறது'' என்று அவன் சத்தமாகச் சொன்னான்.
"ஆம், இருட்டாகத்தான் இருக்கிறது'' அவனுடைய தந்தை பதில் சொன்னார்.
"மேலும் நீங்கள் ஜன்னலை வேறு சாத்தியிருக்கிறீர்கள்.''
"அது அப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்.''

ஏதோ தான் முன்னர் சொன்னதன் தொடர்ச்சியாகவே சொல்வதுபோல, "நல்லது, வெளியே மிகவும் கதகதப்பாக இருக்கிறது'' என்று கூறியபடி ஜார்ஜ் உட்கார்ந்தான்.

அவனுடைய தந்தை காலை உணவுத் தட்டுகளை அப்புறப்படுத்தி அவற்றை உரிய இடத்தில் அடுக்கி வைத்தார்.

அந்த வயதான மனிதரின் சலனங்களை வெறுமையாகத் தொடர்ந்து கவனித்தபடி ஜார்ஜ் சொல்லத் தொடங்கினான்: "என் நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் இப்போது தெரியப்படுத்த இருப்பதை உங்களிடம் சொல்லிவிடவே உண்மையில் நான் விரும்பினேன்.'' தன் பாக்கெட்டிலிருந்து கடிதத்தத்தைச் சற்றே
வெளியிலெடுத்துவிட்டு மீண்டும் அதை உள்ளேவிட்டுக் கொண்டான்.

"செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கா?'' தந்தை கேட்டார்.

"அங்குள்ள என் நண்பனுக்கு.'' தந்தையின் கண்களைச் சந்திக்க முயற்சித்தவாறு ஜார்ஜ் சொன்னான். வியாபார நேரங்களில் அவர் முற்றிலும் வேறு மாதிரி இருப்பார் என்று அவன் நினைத்தான். தன் கைகளை குறுக்காக மடித்துக்கொண்டு எவ்வளவு நிதானமாக அவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்.

"ஓ, அப்படியா. உன் நண்பனுக்கா'' என்று அவனுடைய தந்தை விநோதமான அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

"ஆம், தந்தையே. என் நிச்சயதார்த்தம் குறித்து முதலில் நான் அவனுக்குச் சொல்ல விரும்பவில்லை. அவன் நிலைமையைக் கணக்கில் கொண்டதுதான் இதற்கான ஒரே காரணம். அவன் அசாதரணமான மனிதன் என்பது உங்களுக்கே தெரியும். என் நிச்சயதார்த்தம் பற்றி வேறு யாரேனும் அவனுக்குச் சொல்லி விடுவார்கள் என்று
எண்ணினேன். அது அப்படி நடக்க முடியாத அளவுக்கு அவன் அசாத்தியமான நபர் என்ற போதிலும் - அப்படி நடப்பதை என்னால் தடுக்க முடியாது - நானாக அவனிடம் சொல்லப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.''

"நீ இப்போது உன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டாய், இல்லையா?'' என்றபடி அவனுடைய தந்தை, தனது கனத்த செய்தித்தாளை ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு அதன் மீது தன் கண்ணாடியை வைத்து அதை ஒரு கையால் பொத்திக் கொண்டார்.

"ஆம், அதுபற்றி நான் மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருக்கும்பட்சத்தில், என் நிச்சயதார்த்தம் எனக்கு சந்தோஷம் தந்திருப்பதுபோல அவனையும் சந்தோஷப்படுத்தும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எனவே, இனியும் அவனுக்குத் தெரியப்படுத்துவதை நான் தள்ளிப் போடக்கூடாது. ஆனால் அதை அஞ்சல் செய்வதற்கு முன்னால் உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டுமென விரும்பினேன்''

"ஜார்ஜ்'' தன் பொக்கை வாயை விரித்தபடி, அவனுடைய தந்தை சொன்னார். "நான் சொல்வதைக் கேள்! இந்த விஷயம் குறித்து என்னுடன் கலந்து பேச நீ வந்திருக்கிறாய். நீ வைத்திருக்கும் மதிப்பை அது உணர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ என்னிடம் முழு உண்மையையும் சொல்லாத பட்சத்தில் இது ஒரு விஷயமே இல்லை
சும்மா இருப்பதைவிட இது மோசமானது. இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை எல்லாம் நான் கிண்டிக் கிளற விரும்பவில்லை. நம் அன்பான அம்மா இறந்து போனதற்குப் பிறகு, முறையற்ற பல காரியங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் பேசவேண்டிய நேரம் வரும். நாம் எதிர்ப்பார்ப்பதை விடவும் சீக்கிரமாகவே அது வரக்கூடும். எனக்குத் தெரியவராமல் வியாபாரத்தில் பல காரியங்கள் நடக்கின்றன; என் முதுகுக்குப்
பின்னால் அவை நடக்காமல் இருக்கலாம். என் முதுகுக்குப் பின்னால் நடக்கின்றன என்று நான் சொல்லப்போவதில்லை. இனியும் என்னால் காரியங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்க முடியாது; என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. இனி மேற்கொண்டு பல்வேறு காரியங்களை என்னால் கண்காணிக்க முடியாது. அதற்குக் காரணம், முதலாவதாக இயற்கையின் கதி; இரண்டாவதாக, நம் அன்பான அம்மாவின் மரணம் உன்னைவிடவும் என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறது என்பது. ஆனாலும் நாம் இதைப் பற்றி, இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். ஜார்ஜ், என்னை ஏமாற்றாதே. உனக்கு அப்படியொரு நண்பன் உண்மையிலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருக்கிறானா?''

தர்மசங்கடத்துக்குள்ளான நிலையில் ஜார்ஜ் எழுந்தான். "என் நண்பர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். ஓராயிரம் நண்பர்கள் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என் தந்தைக்கு ஈடாக மாட்டார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வதில் போதுமான
அக்கறை காட்டுவதில்லை. ஆனால் முதுமையில் கண்டிப்பாகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வியாபாரத்தைக் கவனிக்க முடியாது; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அந்த வியாபாரம் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றால் நாளைக்கே அதை ஒரேடியாக இழுத்து மூடிவிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. உங்கள்
வாழ்க்கை முறையில் நாம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியாக வேண்டும். ஒரு தீவிரமான மாறுதல். நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள். வரவேற்பறையில் இருந்தால் போதுமான வெளிச்சம் கிடைக்கும். உங்களின் வலிமையை முறையாகப் பேணுவதற்குப் பதில் காலை உணவாக ஏதோ கொஞ்சம் கொறிக்கிறீர்கள். ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் காற்று உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும், இல்லை அப்பா! நான் மருத்துவரை வரவழைக்கிறேன். நாம் அவர் சொல்லுகிறபடி கேட்போம். நாம் உங்கள் அறையை மாற்றுவோம். நீங்கள் முன்னறைக்குச் சென்று விடுங்கள்; நான் இங்கு வந்துவிடுகிறேன். உங்களுக்கு மாற்றம் தெரியாது; உங்கள் பொருள்களனைத்தும் உங்களோடு வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் செய்யப் பின்னர் அவகாசமிருக்கிறது.
இப்போது கொஞ்ச நேரம் உங்களைப் படுக்க வைக்கிறேன். உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு அவசியம். வாருங்கள், உங்கள் பொருள்களை எடுத்துக்கொள்ள நான் உதவி செய்கிறேன். என்னால் அதைச் செய்ய முடிவதை நீங்கள் பார்க்கலாம். அல்லது, உடனடியாக நீங்கள் முன்னறைக்குப் போவதாக இருந்தால், இப்போதைக்கு அங்கு நீங்கள் என் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். அதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.''

குலைந்து கிடந்த நரைமுடிகளோடு தலை தாழ்த்தியிருந்த தந்தைக்கு நெருக்கமாக ஜார்ஜ் நின்றுகொண்டிருந்தான்.

சற்றும் அசையாமல், மெதுவான குரலில், "ஜார்ஜ்'' என்றார் தந்தை.

உடனடியாக ஜார்ஜ் தந்தைக்கருகே மண்டியிட்டான். சோர்வுற்றிருந்த அந்த வயதான மனிதரின் முகத்தை அவன் பார்த்தபோது, மிகப் பெரிய கருவிழிகள் கண்களின் ஓரங்களிலிருந்து தன்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.

"உனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஒரு நண்பன் இருக்கிறான். நீ எப்போதுமே காலை வாரி விடுபவன்; என் காலை வாரவும் நீ தயங்கவில்லை. உனக்கு அங்கு எப்படி ஒரு நண்பன் இருக்க முடியும்! நான் அதை நம்பவில்லை.''

"பழையவற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அப்பா'' என்றான் ஜார்ஜ். நாற்காலியிருந்து அவரை எழும்பி நிற்கச் செய்து, அவருடைய அங்கியைச் கழற்றியபோது அவர் பலஹீனமாய் நின்றுகொண்டிருந்தார். "என்னுடைய நண்பன் கடைசியாக நம்மைப் பார்க்க வந்து அநேகமாக மூன்று வருடங்களாகப் போகின்றன. உங்களுக்கு அவனை
அவ்வளவாகப் பிடிக்காது என்பது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு முறையாவது, உண்மையில் அவன் அப்போது என்னோடு என் அறையில்தான் இருந்தான் என்றபோதிலும், அவனைப் பார்க்க விடாது உங்களைத் தடுத்திருக்கிறேன். அவனை உங்களுக்குப் பிடிக்காது என்பதை நான் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தேன்; என் நண்பனுக்கென்று சில சுபாவங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் நீங்கள் அவனோடு மிக நன்றாகவே பழகினீர்கள். நீங்கள் அவன் சொல்வதைக் கேட்டபடி தலையசைத்தது மட்டுமல்லாமல், அவனிடம் கேள்விகளும் கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன். நீங்கள் மறுபடியும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அது உங்கள் நினைவுக்கு வரும். ரஷ்யப் புரட்சி பற்றி மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய கதைகளை அவன் நமக்குச் சொல்வது வழக்கம். உதாரணமாக ஒரு முறை அவன் வியாபார நிமித்தமாக கீவ்வுக்குப் போனபோது அங்கு கலவரம் தொடங்கியிருந்தது. ஒரு மதகுரு பால்கனியில் நின்றுகொண்டு, தன் உள்ளங்கையில் ஒரு பெரிய சிலுவையைக் கீறி, ரத்தம் தோய்ந்த கையை உயர்த்தி, ஜனத்திரளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தது.
அதற்குப் பின்னர், நீங்களேகூட அந்தக் கதையை ஓரிரு முறை கூறியிருக்கிறீர்கள்.''

இதற்கிடையே, ஜார்ஜ் தன் தந்தையைத் திரும்பவும் மெதுவாகத் தாழ்த்தி உட்கார வைத்துவிட்டான். மேலும், லினன் உள்ளாடைக்கு மேலாக அவர் அணிந்திருந்த கம்பளி உள்ளாடைகளையும், காலுறைகளையும் கவனமாகக் கழற்றினான். அந்த உள்ளாடை சுத்தமாக இல்லாததற்கு தனது உதாசீனமே காரணமென்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். தன் தந்தை உள்ளாடைகளை மாற்றிக்கொள்ளும் வகையில் கவனம் எடுத்துக் கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் தன் தந்தைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அவன் தன் மணப்பெண்ணிடம் இதுவரை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை.

அந்த வயதான மனிதர் அந்தப் பழைய வீட்டிலேயே தொடர்ந்து தனியாக வசிப்பார் என்று அவர்கள் தங்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது, எதிர்காலத்தில் தான் குடிபுக இருக்கும் தன்னுடைய இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டுமென அவன் தீர்மானமான உடனடி முடிவொன்றை எடுத்தான். அங்கே தன் தந்தையை வெகுவாகச் சீராட்டிப் பராமரிக்க வேண்டுமென்று அவன் எடுத்த முடிவானது மிக
உன்னிப்பாக அவதானித்தபோது, காலம் கடந்து எடுக்கப்பட்டதாகவே கிட்டத்தட்ட தோன்றியது.
அவன் தன் தந்தையைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான். அந்த வயதான மனிதரைத் தன் நெஞ்சோடு தாங்கி, படுக்கையை நோக்கி சில எட்டுகள் தூக்கிச் சென்றபோது, அவர் தன் கடிகாரம் செயினுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்த அவன் அச்சமடைந்தான். அவரைப் படுக்கையில் கிடத்த அவனால் ஒரு கணம் முடியாமல் போகுமளவுக்கு அவர் கடிகாரச் செயினை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் படுக்கையில் படுத்துவிட்ட உடனே, எல்லாமே நல்லபடியாக நடந்துவிட்டதுபோல் தோன்றியது. அவர் தன்னைப் போர்த்திக் கொண்டதோடல்லாமல், போர்வையை வழக்கத்துக்கு மாறாக, தோளுக்கு மேலாக இழுத்து விட்டுக்கொண்டார். ஜார்ஜை நிமிர்ந்து கடுமையின்றிப் பார்த்தார்.

"நீங்கள் என் நண்பனை இப்போது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் இல்லையா?'' என்று அவரை உற்சாகப்படுத்தும் வகையில் தலையசைத்தவாறே ஜார்ஜ் கேட்டான்.

கால்கள் சரியாகப் போர்த்தப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தன்னால் பார்க்க முடியாமலிருக்கிறது என்பதுபோல, "இப்போது நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை கேட்டார்.

"ஆக, படுக்கையின் கதகதப்பை உணரத் தொடங்கிவிட்டீர்கள்'' என்றான் ஜார்ஜ். மேலும், கம்பளியை அவரைச் சுற்றி இன்னும் நெருக்கமாகப் போர்த்திவிட்டான்.''

"நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை ஏதோ அதற்கான பதிலில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதுபோல மீண்டுமொரு முறை கேட்டார்.

"கவலைப்படாதீர்கள். நீங்கள் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.''

"இல்லை!'' என்று கத்தியபடி அவனுடைய தந்தை, ஜார்ஜை பதில் பேசவிடாமல், ஒரு நொடியில் எல்லாவற்றையும் பறக்கடிக்கும் வகையில், கம்பளிகளைப் பலமாக உதறி எறிந்து விட்டு, குதித்தெழுந்து படுக்கையில் நிமிர்ந்து நின்றார். அவரை ஸ்திரப்படுத்துவதற்காக ஒரே ஒரு கை மட்டும் லேசாக உத்தரத்தைத் தொட்டது.

"எனக்குத் தெரியும், என் இளம் குருத்தே! நீ என்னை மூடி விட விரும்புகிறாய். ஆனால் நான் மூடப்படுவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது. ஒருவேளை, இதுதான் என் கடைசித் துளி பலமென்றாலும் கூட உன்னைச் சமாளிக்க இதுவே அதிகம். உன் நண்பனை எனக்குத் தெரியும் என்பது உண்மைதான். அவன் எனக்கு மகனாகப் பிறந்திருக்க வேண்டும் என்று நான் மனதார நினைக்கிறேன். அதனால்தான் நீ இவ்வளவு வருடங்களாக அவனோடு
ஒரு பொய்யான விளையாட்டு விளையாடி வந்திருக்கிறாய். வேறென்னவாக இருக்க முடியும்? அவனுக்காக நான் வருத்தப்படவில்லை என்று நீ நினைக்கிறாய்? அதன் காரணமாகத்தான் உன்னையே நீ உன் அலுவலகத்தில் பூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று - தலைமையாளர் மிகவும் முக்கியமான அலுவலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது - அப்போதுதானே உன்னால் பொய்யான சிறு கடிதங்களை ரஷ்யாவுக்கு எழுத முடியும். ஆனால், நல்ல வேளையாக, மகனின் உள்நோக்கங்களை அறிந்துகொள்ள ஒரு அப்பாவுக்கு எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அவனைக் கீழே தள்ளிய பிறகு, எந்த அளவுக்குத் தள்ளினால் அவன்மீது அமர்ந்து கொண்டு அவனை நகரவிடாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தள்ளிவிட்ட பிறகு, என் அருமை மகன் திருமணம் செய்து கொள்ளத் தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.''

தந்தை தன் மந்திர சக்தியால் உருவாக்கிய பிசாசை ஜார்ஜ் வெறித்துப் பார்த்தான். செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் அவனுடைய நண்பன் - திடீரென அவனை அவனுடைய தந்தைக்கு நன்கு தெரிந்திருந்தது - முன் எப்போதும் தோன்றியிராத வகையில் இப்போது கற்பனையில் தெரிந்தான். ரஷ்யாவின் விரிந்து பரந்த பரப்பில் தோற்றுப் போனவனாகத் தெரிந்தான். சூறையாடப்பட்டுக் காலியாகக் கிடந்த கிடங்கின் வாசலில் அவனைக் கண்டான். சரக்கு
அலமாரிகளின் சேதங்களுக்கிடையே, சிதறிக் கிடந்த மிச்சமீதி சரக்குகளுக்கிடையே வாயுக் குழாய்கள் நொறுங்கி வீழ்ந்துகொண்டிருக்க அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இவ்வளவு தொலை தூரத்துக்கு அவன் ஏன் போயிருக்க வேண்டும்!

"முதலில் நான் சொல்வதைக் கேள்!'' அவனுடைய தந்தை கத்தினார். எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்காகப் படுக்கையை நோக்கி ஓடிய ஜார்ஜ், கிட்டத்தட்ட தடுமாறிய நிலையில், பாதி வழியில் நிற்க வேண்டியதாயிற்று.

"அவள் தன் பாவாடையைத் தூக்கியதற்காக'' அவன் தந்தை மீண்டும் தொடங்கினார்.

"அவள், அந்த அசிங்கமான பிறவி, தன் பாவாடையை இப்படித் தூக்கியதற்காக.'' அவளைப் போன்று பாவனை செய்தபடி, யுத்தத்தின்போது அவருக்குத் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்தை ஒருவரால் பார்க்க முடியுமளவுக்கு, தன் சட்டையை மிக
உயரமாகத் தூக்கினார்.

"அவள் தன் பாவாடையை இப்படித் தூக்கியதும் நீ அவளிடம் மயங்கியதோடு
மட்டுமல்லாமல் அவளோடு எவ்விதத் தொல்லையுமின்றி சுதந்திரமாக சல்லாபம் செய்வதற்காக உன் அம்மாவின் ஞாபகார்த்தத்துக்கு ஊறு விளைவித்ததோடு, உன் நண்பனுக்கும் துரோகம் இழைத்தாய்; உன் அப்பாவையும், அவரால் எழுந்து நடமாட முடியாதபடி படுக்கையில் கிடத்தினாய், ஆனால் அவரால் நடமாட முடியும்; முடியாதா
என்ன?''

எவ்வித உறுதுணையுமின்றி அவர் எழுந்து நின்று தன் கால்களை உதறிக் கொண்டார். அவரின் உள்ளொளி அவரைப் பிரகாசிக்கச் செய்தது.

ஜார்ஜ் ஒரு மூலையில், தந்தையிடமிருந்து எந்த அளவுக்கு விலகி நிற்க முடியுமோ அந்த அளவு தள்ளி, ஒடுங்கி நின்றான். மறைமுகத் தாக்குதலின்போது-பின்னாலிருந்தோ, மேலிருந்தோ நிகழும் திடீர்ப் பாய்ச்சலின்போது - தான் திகைத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பழகி
க்கொள்ள வேண்டுமென வெகு காலத்துக்கு முன்பு அவன் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தான். இந்தக் கணத்தில் அவன் தன் பழைய மறந்துபோன தீர்மானத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பவும் மறந்து போனான் - ஊசிமுனையில் நூல் கோக்கும் ஒருவனைப் போல.

"ஆனால் அப்படியெல்லாம் உன் நண்பனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விடவில்லை'' என்று கத்தியபடியே அவனுடைய தந்தை அதை வலியுறுத்தும் வகையில் தன் ஆள்காட்டி விரலால் குத்திக் குத்திக் காட்டினார். "இங்கு, இந்த இடத்தில் அவனுக்குப் பதிலாக நானிருக்கிறேன்.''

"இதென்ன கோமாளித்தனம்.'' நறுக்கென்று பதில் சொல்வதை ஜார்ஜால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கணமே நடந்துவிட்ட தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அவன் கண்களில் பயம் தெரிந்தது. வேதனையில் முழங்கால்கள் தள்ளாடின.

"ஆம், நான் கோமாளித்தனம்தான் புரிகிறேன். கோமாளித்தனம்! அது ஒரு சரியான வெளிப்பாடு! மனைவியை இழந்துவிட்ட ஒரு பாவப்பட்ட கிழவனுக்கு வேறென்ன சௌகர்யம் எஞ்சியிருக்க முடியும்? சொல் - நீ பதில் சொல்லும்போது, உயிரோடிருக்கும் என் மகனாகவே இருந்து சொல் - விசுவாசமற்ற ஊழியர்களால் பீடிக்கப்பட்டு, எலும்பும் சதையுமாக வற்றிப்போய், பின்புற அறையில் கிடக்கும் எனக்கு வேறென்னதான் மிச்சமிருக்கிறது? ஆனால் என் மகனோ இந்த உலகினூடே பகட்டாய் நடைபோட்டு, நான் அவனுக்காகத் தயாரித்துக் கொடுத்திருந்த வணிக ஒப்பந்தங்களை முடித்துவிட்டு, வெற்றிக் களிப்பில் எக்காளமிட்டபடி, ஒரு மரியாதைக்குரிய வர்த்தகப் பிரமுகரின் இறுகிய முகத்தோடு தன் தந்தையிடமிருந்து கம்பீரமாக விலகிச் செல்கிறான்! நான் உன்னை நேசிக்கவில்லை என்றா நீ நினைக்கிறாய். நானா! நீ யாரிடமிருந்து குதித்து வந்தாய்?''

இப்போது அவர் முன்பக்கமாகச் சாய்ந்து விடுவார் என்று ஜார்ஜ் நினைத்தான். அப்படியே குப்புற விழுந்து அவர் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டால் என்ன! இந்த வார்த்தைகள் அவன் மனதிற்குள் சீறும் சப்தமாய் நுழைந்தன.

அவன் தந்தை முன்பக்கமாகச் சாய்ந்தபோதிலும் குப்புற விழவில்லை. அவர் எதிர்பார்த்தபடி ஜார்ஜ் கொஞ்சம்கூட அருகில் வராததால் தானாகவே தன்னை நிமிர்த்திக் கொண்டார்.

"நீ இருக்குமிடத்திலேயே இரு, உன் உதவி எனக்குத் தேவையில்லை! என்னருகே வருவதற்குரிய பலம் உனக்கிருப்பதாகவும், உன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பின்னால் நின்று கொண்டிருப்பதாகவும் நீ நினைக்கிறாய். ரொம்பவும் நினைத்துக் கொள்ளாதே! நம் இருவரில் இப்பவும் நான்தான் அதிக பலசாலி. நான் மட்டுமே தனியாக இருந்திருந்தால் ஒதுங்கி வழி விட்டிருப்பேன்; ஆனால் உன் தாயார் அவளுடைய சக்தி முழுவதையும் எனக்குத் தந்திருப்பதால் நான் உன் நண்பனுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதோடு, உன் வாடிக்கையாளர்களையும் இங்கே என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.''

"அவர் தன் சட்டையில்கூட பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும், இந்தக் குறிப்பின் மூலம் உலகின் முன் அவரை ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிட முடியுமென்று நம்பினான். ஆனால் எல்லாவற்றையும் அவன் உடனுக்குடன் மறந்து கொண்டிருந்ததால், ஒரு கணம்தான் அப்படி
யோசித்தான்.

"நீ மட்டும் உன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு என் வழியில் குறுக்கிட முயற்சி செய், பார்க்கலாம்! உன்னிடமிருந்தே அவளை ஒதுக்கித் தள்ளிவிடுவேன். எப்படி என்பது உனக்குத் தெரியாது!''

நம்பிக்கையின்றி ஜார்ஜ் முகம் சுளித்தான். தன் வார்த்தைகளின் உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜார்ஜ் இருந்த திசையை நோக்கி அவனுடைய தந்தை தலையை மட்டும் அசைத்தார்.

"உன் நிச்சயதார்த்தம் பற்றி உன் நண்பனுக்குத் தெரிவிக்கலாமா என்று என்னிடம் கேட்பதற்கு வந்ததாக நீ இன்று என்னிடம் எப்படி ஒரு விளையாட்டுக் காட்டினாய். அவனுக்கு முன்பே தெரியும்; முட்டாளே, அவனுக்கு எல்லாமே தெரியும்! நான் அவனுக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் - என்னிடமிருந்து என் எழுதுபொருள்களை
எடுத்துவிட நீ மறந்துவிட்டாய். அதனால்தான் அவன் வருடக்கணக்காக இங்கு வரவில்லை; உனக்குத் தெரிந்திருப்பதை விட அவனுக்கு எல்லாமே நூறு மடங்கு நன்றாகத் தெரியும். தன் வலது கையில் என் கடிதங்களைப் படிப்பதற்காகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், தன் இடது கையால் அவன் உன் கடிதங்களைப்
பிரிக்காமலேயே கசக்கி எறிவான்!''

உற்சாக மிகுதியில் தன் தலைக்கு மேலாகக் கையை அசைத்தாட்டினார்.

"அவனுக்கு எல்லாமே ஆயிரம் மடங்கு நன்றாகத் தெரியும்!'' அவர் கத்தினார்.

"பத்தாயிரம் மடங்கு'' என்று தந்தையைக் கேலிக்குள்ளாக்கும் நினைப்பில் ஜார்ஜ் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவன் நாவிலேயே மிகவும் மனப்பூர்வமானவையாக உருமாறி விட்டன.

"இது போன்றதொரு கேள்வியோடு நீ வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தேன்! நான் வேறெதிலாவது என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன் என்று நீ நினைக்கிறாயா? நான் என் பத்திரிகைகளைப் படிக்கிறேன் என்றா நீ நினைக்கிறாய்? பார்!'' அவர் எப்படியோ தன்னோடு படுக்கைக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்த ஒரு பத்திரிகைத் தாளை ஜார்ஜிடம் எறிந்தார். அதன் பெயரைக்கூட ஜார்ஜ்
கேள்விப்பட்டிராத அளவுக்கு அது ஒரு பழைய பத்திரிகை.

"நீ வளர்ந்து ஆளாவதற்குத்தான் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாய்! உன் அம்மா, சந்தோஷமான நாளைப் பார்க்காமலேயே இறக்க வேண்டியதாயிற்று. ரஷ்யாவில் உன் நண்பன் தூள் தூளாக நொறுங்கிக் கொண்டிருக்கிறான்; மூன்று வருடங்களுக்கு முன்பே தூக்கியெறிப்படும் அளவு மஞ்சளாகி விட்டிருந்தான். என்னைப் பொறுத்தவரை, நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதையெல்லாம் பார்க்க உனக்கு உன் தலையில் கண்கள் இருக்கின்றன!''

"ஆக, படுத்தபடியே எனக்காகக் காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்!'' ஜார்ஜ் கத்தினான்.

அவன் தந்தை இரக்கத்தோடு, முன்தீர்மானம் ஏதுமின்றிச் சொன்னார் : "நீ இதை விரைவில் சொல்ல விரும்புகிறாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது ஒரு விஷயமில்லை.'' பின்னர் உரத்த குரலில் : "ஆக உன்னைத் தவிரவும் உலகில் வேறென்ன எல்லாம் இருக்கின்றன என்பதை இப்போது நீ அறிந்து கொண்டிருப்பாய்; இவ்வளவு காலமும் நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டிருந்தாய்! ஒன்றுமறியாக் குழந்தை! உண்மைதான், நீ அப்படித்தான். ஆனால் அதை விடவும் பேருண்மை நீ ஒரு மனிதப் பிசாசாக இருந்திருக்கிறாய் என்பது. எனவே நீ குறித்துக் கொள்; நீரில் மூழ்கி நீ உயிர்விட வேண்டுமென நான் தீர்ப்பு வழங்குகிறேன்.''

அறையை விட்டு உடனடியாக வெளியேறி விட அவன் மனம் பரபரத்தது. அவனுக்குப் பின்னால் அவனுடைய தந்தை பொத்தென்று படுக்கையில் விழுந்த சப்தம், அவன் வெளியேறிய போது காதுகளில் விழுந்திருந்தது. படிக்கட்டுகளில் அவன், ஏதோ அந்தப் படிகள் சரிவான தளம் கொண்டிருப்பதைப் போல இறங்கியபோது, காலை
நேர சுத்தப்படுத்தலுக்காக மாடி அறையை நோக்கி மேலேறிக் கொண்டிருந்த அவனுடைய வேலைக்காரியைக் கடந்தான். 'ஏசுவே' என்று கத்தியபடி அவள் முகப்புத் துணியால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஆனால் அதற்குள் அவன் சென்றுவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக, சாலையைக் கடந்து, தண்ணீரை நோக்கி உந்தப்பட்டு அவன் விரைந்தான். ஏற்கெனவே அவன் பாலத்தின் கிராதிகளை, பசியால் வாடும் மனிதன் உணவை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதுபோல, பற்றியிருந்தான். ஒரு உடற்பயிற்சி வித்தைக்காரனைப் போல - அவனே அப்படியான ஒரு ஆளாக தன் இளமையில் ஒரு சமயம், பெற்றோர்கள் பெருமிதப்படும்படி இருந்திருக்கிறான் - அவன் அதன்மீது ஊசலாடினான். பிடிமானம் தளர்ந்து, அவன் இன்னமும் பற்றிக் கொண்டிருந்த சமயத்தில், பஸ் ஒன்று வருவதை,
அவன் விழுவதால் ஏற்படும் சத்தத்தை அது சுலபமாக அமுக்கி விடுமென்பதை, கிராதிகளுக்கிடையே ரகசியமாக அறிந்ததும், தாழ்ந்த குரலில் : "அன்புப் பெற்றோரே, நான் எப்போதுமே உங்களை நேசித்திருக்கிறேன் - ஒரே மாதிரியாக'' என்று கூறியபடி குதித்தான்.

இந்தச் சமயத்தில் பாலத்தின்மீது முடிவுறாத போக்குவரத்து தொடர்வரிசையாக தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.



ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)




இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய படைப்பாளி காஃப்கா. பகட்டுகளற்ற, ஆனால் புதிர்கள் நிறைந்த மொழி இவருடையது.

1883- ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செக்கோஸ்லோவாகியா நாட்டின் தலைநகரான ப்ராகில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். யூதர், தாய்மொழி ஜெர்மன். அவருடைய மொழி செக் நாட்டவரிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தியது. அவரின் இனமும் மதமும் ஜெர்மானியர்களிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தின. 'தனிமை', அவருடைய
படைப்புலக ஆதாரங்களில் ஒன்று.

ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி, தனிமை, காதல் என தன் வாழ்வில் அனுபவித்த பிரத்யேக நிலைகளினூடாகவே தம் படைப்புலகை உருவாக்குகிறார். அதன் மூலம் தம் கால மனித வாழ்வில், அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களைப் படைப்பில் உறைய வைக்கிறார். இந்த முகங்களில் தெரியும்
தன்னுடைய சாயல்களை, அவருடைய படைப்புலகோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாய் உணர்கிறான்.

1917-ஆம் ஆண்டு அவரை பீடித்த எலும்புருக்கி நோய் காரணமாக, 1924 - ஜூன் 3-இல் இறந்தார். அவருடைய வாழ்நாளில் சிறிய படைப்புகள் மட்டுமே வெளிவந்திருந்தன. முற்றுப் பெறாத மூன்று நாவல்களும் அவரின் மரணத்திற்குப் பின்னரே வெளிவந்தன.

'தீர்ப்பு' - காஃப்காவின் முழுமையான முதல் படைப்பு. இக்கதையை, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை ஒரே மூச்சி எழுதி முடித்தார். இது, அவருடைய படைப்புலகின் அடிப்படை அம்சங்களனைத்தும் ஒன்று திரண்டு அடர்த்தியாக உருக்கொண்ட கதை. மேலும் இக்கதையில் அவரின் படைப்புலகப் பிரச்சனைகளில் ஒன்றான "தந்தை - மகன் போராட்டம்' அதன் ஆழத்தைத் தொட்டிருக்கிறது.

காஃப்காவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையேயான நிஜ உலக உறவின் தன்மைகள் இப்புனைவில் இலக்கிய முகம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காஃப்காவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

காஃப்காவின் மற்றொரு கதையான 'கிராம மருத்துவர்', நனவுலகும் கனவுலகும் முயங்கி முகிழ்த்த பிரத்யேகமான காஃப்கா உலகக் கதை. 1919-ஆண்டு எழுதப்பட்டது.

- சி.மோகன்

நூல்: கதையின் திசைகள் (10 உலகச் சிறுகதைகள்) - தமிழில் சி.மோகன்

வெளியீடு: அகல்
விலை ரூ.90

Monday, October 31, 2011

ராணி எறும்பு




28


முதலில் ஒரு எறும்பு வந்தது. அடுத்து மூன்று எறும்புகள், பத்து எறும்புகள், முப்பது எறும்புகள், நூறு எறும்புகள் எனச் சீரற்ற வரிசையில் வந்தன. புதருக்கு அருகில் குழந்தை விறைத்து கிடந்தது. கை, கால், தலை, வாய், கண், வயிறு, இடுப்பு ஆங்காங்கே கலைந்தேறி எறும்புகள் புற்றுக்கு இழுத்து வந்தன. முட்டைகளைச் சுமந்திருந்த ராணி எறும்பு தன் ஆறு கால்களையும் அசைத்து வந்து குழந்தையை ருசித்தாள். வயிறு நிரம்பியதும் மற்றவற்றை உண்ண அனுமதித்தாள். காத்திருந்த வேலைக்கார எறும்புகள் அடுத்து மொய்த்தன. எல்லாவைக்குள்ளும் குழந்தை கரைந்து போனது. உண்ட மயக்கம் தெளிவதற்குள் அனைவரையும் அழைத்து ராணி உத்தரவிட்டதன் பேரில் ருசி கொண்ட எறும்புகள் புதர்தோறும் இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. குழந்தை கிடைக்காதபோது வாய் பிளந்து கிடக்கும் பெண்களை இழுத்து வருகின்றன.

Monday, March 7, 2011

சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்தித்த புலி




27




புராதானத் துப்பாக்கி சேகரிப்பாளன் வீட்டிற்குச் சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தேன். ஒவ்வோர் அறையாக அழைத்துச் சென்று "இது திப்புச்சுல்தான் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி. இது முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி. இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி' என்று சேகரிப்பாளன் ஒவ்வொரு துப்பாக்கியாக அறிமுகப்படுத்தியபோது அந்தந்தத் துப்பாக்கியால் கொல்லப்பட்ட மனிதர்களும், விலங்குகளும் என்னோடு கைகுலுக்க கைகளையும் கால்களையும் நீட்டின. எனக்கு எப்போதுமே செத்தவையோடு உறவு வைத்துக்கொள்ளவே பிடித்ததில்லை. அது போகிற போக்கில் சும்மா ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போகிற அளவில் இருப்பினும்கூட. அதனால் உங்களையெல்லாம் மீண்டும் சுட்டுவிடுவேன் என்பதுபோல முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டு வேறோர் அறைக்கு வந்தேன். எனக்குத் தேநீர் எடுத்து வருவதற்காகச் சேகரிப்பாளன் மற்றோர் அறைக்குச் சென்றான். தனியாகவே நான் துப்பாக்கிகளைப் பார்த்தேன். அப்போது என்னை ஓர் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கி அதிகம் கவர்ந்தது. அந்தத் துப்பாக்கியைத் தூக்கி அதன் வெடிகுழல்களைப் பார்க்க வேண்டும் என்று ஓர் உந்துதல் ஏற்பட்டது. ஏனென்றால் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கியில் மான், பறவை போன்ற மென்மையானவற்றைச் சுடப் பயன்படும் வலப்பக்க வெடிகுழாய் கச்சிதமாக வழுக்கிப் போகும் ஓர் உருளையாக நீளும். சிங்கம் புலி போன்றவற்றைச் சுடப் பயன்படும் இடப்பக்க வெடிகுழாய் பாறையைக் குடைந்து போன்ற உருளையாக நீளும். இந்த வெடிகுழல்களில் கண் வைத்துப் பார்க்கும்போது ஒரு யானை காட்டில் நெடும்பயணம் மேற்கொள்வதுபோன்ற துள்ளலைக் கொடுக்கும். அதற்காகவே அந்தத் துப்பாக்கியின் வெடிகுழல்களுக்குள்ளும் கண் வைத்து பார்த்தேன். வலப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது யாத்திரிகனாக காலத்தின் நீண்ட தொலைவுக்குப் போய் வந்திருந்தேன். இடப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது ஒரு புலி உயிரோடு படுத்துக்கொண்டு என்னைப் பார்த்து உறுமியது. பேரதிர்ச்சியோடு, "எப்படிக் குழலுக்குள் உயிரோடு இருக்கிறாய்? எத்தனை ஆண்டுகளாய் இப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டேன். அதற்குப் புலி "பல ஆண்டுகளாக என்னை யாருமே சுட முயற்சிக்கவில்லை. அதனால் நேராக நானே குழலுக்குள் வந்து கிடக்கிறேன். அப்போதும் யாரும் சுடவில்லை'' என்றது. எனக்குள் தன்மான உணர்ச்சி, வீர உணர்ச்சி, வேட்டைப் புத்தி எல்லாம் சேர்ந்து அசுர வேகமெடுத்தது. குறி வைப்பதற்கு அவசியமில்லாததால் தோட்டாவைப் பூட்டி அழுத்தானை அழுத்தினேன். வெளிப்பட்ட தோட்டாவில் தேநீர் கொண்டு வந்த சேகரிப்பாளன் இரத்தம் தெறித்துச் செத்தான். வெடிப்பு சத்தத்தைவிட சத்தமாய்க் கதறியவாறே துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டு சேகரிப்பாளனை நான் தூக்கப்போனபோது, குழலிலிருந்து கீழே குதித்திருந்த புலி சிந்தியிருந்த தேநீரை மெதுவாகக் குடித்துவிட்டு "இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தோற்கிறார்கள்'' என்றவாறே எங்கோ சென்று மறைந்தது. என்னைக் கொலைக்காரனாக மாற்றிவிட்ட அந்தப் புலியைக் கொல்ல வேண்டும் என்று எதிர்கொண்ட ஒவ்வொரு தினத்திலும் தேடித்தேடி கடைசியில் அதைக் கண்டும்பிடித்தேன். ஆனால் அதை நெருங்கிக் கொல்ல முடியாதளவு அது சென்ற ஞாயிற்றுக்கிழமையிலேயே ஒளிந்திருக்கிறது.

Sunday, March 6, 2011

பூத உடல்




26


"புகழ்வாய்ந்த என் நண்பா! நீ எப்படியேனும் கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்துப்போய்விடு. உன்னை என் நண்பனோடு வந்து ஒரு முறை சந்தித்திருக்கிறேன். நீ என் நண்பனோடு பேசும்போது என்னையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாய். என் நண்பன் உன்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டபோது இரு பக்கத் துணைக்காக என்னையும் அழைத்து என் தோள் மீது கை போட்டுக் கொண்டு நின்றாய். எனக்கு இவையே போதும். இப்போது எனக்கு உன் பூத உடல் அவசியம் தேவைப்படுகிறது. அதனால் நீ சீக்கிரம் செத்துப் போய்விடு. உன் வீட்டார் உன் பூத உடலை எரித்தாலும், நான் எரிக்காமல் போகுமிடமெல்லாம் பத்திரமாக அதைத் தூக்கிப் போவேன். பின் தேதியிட்டு சொல்ல வேண்டிய என் புகழ்பாடும் பல நூறு கதைகள் உன்னிடம் சொல்வேன். அந்தக் கதைகளையெல்லாம் நீ என்னைப் புகழ்ந்து சொன்னதாக நம்ப வேண்டும். யாரையாவது சந்திக்கும் நேரங்களில் அவ்வப்போதைய நிகழ்ச்சிகளுக்கேற்ப கற்பனையை விரிவாக்கி அந்தக் கதைகளை நீட்டிச் சொல்லிக் கொண்டே செல்வேன். நீயும் சமத்துப் பிணமாய்ச் சிறு முகக் கோணலையும் காட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமாய் நான் சிரிக்கிற நேரத்தில் நீயும் சிரிக்க வேண்டும். அதுவும் இருவர் சிரிப்பும் ஒரேமாதிரியான
உதடுகள் பிளப்பதுபோல இருக்க வேண்டும். அய்யோ... இது சிரமமாயிற்றே என்று கவலைப்படாதே. பிணம்போல சிரிக்க பல நாள்களாகவே நான் பழகி வருகிறேன்.''

Saturday, March 5, 2011

கலையும் பொழுது



25

செத்துப்போன கண்களோடு ஒரு பொழுது, அவன் கண்களுக்குள் ஊடுருவிப் பேசியது:
"வெறுக்கத்தக்க புழுவாக ஒரு வீட்டு வாசலில் துடைப்பத்தால் இப்போது நீ அடி வாங்குகிறாய். மரக்கிளையில் உட்கார்ந்து ஒரு குருவி உன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் மனிதன்.''
"இல்லை. இப்போது நீ ஆப்கனில் வெடிகுண்டு வெடித்துச் சிதறிக்கிடக்கிறாய். உன் குழந்தைக்காக நீ வாங்கியிருந்த புதுச்சட்டையில் இரத்தம் ஊறிக்கொண்டிருக்கிறது.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் இந்தியன். என் பெயர் ஞாயிறு. எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.''
"இல்லை. இப்போது நீ ஒரே சமயத்தில் இருவரோடு விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறாய். உன்னைப் பிடிக்க காவலர்கள் படியேறி வந்துகொண்டிருக்கிறார்கள்.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் ஆண். ''
"இல்லை. இப்போது நீ ஒரு கோயில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய். பல நாளாய் யாருக்கும் தெரியாமல் அழுக்குக் கோணியில் நீ சேர்த்து வைத்திருந்த கோடி ரூபாயைப் பறிக்க உன்னை ஒருவன் நெருங்கி வருகிறான்.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் கணித நிபுணன்.''
"ஆமாம்''
"ஆமாம். ஆமாம். நான் உன் முன்னால்தான் உட்கார்ந்திருக்கிறேன். என் பெயர் ஞாயிறு. நான் கணித நிபுணன்.''
"இல்லை. இப்போது நீ ஒரு கோழிக்குஞ்சு. ஒரு பருந்து அதிவேகத்தில் உன்னை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது.''
"...''
"...''

Friday, March 4, 2011

சிரிப்புவெட்டி




24


இரும்பில் வேண்டாம் என்று தங்கத்தில் எனக்காக ஒரு கோடாலி செய்துவைத்திருக்கிறான் என் அருமை நண்பன். என் சிரிப்புச் சத்தம் அவனுக்கும் மட்டும் எப்படியோ கேட்கும். கோடாலியோடு வருவான். ஓங்கி என் உதட்டில் ஒரு வெட்டு வெட்டுவான். ஒரு முறை வெட்டிய இடத்தில் மறுமுறை வெட்டுவதில்லை. இவ்விதிமுறையோடு வெட்டிவெட்டியே மேலுதடையும் கீழுதடையும் முற்றாய்த் துண்டித்து முடித்து, முகத்தின் மற்ற உறுப்புகளையும் சிதைத்து விட்டான். தீரா வலியெல்லாம் ஒருபுறமிருக்க ஒவ்வொரு முறை அவன் சிதைக்கையிலும் எனக்குத் தோன்றும் ஒரே ஆச்சரியம் அவன் எப்படி என் சிரிப்பைக் கண்டறிகிறான் என்பதுதான். ஏனெனில் அவன் எப்போதும் கடலின் நீர்மட்டத்தின் மேலேயே அலையாய் அலைந்துகொண்டிருக்கிறான். நான் அவனைச் சிறிதும் கவனிக்காமல் கடலின் அடியாழத்திலேயே வாழ்கிறேன். எனக்கும் அவனுக்கும் நான்காயிரம் மீட்டர் ஆழத் தூரம் இடைவெளி. இத்தூரத்தில் என் சிரிப்புச் சத்தம் எப்படிக் கேட்கும்? அதுவும் நான் சிரிக்கவே சிரிக்காதபோதும். மீனின் மூச்சுமுட்டைகள் போல என் சுழிப்பு ஏதாவது கீழிருந்து மேலே வளையமாகப் போகிறதா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. சுழிப்புக்காக என் உதட்டில் அவன் முதல்முறையாய் வெட்டியபோதிலிருந்தே அவன் அறியாமைக்குப் பயந்துகொண்டு காட்டெருமையின் தோலைப் போல எல்லாப் பாகங்களையும் இறுக்கமாய் முறுக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். இவற்றையெல்லாம் தவிர வேறு வழிகளும் இல்லாதபோது எப்படி அவன் மட்டும் என் சிரிப்புச் சத்தத்தைத் துல்லியமாய் அறிகிறான் என்றுதான் தெரியவில்லை. இப்போதும்கூடப் பாருங்கள். ஏதோ அவன் எழுதியிருப்பான்போல. மேலே அலையும் அவனுக்கு என் சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கிறது. இறங்கி வந்தவன் பல நாளாய் அடியாழத்திலேயே அழுகிக் கிடக்கும் என் பிண உடலை ஆவேசத்தோடு சிதைத்துவிட்டுப் போகிறான். என் அழுகலின் தெறிப்பு உங்கள் மேலும் பட்டிருக்கலாம். துடைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, March 2, 2011

தோட்டாக்களின் புறப்பாடு




23


இந்த விபரீதத்தை முயற்சிக்காதீர்கள் என்று அவன் சொல்லியதை நான் கேட்கவில்லை. இருட்டறையில் உட்கார்ந்து கண்களை மூடினேன். தீவிரவாதிகள் தங்கியிருக்கும் கட்டடத்தை இராணுவத்தினர் சுற்றி முற்றுகையிடுவதுபோல என் மூளையிலிருந்து முழு குவிப்பையும் இறக்கி என் வலக்காலின் கட்டைவிரலை ஆக்கிரமிக்கச் செய்தேன். அந்த விரல் நகத்தின் அடி நுனியையும் குவிப்புகள் முழுமையாய்ச் சுற்றி வளைத்து முடித்த பிறகு இடக்கையின் நடுவிரல் நகம், வலக்கை மூட்டு, இடக்கால் மூட்டு, வலத் தொடை எலும்பு என்று ஒவ்வொன்றாய் ஆக்கிரமிக்க வைத்துப் பார்த்தேன். ஒன்றுமாகாமல் வெகு இயல்பாக இருந்தது. அப்போதுதான் அந்த விபரீதத்தையும் முயற்சித்துப் பார்த்துவிடுவது என்று எண்ணி முயன்றேன். மூளையிலிருந்து குவிப்பை இறக்காமல் அதை முழுமையாய் மூளைக்குள்ளேயே செலுத்திப் பார்த்தேன். எல்லை ஆரம்பத்தைக் கடந்து சிறு தூரம் சென்றதும் மூளை குழம்புவதுபோல் உணர்ந்தேன். உடனே பயந்து குவிப்பைத் திரும்பப் பெற்றேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் குவிப்பைச் செலுத்தினேன். பாதித் தூரத்தில் மீண்டும் மூளை குழம்பியது. அவசரமாக உடனே திரும்பப் பெற்றேன். மூன்றாம்முறை பயத்தைவிட்டு திரும்பப்பெறாமல் மூளைக்குள் குவிப்பைச் செலுத்திக் கொண்டே இருந்தேன். முற்றிலும் மூளை குழம்பிப்போனது. தற்போது நிர்வாணப் பைத்தியக்காரனாகத் தெருவில் அலைந்துகொண்டிருக்கும் என்னைக் கேட்டால், துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வரிசையாய்ப் புறப்பட்டு உயிர்களை எப்படிப் பறிக்கி
ன்றன என்கின்ற கதையைத் தெளிவாகச் சொல்வேன்.

Sunday, February 27, 2011

சந்திர யானை



22



தும்பிக்கையை மேலே தூக்கி; காற்றை உள்ளிழுத்து; தட்பவெப்பநிலையை வழக்கம்போல்தான் அன்றும் ஆராய்ந்தது அந்தக் காட்டு யானை. ஆனால் அதன் இழுவிசையில் சந்திரன் பெயர்ந்து வந்து தும்பிக்கைக்குள் ஓடிப்போய் வாய்க்குள் வந்துவிட்டது. அதிர்ச்சியோ ஆச்சரியமோ கொள்ளாமல் அந்த யானை சந்திரனைக் கடித்துக்கடித்து ஒளிநீராக்கி தும்பிக்கையை மேலே உயர்த்திப் பீய்ச்சியடித்தது. ஒளியூற்று மிகவும் பிரகாசமாக நீண்ட தூரம் மேலே போய் மீண்டும் தரைக்கு வந்தது. இதில் அதீத மகிழ்ச்சிக்கு ஆட்பட்டு அது மீண்டும்மீண்டும் ஒளிநீரை உறிஞ்சியும் மேலே பீய்ச்சியடித்தும் ரசித்தது. ஓயாத ரசிப்பின் ஒரு நிலையில் வழக்க பழக்கத்தில் ஒளிநீரை உறிஞ்சி அதன் முதுகின் மேலேயே பீய்ச்சிக் கொண்டது. முதுகெங்கும் வழிந்த ஒளிநீரை மீண்டும் அது உறிஞ்ச முனைந்தபோது உருண்டு திரண்டு சேர்ந்திருந்த சந்திரன் யானை முதுகில் பாகனைப்போல உட்கார்ந்துகொண்டு அதனை விரட்டியது. மிரண்டு மேலேமேலே சென்ற அந்தப் பெரிய கறுப்பு யானை முகத்தையும் வாலையும் மறைத்துக் கொண்டு இன்றும் பாகனைச் சுமந்து அந்தரத்தில் அலைகிறது.

Thursday, February 24, 2011

எரிப்பு




21


மூட்டப்பட்டிருந்த தீயில் அவர்கள் போட்டப் பனம்பழங்கள் எரிந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்கள் எவருக்கும் தீயில் எரிவது பனம்பழங்கள்போலவே தெரியவில்லை. மனிதத் தலைகள் எரிவதுபோலத் தெரிந்தன. ஆனாலும் அவர்கள் யாரும் யாருக்கும் தாங்கள் பார்த்த காட்சியைப் பற்றிச்
சொல்லிக்கொள்ளவே இல்லை. அதேசமயம் எரிந்த அந்த மனிதத் தலைகளைச் சுட்ட பனம்பழங்கள் என்று சொல்லி தின்றும் முடித்தார்கள்.

Thursday, February 17, 2011

தும்பியின் கண்கள்




20



ஒரு புல்லில். அங்கிருந்து வேலியில். அங்கிருந்து செம்பருத்திச் செடியில். அங்கிருந்து மரக்கட்டையில் எனத் தும்பி உட்கார்ந்த இடத்திலெல்லாம் மகன் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் குவித்து வாலைப் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான். மகனின் இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அப்பா தும்பியின் பின்னால்
நின்று உள்ளங்கையை விசிறியைப்போல் வீசிப் பிடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். புழுவை விழுங்கும் மீன்போல் எளிதாக வித்தையைக் கற்ற மகன், அவன் பிடித்த யானைத் தும்பி, ஊசித் தும்பி, ஹெலிகாப்டர் தும்பி என எல்லாவகை தும்பிகள் வாலிலும் நூலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பறக்கவிட்டு விளையாடினான். ஒரு நாள் தும்பி ஒன்று நூலை அதிகம் இழுத்துப் பறப்பதாக உணர்ந்தபோது அதன் வாலைப் பிய்த்துப் போட்டான். வாலறுந்த தும்பி துடித்து நகர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்தபோது விளையாட்டைவிட வன்முறையில் ரசிக்கத் தக்கவை அதிகம் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அன்று முதல் பிடிக்கப்பட்ட எல்லாத் தும்பிகளின் வயிறுகளும் கிழிக்கப்பட்டு குடல்கள் பிதுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. அதில் சலிப்பு தட்டியபோது தலைகள் கிள்ளப்பட்டு அது சிறுநேரம் நீர் சுவடாகத் தெரியும் வரை தரையில் உருட்டி நசுக்கப்பட்டன. அதற்கு மேல் சலிப்பு தட்டி வேறுவகையான வன்முறையில் தும்பியிடம் ஈடுபட புதிய முறை எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை. அதைப்போல அவனால் தும்பியிடம் இன்னொன்றையும் கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை தலை கிள்ளும்போதும் தும்பியின் கண்களில் பயத்தைப் பார்க்க அவன் துடிப்பான். அந்தச் சிறுமகன் நேற்று மதியம் புதுவெள்ளம் அடித்துப் போய்க்கொண்டிருந்த ஆற்றின் கரையில் இலந்தையில் செடியில் உட்கார்ந்த ஒரு தும்பியைப் பிடித்துத் தன் பேரனோடு தலையைக் கிள்ளிக் கொண்டிருந்தபோதும் பயத்தைப் பார்க்க முடியவில்லை. எப்போதும்போல் அன்றும் தும்பி அவன் கையைக் கடிக்காமல் விடவில்லை.

Wednesday, February 16, 2011

பேரலறல்



19



தூக்குப் போட்ட கண்களாக நரம்புகளில் இரத்தங்கள் இறுக்குமளவு அவள் வாயை ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவளைத் திமிற விடாமல் பிடித்து மூட்டையாகத் தூக்கிக் கொண்டு வந்து, பகலில்கூட யாரும் வராது அந்தப் பாழ் கட்டடத்திற்குள் செடிகள் முளைத்திருந்த தரையில் போட்டார்கள். மூச்சிரைக்க எழுந்தவள் அங்கிருந்து மிரட்சியோடு ஓட முயன்றாள். அவளை எட்டிப் பிடித்த ஒருவன், "விபச்சாரமாடி செய்ற... தேவடியா'' என்று அடித்து நொறுக்கி அவள் புடவையைத் தூக்கி குறியைச் செலுத்தி நின்றவாகிலே இயங்கினான். அவனை
அவள் தள்ள முயற்சித்தபோது இன்னொருவன் பின்னால் வந்து அவள் முதுகு பழுக்க அடித்துப் பிருட்டத்தைப் பிளந்து அவன் குறியைச் செலுத்தி இயங்கினான். இரண்டு காட்டெருமைகளிடம் மாட்டிக்கொண்டதுபோல அவள் திமிறிக் கொண்டிருந்தபோது மற்றொருவன் அவள் இடக்கையையும் வேறொருவன் அவள் வலக்கையையும்
கல்லாலேயே தாக்கி அவர்கள் குறிகளைப் பிடித்துக்கொள்ளச் செய்து இயங்கினார்கள். நால்வரின் வெறிச் சத்தத்தால் ஒதுங்கி நின்ற ஐந்தாமவன் கிளர்ச்சியுற்று உடைந்திருந்திருந்த இரண்டு சுவர் பக்கங்களிலும் கால்களை வைத்து ஏறி வந்து அவள் கன்னத்திலேயே அறைந்தறைந்து வாயைத் திறந்து குறியைச் செலுத்தி இயங்கினான். மிருகக் கழிவை ஒவ்வொருவாய் வெளியேற்றிவிட்டு அவர்கள் கிளம்பியபோது ஒருவன், 'பாவம். போனாப் போகுது' என்று ஓர் ஐம்பது ரூபாய்த் தாளை அவள் முகத்தில் வீசியடித்தான். கீறல் இரத்தங்களைத் துடைத்துக்கொண்டே ஆவேசத்தோடு அந்தத் தாளை எடுத்தவள், "உங்களை நீங்களே ஒழுத்துக்கொண்டதற்கு எனக்கெதற்குக் காசு?'' என்று அதைத் தூக்கியெறிந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பாழ் சுவர்களிலிருந்து கீறிப்பிள்ளை, ஓணான்கள், பல்லிகள் எல்லாம் அதிர்ந்து ஓட ஒரேயொரு பேரலறல்தான் கேட்டது.

Monday, February 14, 2011

எரிநட்சத்திரம்



18


இரவில் அவன் கடற்கரையில் நின்றிருந்தான். அப்போது எரிநட்சத்திரம் ஒன்று கடலில் எங்கோ தொலை தூரத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த எரிநட்சத்திரத்தைப் பிடிக்க முயற்சிப்பதைப் போன்ற மடத்தனம் வேறெதுவும் இல்லையென அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஓடிப் பாய்ந்தான். இதைப்போல சென்றமுறை அவன் ஓடி பாய்ந்ததில்தான் ஒரு பாறையில் வெட்டுப்பட்டு முன்நெற்றியில் பதினெட்டுத் தையல்களுடன் மருத்துவமனையில் சுயநினைவின்றிக் கிடந்தான்.

Sunday, February 13, 2011

தலைஞாயிறு




17


பனி கொட்டிய அதிகாலை கருக்கலில் அவன் கடப்பாரையோடு வந்தான். ஓரடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் வலப்புறச் சாலையோரமாகப் பள்ளம் தோண்டிக் கொண்டே போனான். கடப்பாரையை ஒவ்வொரு முறை அவன் இறக்கியபோதும் சந்தோஷப் பூரிப்போடு மண் பிளந்துகொண்டு அவனை உற்சாகம் மூட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் கிழக்கு திக்கில் போவதை எதேச்சையாய்க்
கவனித்தேன். சிறு வட்ட நெருப்பாய்ப் புறப்பட்ட சூரியன் மேலே செல்லச் செல்ல பிரம்மாண்டக் கோளமாகி மீண்டும் தூரம் செல்லச் செல்ல சிறுவட்டமாகி கிழக்கு வானை மஞ்சள் ஒளியால் எரிக்கத் தொடங்கி மேற்குத் திக்காக நகரத் தொடங்கியது. எல்லாவற்றிற்கும் விடுப்புச் சொல்லிவிட்டு அவனையே பின் தொடர்ந்து சென்று கவனித்தேன். அவனின் ஒவ்வொரு நகர்தலுக்கேற்பவே சூரியனின் நகர்தலுமிருந்தது. உச்சுக்குச் சூரியன் வந்திருந்தபோது ஒரு வீட்டார் அவர்கள் வாசல் பக்கம் பள்ளம் தோண்டக் கூடாது என்று சண்டை போட்டார்கள். அவன் பதிலேதும் சொல்லாமல் கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு ஓர் ஓலைக் குடிசைக்குள் சென்றான். எங்கிருந்தோ திரண்டு வந்த மேகங்கள் அவசரஅவசரமாகச் சூரியனை மறைத்துக்கொண்டன. நீராகாரம் குடித்து முடித்து அவன் வெளியில் வரும்வரை மேகங்கள் தங்கள் உடும்புப் பிடியை விடவே இல்லை. மீண்டும் வந்து அவன் கடப்பாரையை எடுத்து குறுக்காகத் தோண்டிக் கொண்டுபோனபோது அசுர வேகத்தோடு மேகங்கள் கலைந்து போயிருந்தன. குறுக்கில் முடித்து இடப்புறச் சாலையோரமாகக் கடப்பாரையை இறக்கிக் கொண்டிருந்தபோது மேற்குத் திக்கில் சூரியன் சரிந்து நகர்ந்தது. நெடுகத் தெருவெங்கும் தோண்டி முடித்து மாலை கருக்கலில் கடப்பாரையைத் தோளில் தூக்கிக்கொண்டு போனபோது அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அதே கிழிப்பின் இடைப்பட்ட பகுதி வழியே நிலவும் சிறு வெண்ணொளிப் புள்ளியாய்ப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

Saturday, February 12, 2011

மயக்கம்



16


எரியும் வெயிலில் சிறுவர்கள் ஓணான் தேடி புதர்புதராய் குச்சிகளால் தட்டிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவர்களைத் தேடி கத்திகளோடும் உருட்டுக் கட்டைகளோடும் வீடுவீடாய்த் தட்டிக்கொண்டிருந்தார்கள். முள் செடியிலிருந்து தப்பியோடிய ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தபோது அவர்களும் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ஓணான் வாயில் புகையிலையைத் திணித்து கீழே விட்டதும் அது மரண மயக்கத்திற்குப் போய் பேயாட்டம் ஆடுவதைச் சிறுவர்கள் ரசித்துக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவன் கணவனின் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்துக்கொண்டிருக்க மற்றொருவன் கணவனின் தலையைக் கட்டையால் அடித்து நொறுக்கினான். ஆட்டத்திற்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஓணானின் வாலைப் பிடித்து ஒரு சிறுவன் இராட்டினம்போல் சுற்றித் தரையில் அடித்தபோது அவர்கள் அவளிடமிருந்து பச்சிளம் குழந்தையைப் பறித்து சுவரில் அடித்துத் தெறிக்க வைத்தார்கள். இரத்தம் வெளியேறி குடல் பிய்ந்து போயும் ஓணானை விடாமல் கற்பிதங்களால் ஏறியிருந்த வெறியோடு சிறுவர்கள் மிதித்துமிதித்து அதை மண்ணாக்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அவள் முகத்தைச் சிதைத்து, முலையைச் சிதைத்து, யோனியையும் சிதைக்க நம்பிக்கையை உருவினார்கள்.

Thursday, February 10, 2011

கரம்



14


காவலர்கள் எல்லோரும் அன்று பாதுகாப்பாய் உணர்ந்தார்கள். காலைப் பிடித்துக் கெஞ்சி, பெரியவரைச் (பெரிய ரௌடியைச்) சிறையில் சில நாள்கள் இருக்கச் சம்மதிக்க வைத்த எஸ்.பி. மீது டிஜிபிக்கும் அளவில்லா மரியாதை. சொன்னபடி பெரியவர் நடந்துகொண்டதால், பெரியவர் கேட்ட வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய கடமை காவலர்கள் மேல் விழுந்தது. சாதத்தில் ஒரு கறுப்பு சோறு கிடந்தாலும் வெட்டத் துள்ளும் ஏழெட்டுக் கொலை செய்த ரெüடிகள் எல்லாம்கூட பெரியவர் உள்ளே இருப்பது தெரிந்ததும் சத்தம்போடாமல் அடங்கிப்போனது ஆச்சரியம்தான். அன்றிரவு சரியாகப் பத்தரை மணி. சிறையின் ஒவ்வொரு கதவின் முன்னாலும் நூறு ரூபாய்த் தாளை நீட்டியவாறே ஒரு கரம் வந்தது. 'சல்யூட்' அடித்தபிறகே தாளைப் பெற்றுகொண்டு கதவுகளும் நேர்மையை நிலைநாட்டின. இறுதியாகப் பெரியவர் அறையில் தாளெதுவும் நீட்டாமல் அந்தக் கரம் நுழைந்தபோது அவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். படுக்கும் முன் வீட்டில் விசாரிப்பதுபோல குழந்தைகளைப் பற்றியெல்லாம் நிதானமாக விசாரித்து முடித்து, அந்தக் கரத்திற்குப் பெரியவர் வழக்கம்போல் முத்தமிட்டுத் தொடங்கினார். முனகல் சத்தங்களை அறிந்திராத அங்கிருந்த சுவர் பல்லிகள் ஒருவித நடுக்கத்தோடே இரவு முழுவதும் அலைந்துகொண்டிருந்தன. விடியலுக்குப் பிறகு அறையிலிருந்து வெளியே வந்த அந்தக் கரம், அன்றிரவும் சொல்லியவாறு குரும்பாட்டுக் குழம்போடு வந்து கதவுகளைத் திறந்தது.

Wednesday, February 9, 2011

மூங்கில் நதி



13


இரண்டு ஊர்களைப் பிரித்து ஓடிய நதியும், அதே நதியின் குறுக்கே கட்டப்பட்டு இரண்டு ஊர்களை இணைத்து ஓடிய மூங்கில் பாலமும் முன்னொரு காலத்தில் பின்வருமாறு பேசிக்கொண்டன.
மூங்கில் பாலம்: "நதியாக நானும் சுழித்தோடி இருக்கிறேன்.''
நதி: "பொய். என் மீது உள்ள பொறாமையால் அப்படிச் சொல்கிறாய்.''
மூங்கில் பாலம்: "என்னை நம்பு. ஒரு காலத்தில் எனக்குள்ளும் நதி சுழித்தோடியிருக்கிறது. பச்சை நிற நதியாய் எழுந்தெழுந்து வான் தொட்டிருக்கிறேன்.''
நதி: "பச்சை பொய்''
மூங்கில் பாலம்: "தயவு செய்து நம்பு. வெட்டுக் காலத்திற்குப் பிறகுதான் மணல் நிறத்தில் இப்படி வற்றிப் போய்க் கிடக்கிறேன்.''
நதி: "வற்றிப் போயிருக்கிறாய் என்றால் நம்புகிறேன். ஏனென்றால் நானும் வற்றிப் போவது உண்டு. ஆனால் மீண்டும் புதுவெள்ளமாய் நான் பெருக்கெடுத்து ஓடுவேன். நீயும் அதைப் போல் ஓடிக் காட்டு.''
மூங்கில் பாலம்: "என்னால் அப்படியெல்லாம் மீண்டும் ஓடிக் காட்ட முடியாது. ஒரு முறை வற்றினால் வற்றியதுதான்.'' என்றதும் "நீ பொய்யன். உன் குட்டு வெளிப்பட்டுவிட்டது பார்த்தாயா?'' என்று வளையம் வளையமாய்ச் சிரித்த நதி அன்று முதல் மூங்கில் பாலத்தை எங்குப் பார்த்தாலும் "பொய்யன், ஏமாற்றுக்காரன்'' என்று உரக்கக் கேலிப் பேசியவாறே காலம்காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூங்கில் பாலமும் அன்று முதல் அதன் மேல் படும் பாதம் ஒவ்வொன்றிடமும் "கிரீச்... கிரீச்' என்று, அதாவது "சொல்லுங்கள்.... நீங்களாவது சொல்லுங்கள்'' என்று கெஞ்சி சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

Tuesday, February 8, 2011

யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்



12

இருண்டிருக்கும் பாழடைந்த மண்டபத்தில் வைத்து என்னை அவர்கள் இரத்தம் வழிய கை வேறாக; கால் வேறாக: தலை வேறாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்: "என்னை நீர் வேறாக, நிலம் வேறாக, காற்று வேறாக, நெருப்பு வேறாக, ஆகாயம் வேறாகப் பிரிக்க வேண்டும்' என்று. இயற்கையின் செயற்கையாகவே எல்லாம் பிறக்கின்றன. மடிகின்றன. நானும் இயற்கையின் செயற்கையாலேயே பிறந்தேன். இயற்கையின் செயற்கையாகவேதான் மடிய வேண்டுமா? எந்த இயற்கையின் கலவையாகவும், எந்த இயற்கையின் மாதிரியாகவும் இருக்க எனக்கு விருப்பமில்லை. ஐம்பூதங்களில் தனித்து ஏதாவதொரு பூதமாக வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன். என் மாதிரி உடலிலிருந்து எப்பூதமும் கலவாத ஏதாவதொரு பூதத்தைப் பிரித்தெடுக்க யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்.

Monday, February 7, 2011

வெளியேற்றம்



11


வெண்ணிற மேகத்தை இரண்டு கைகளாலும் பறித்து வந்து அவனும் அவளும் வீட்டிற்குள் விட்டார்கள். கலைந்துபோகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வீட்டுக் கூரையையே வானமாக்கிக்கொண்டு மேகம் அலைய ஆரம்பித்தது. வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வாசற் கதவு, சன்னல்கள் என வீட்டிலிருந்த அனைத்துத் திறப்புகளையும் அடைத்தார்கள். பிரபஞ்ச வலமாக முன்னறை, படிப்பறை, படுக்கையறை, சமையலறை என நான்கு அறைகளுக்குளேயே மேகம் மாறிமாறி இரவு பகலாகச் சுற்றி வந்தது. தெருவிற்குப் போக வேண்டிய அவசியத்தில் வாசற் கதவைக் கீறலாய்த் திறந்து ஓர் எலியைப் போல நுழைந்து போய்வர பழகிக்கொண்டார்கள். எதேச்சையாய் ஒரு நாள் வான் மேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வீட்டிலுள்ள மேகத்திலும் ஏற்படுவதைக்
கவனித்தபோது அவர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பல முறை சலிப்பு தட்டாமல் தெருவிற்கும் வீட்டிற்குமாகப் போய்வந்து இரு மேகங்களையும் ஒத்துப் பார்த்தார்கள். மாற்றம் எதையும் கண்டறிய முடியாத சந்தோஷக் களைப்பிலேயே அன்றிரவு அயர்ந்து தூங்கினார்கள். அதிகாலையில் திடீரென வீட்டிற்குள் கன மழை கொட்டியது. முழுதாய் நனைந்து அவர்கள் எழுந்தபோது எல்லாப் பொருள்களுமே நனைந்து வீடே வெள்ளத்தில்
மிதப்பதைப் போலக் காட்சியளித்தது. எல்லையில்லா மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டு குதித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் மழை கொட்டியபோதும் மேக வெளியேற கதவையோ, சன்னல்களையோ திறக்காமல் வீட்டிற்குள்ளேயே குடைபிடித்து உட்கார்ந்து சமாளித்தார்கள். ஆனால் மற்றொரு நாள் புயல் வீசியபோது அவர்களால் எதையுமே தடுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Sunday, February 6, 2011

அழி



10


குற்ற உணர்ச்சி கொள்வதற்காகவே அவன் குற்றங்கள் புரிபவன். முதன்முதலாய் ஒருவனைத் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய வைத்தபோது, குற்ற உணர்ச்சியால் பல இரவுகள் தூங்காமல் பைத்திய நிலையில் செத்தவனின் நாக்கு தொங்கலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். பிறகு போகப் போக, ஒருவர், இருவரைக் கொன்றதற்காக எல்லாம் உணர்ச்சிக் கொள்ளமுடியாமல் நூறுநூறு பேராய்க் கொன்றபோது கொஞ்சம் உணர்ச்சி கொண்டான். இப்போது அதுவும் போய் இனம் இனமாய் அழித்தும் எதுவும் கொள்ள முடியாமல் உள்ளதனைத்தையும் மொத்தமாய் அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்குக் குற்ற உணர்ச்சிதான் முக்கியம்.

Saturday, February 5, 2011

புனல்



9
நேர் மேலாக இரண்டு கைகளையும் நேர் கீழாக இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுத்து பெண்ணாக நீந்திப் போகின்றன புனலின் இரு கரைகள். நேர் மேலாக இரண்டு கைகளையும் நேர் கீழாக இரண்டு கால்களையும் நீட்டிக் குப்புறப்படுத்து ஆணாக நீந்தி வருகின்றன அதே புனலின் இரு கரைகள். பின்புறமாக நீந்தி பெண் கடலில் விழுகையில் முன்புறமாக நீந்தி ஆண் மலையேறுகிறான். முன்புறமாக நீந்தி பெண் மலையேறுகையில் பின்புறமாக நீந்தி ஆண் கடலில் விழுகிறான். நீரில்லாக் காலங்கள் உண்டு. நீச்சலில்லாக் காலங்கள் இல்லை.

Friday, February 4, 2011

தண்டனை



8

இருள் கசிந்த தனியறையின் பகல் மூலையில் நாற்காலி போட்டு அவர் உட்கார்ந்திருந்தார். வரிசையில் தயங்கி நின்ற பெண்களை எல்லாம் பின்னால் போகச் சொல்லிவிட்டு, விற்றுக்கொள்வதில் அனுபவம் வாய்ந்தவள் அவர் முன்னால் வந்தாள். கச்சுக் கொக்கிகளை வேகமாக அவிழ்த்து முலைகளைத் தொங்கவிட்டு, உள்ளாடையையும் உருவிவிட்டு பாவாடையோடு புடவையையும் தூக்கிக்கொண்டு கால்களை அகட்டி நின்றாள். கண்ணாடியைக் கழற்றுவதுபோல இரண்டு கண்களையும் பெயர்த்துக்கொண்டு நெருங்கிச் சென்று நிதானமாக அவர் பார்வையால் மேலும் கீழுமென ஊடுருவினார். பலமுறை அவர் ஊடுருவிப் பயணத்ததின் தடங்களைப் பார்வைகள் நினைவூட்டின. ஆனால், வகுத்துக்கொண்ட விதியை மீறக்கூடாது என்பதற்காக அவர் முழுதாய் ஆராய்ந்து முடித்து அடுத்தப் பெண்ணை வரச் சொன்னார். தப்பிக்கக் கிடைத்த மிக எளிய விதியை விட்டுவிட மற்றப் பெண்களுக்கும் விருப்பமில்லை. மூன்று மணி நேரத் தொடர் ஆராய்ச்சியின் நிறைவுக்குப் பின் எல்லோருமே மன்னிக்கப்பட்டார்கள்.

Thursday, February 3, 2011

பேரிழப்பு



7


பேரலை, அந்தக் கடற்கரையை உலகின் மிக நீண்ட சவக்காடாக மாற்றிவிட்டுத் திரும்பியபோது அமைதியாய்ச் சடலங்களை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு எவ்வித சீற்றங்களுக்கும் அங்கு இடமில்லாமல் போனது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு குவிந்திருந்த காவலர்களையெல்லாம் மீறி ஒருவன் அப்புறப்படுத்தினான் ஒரே ஒரு
வாழைக்காய்.

Wednesday, February 2, 2011

ஒப்புதல்



6

என் காலை ஆசையாய் நக்கிவிட்டு நாலைந்து அடிகள் போவதற்குள்ளேயே, பூனைக்குட்டியின் கழுத்தைப் பிடித்துத் திருகிப் போட்டுவிட்டான் பூங்காவிற்குள் நுழைந்திருந்த பைத்தியக்காரன். அலறிக்கொண்டே காலை கருக்கலில் அது அடங்கிப்போய்விட்டது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய்ப்பூனை அதன் குட்டிகள் சூழ்ந்து நிற்க, செத்துப்போன குட்டியை நாக்கால் நக்கிக் கொடுத்த படியே 'ஏதாவது செய்... ஏதாவது செய்' என்று என்னை நோக்கி 'மியாவ்...மியாவ்' என அலறியது. எனக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. உயிரோடு என்னைக் கொல்வதுபோல இருந்த அலறலால் பைத்தியக்காரனை அடிக்க ஓடினேன். உடல் முழுவதும் அழுக்கு அப்பி, சடை முடியோடு, அட்டக் கரியாய் இருந்தவனை அருகில் பார்த்ததும் மூண்டிருந்த தைரியம் கலைய, பயந்துகொண்டு அடிக்காமல் திரும்பிவிட்டேன். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு சிமென்ட் பெஞ்சிலேயே நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒருவன், ''வீணாய் அவனை ஏன் அடிக்கப் போகிறாய்? உன் காலை நக்கியதில் ஏறிய விஷத்தால்தான் குட்டி செத்துவிட்டது'' என்றான். எதிர்க்க எனக்கும் மனம் வரவில்லை. ஒப்புக்கொண்டேன்.

Tuesday, February 1, 2011

மூடல்



5


நெஞ்சடைத்துக்கொள்ளும் சந்தோஷ மனநிலையோடு அவன் வீட்டிற்குத் தெரியாமல் சென்றுவிட்டேன். தேநீரால் உபசரித்துவிட்டு உள்ளறைக்குச் சென்றவன், திரும்பி வருகையில் அவன் மண்டையைப் பிளந்து, மூளையைக் கையில் எடுத்துவைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். கால்பாகத் தேநீர் உள்ளிறங்க மறுத்துவிட்டதால் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பானையிலிருந்து சோற்றைத் துடைத்துப்போடுவதுபோல என்னிடமுள்ள சொற்கள் அனைத்தையும் அவனுக்கே துடைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதுபோல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் என்னைப்
பேசவேவிடவில்லை. நெடுநேரம் மூளையாகவே பேசிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் கண்களைத் தொடர முடியாததால் அவன் கையிலிருந்த மூளைக்குத் தாவினேன். மூளையின் நரம்புகள் அனைத்தும் அவனால் செப்பணிடப்பட்ட முடிவற்ற சாலையாகவும் அதில் அவனின் அசுர வாகனம் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் இரத்தம் வெள்ளமாக்கியுமே பயணித்தது. என்னால் மரண அலறல்களைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அசுர வாகனத்தை நிறுத்த எனக்கிருந்த ஒரே வழியின்படி நானும் என் மண்டையைப் பிளந்து மூளையைக் கையிலெடுத்து வைத்துக்கொண்டு என் வாகனத்தை அசுரமாய் ஓட்டினேன். என் வாகன அசுரத்தில் மிரண்டு போனவன் அவசரமாய் அவன் மூளையை வைத்து மண்டையை மூடியபோது என்னையும் அதற்குள் வைத்து
நிரந்தரமாய் மூடினான்.

Monday, January 31, 2011

பார்வை




4


காட்சிகள் எதனையும் தவறவிடக்கூடாது என்பதற்காக பரந்த வெளியின் கண்கள், பெருவெடிப்பை நுட்பமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. கீழ்ப்புறமாக வந்திருக்க வேண்டியது; அகண்ட வெளியில் தவறி, பூமியின் மேற்புறமாக வந்தபோது அனைத்துக் கண்களும் அதில் நிலைகுத்தி நின்றன.

Saturday, January 29, 2011

ஒருவன் மட்டும் நடக்கும் சாலை



3

ஒருவன் மட்டும் உயிரோடு நடக்கும் சாலையாக அது இருக்கிறது. அந்தச் சாலையின் எல்லையில் நுழையும் எவரும் உயிரற்ற பிணமாகவோ அல்லது பிணம் என்ற தகுதிக்கும் உரிமை கொண்டாட முடியாதவராகவோ மாறித்தான் போய் வரமுடிகிறது. உயிரோடிருக்கும் நானும் ஒவ்வொரு முறையும் அந்த நேர் சாலையில் நுழைந்து வளையும் அதன் முடிவிற்கு வரும் வரை பிணமாக மாறிப் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன். என் பிணத்தை என்னையே பார்க்க வைக்கும் அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டும் உயிரோடு பயணிப்பதையும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். எனக்கு இன்னொன்றும் உறுதியாய்த் தெரியும். தன்னை யாரும் நம்பாதது பற்றி அவன் அக்கறையே கொள்ளாமல் இதே தெருவில்தான் "தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். காப்பாற்றுங்கள்' என்று எல்லோர் முன்னிலையிலும் உரக்கக் கத்தியவாறே உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு செத்தான்.