Saturday, January 20, 2018



கறுப்பு நிழல் தேடும் வீடு






உலகின் முதல் படைப்பு எந்த மனநிலையால் உந்தப்பட்டிருக்கும்?
காதல், காமம், சினம், வீரம், முதல் கண்டடைதல் என எதுவாகவும் இருக்கலாம்.
ஆனால், கறுப்பு இலக்கியம் எனப்படும் கறுப்பின மக்களின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம், துயர மனநிலையிலேயே முதல் படைப்பு கருவாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
கால நிலை ஏற்றங்களில் படைப்பின் பரப்பு உலக அளவில் விரிவடைந்துகொண்டே சென்றாலும், கறுப்பின மக்கள் மட்டும் துயரத்தின் கைவிலங்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

லாங்ஸ்டன் ஹியூஸின், 'உலகில் ஒரு வீடு' எனும் கவிதை:


நான் வீடு தேடிக் கொண்டிருக்கிறேன்
இந்த உலகத்தில்
வெள்ளை நிழல்
படியாத ஒரு வீடு
அப்படியொரு வீடு இல்லை
கறுத்த சகோதரர்களே
அப்படியொரு வீடு
எங்குமே இல்லை

வெள்ளை நிழல் எவ்வளவு கொடூர வன்முறை கொண்டது என்பதை சரித்திரத்தின் கண்ணீர்ப் பக்கங்கள் சாட்சியங்களாக உள்ளன. அந்த நிழலின் வன்முறையை நாம் அறியாதவர்கள் அல்ல. அப்படி அறிந்ததை விடுதலையான 60 ஆண்டுகளில் மறந்து போயிருக்கலாம் அல்லது நாம் கறுப்பர்கள் அல்ல எனக் கொள்ளலாம்.
ஆனால், வெள்ளை நிழலாக அறிவித்துக் கொண்டவர்கள் பிற எந்த வண்ணத்தையும் கறுப்பு நிறத்துக்குள் நிறுத்தி ஒடுக்குவதை பொழுதாக்கமாகவே வைத்துள்ளனர். அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நாளும் அவர்கள் முனைந்தது இல்லை.
வெள்ளை நிழல் என்பது நிறத்தை மட்டும் குறிப்பது அல்ல. முதலாளித்துவம்,மதவாதம், ஜாதியவாதம் என அதன் பெயர்களும் வடிவங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், ஒடுக்குதல் என்கிற பொது பண்பை மட்டும் இழப்பதே இல்லை. இந்த உலகை எல்லா நிலைகளிலும் இரண்டாகப் பிளப்பதைத் தடுக்கவே முடியாதா?


லாங்ஸ்டன் ஹியூஸின் மற்றொரு கவிதை:


களைப்பு


உலகம் அழகாக அன்பாக
நல்லதாக மாறிவிடுமெனக்
காத்திருந்து களைத்துப் போய்விட்டேன் நான்.
நீங்கள்?
ஒரு கத்தியை எடுப்போம்
இந்த உலகை இரண்டாகப் பிளப்போம்
விதையைத் தின்றுகொண்டிருக்கும்
புழுக்கள் எவையென்று பார்ப்போம்


- இந்தக் கவிதைகளுடன் லாங்ஸ்டனின் 33 கவிதைகளும், மாயா ஏஞ்சலுவின் 10 கவிதைகளும், எதேல்பர்ட் மில்லரின் 8 கவிதைகளும் அடங்கிய வெள்ளை நிழல் படியாத வீடு என்ற மொழியாக்க கவிதை தொகுப்பு அருமை. ரவிக்குமார் மொழியாக்கம் செய்துள்ளார்.

மாயா ஏஞ்சலுவின் கவிதை, "கடக்கும் காலம்'. கறுப்பு வெள்ளை வேறுபாட்டை உணர்த்தும் துயர வரிகளைக் கொண்டவை அந்தக் கவிதை:


உன்னுடைய தோல் விடியலைப் போன்றது
என்னுடையது அந்தியைப் போன்றது

ஒன்று நிச்சயமான முடிவின் துவக்கம்
மற்றது உறுதியான துவக்கத்தின் முடிவு.








நூல்: வெள்ளை நிழல் படியும் வீடு - கறுப்புக் கவிதைகள்- ரூ.40, வெளியீடு: மணற்கேணி

Monday, January 8, 2018

மகிழ்ச்சியான பனைமரம்


மகிழ்ச்சியான பனைமரம்






மெரீனா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். விழா நாள்களில் லட்சத்துக்கும் அதிகம். அப்படி வருபவர்களில் எவர் கண்களுக்கும் சிக்காமல் ஒரு பனைமரம் நெடுங்காலமாக அங்கு நிற்கிறது. அது மாயவித்தை கற்று, தன்னை மறைத்துக் கொண்டு வேடிக்கை காட்டும் மரம் அல்ல. உயிருள்ள மரம். பனங்காடு செழித்திருந்ததன் அடையாளமாக நிற்கும் ஒற்றை மரம். அவசர யுக வாசிகளுக்கு அந்த மரம் தெரிவதில்லை. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி கண்ணை மறைத்துவிடுகிறது. ஆனால், கவிஞர் வெய்யிலுக்கு அந்த மரம் கவிதையாகத் தரிசனம் தந்துள்ளது.

மெரீனாவிற்கு காவல் நிற்கிறது
ஒற்றைப்பனை
கண்ணகி சிலைக்குச் சற்று பின்னே.
வாசனையெழ
அலைகுடிகளின் அடுப்புகள் புகைகின்றன
அதன் தூரில்
வித்தைக் குரங்குகளின் இடுப்புக்கயிறு
முடிச்சிடப்பட்டிருக்கிறது.
ஈனவே ஈனாத ஆண் பனையது- ஆனாலும்
பார்க்க சில நேரம்
கொற்றவையைப் போல
கொல்கவி ஔவையைப்போல
இருட்டுகிற நேரத்தில்
அற உணர்ச்சியின் செங்குத்து வடிவம்போல.

அந்நியத் தேசத்தில் சொந்த சகோதரனை யதேச்சையாக கண்டு ஆரத் தழுவிக் கொண்டதைப்போல பனையும் கவிஞனும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்ட பரவசத் தருணத்தை இந்தக் கவிதையில் நினைத்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கவனிப்பாரற்றவை யதேச்சையாகவோ அல்லது தேடுதல் மூலமோ கவனிப்புக்குள்ளாவதே எல்லாப் படைப்பின் ரத்த நரம்புகளாக இருக்கின்றன. இந்தக் கவிதையில் கவனிப்புக்குள்ளாவது பனை மட்டுமல்ல, அந்த மரத்துக்கு அருகில் கரைமணலில் வாழும் நாடோடிகளும். காலத்தால் பின்தங்கிய மக்கள். அவர்களை அலைகுடிகள் என வெய்யில் அழைக்கிறார். கடல் அலை பகுதியில் வாழ்வதால் அவர்களை அப்படி அழைக்கலாம். அல்லது, ஓரிடத்தில் தங்காது அலைபவர்கள் என்பதாலும் அழைக்கலாம். ஆனால், அவர்களும் பனையைப் போல மெரீனாவில் யார் கண்களுக்கும் தென்படாத மக்கள். நெடுநெடுவென வளர்ந்த பனையும், நடமாடும் மக்களுமே கண்களுக்குத் தெரியாதபோது அந்த மரத்தின், அந்த மக்களின் துயரம் மட்டும் எப்படித் தெரியப் போகிறது? ஆனாலும், அந்த மரத்தின் துயரத்தை அப்படியே வெய்யில் தர விரும்பவில்லை. காலம் முழுவதும் காத்திருந்து, அதன் வம்சத்தின் சரிதத்தை வெய்யிலிடம் தெரிவித்துவிட்டதன் மூலமே அந்த மரத்தை மெரீனாவை மகிழ்ச்சியாக காவல் காக்க வைத்துள்ளார். உலகத் துயரத்தை இவ்வளவு எளிதாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்?
/இருட்டுகிற நேரத்தில்/ அற உணர்ச்சியின் செங்குத்து வடிவம்போல/ என்பது கவிதையின் கடைசி இரண்டு வரிகள். இந்த வரிகளின் முழுமையான அர்த்தத்தை கண்ணகி சிலை பின்புறம் இரவுகளில் நடைபெறுவதைக் காண்பதன் மூலமே உணர முடியும்.

மெரீனாவுக்கு மட்டுமல்ல, சூரியனுக்கே போனாலும் வெய்யில் எதைப் பார்ப்பார், அங்கு என்ன தேடுவார் என்பதற்கு ஒரு கவிதை.

நிலமிழந்த சிறுவர்கள்
மிச்சமிருக்கும்
ஒரு பனங்கிழங்கை
சூரியனின் மீது வைத்துச் சுடுகிறார்கள்
சனமிழந்த காகத்துக்கும் நாய்க்கும்
இரு துண்டுகள் ஈயும்
அவர்களை
கடலின் கண்கள் வெறித்துப் பார்க்கின்றன
ஈழத்துக்கும் தனுஷ்கோடிக்கும்
மாறிமாறி நீந்தும் ஆமைக்கு
அந்த ஒரு சேதி இன்னும் சொல்லப்படவில்லை.


பூமியிலிருந்தே மனிதனை அப்புறப்படுத்தும் வேலைகளை மனிதர்களே இப்போது மும்முரமாகச் செய்து வருகிறார்கள். பூமிவாசிகளின் சரிதத்தை அறிந்ததாலோ என்னவோ சூரியனும் அதன் நெருப்புக்கோளத்தைத் தாண்டி வரவிடாமல் மனிதர்களைப் பார்த்துக் கொள்கிறது. ஒருவேளை, அதையும் தாண்டி மனிதர்கள் சூரியனுக்குப் போனால் என்ன செய்வார்கள் என்பது இருக்கட்டும், கவிஞன் என்ன செய்வான்? பனங்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடுவான் என்கிறார் வெய்யில். இந்தக் கவிமனமும், நிலமிழப்பினும் சூரியனை எங்களின் அடுப்பாக்கிக் காட்டுவோம் என்கிற துணிவும் இந்த உலகத்து துயரத்தைத் துடைத்து, வேறொன்றைக் காட்டும் சேதிகள்.

யாரும் கவனிக்க விரும்பாத பன்றிகள் தமிழ்க் கவிதைகளில் உலவுவது புதிது இல்லை. குவளைக்கண்ணனின், "பன்றிகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவை', கல்யாணராமனின், "பன்றி' கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்தக் கவிதைகள் எல்லாம் மனித நிலையிலிருந்து பன்றியைத் தூர வைத்து பார்த்து, பிறகு மனிதனையே கேலிக்குள்ளாக்குவதன் மூலம் பன்றியைக் கேலிக்குள்ளாக்கும் கவிதைகள். அவற்றிலிருந்து மாறுபட்ட முறையில் பன்றியை வெய்யில் நிறைய கவிதைகளில் அணுகியுள்ளார். அதில் ஒரு கவிதை:

என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது
அதைப் பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன்
தேவையைப் பொறுத்து
அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன்
சாந்தமாக இப்படிச் சொல்லும்...
"நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!'
எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட
நான் புழக்கடை பக்கம் போய் மெüனமாக நின்றேன்
புரிந்துகொண்டு சிரித்தபடி
வந்து வெட்டு மேசையில் படுத்தது
அதன் காதில் சொன்னேன்
"ஞாயிறு அந்தியில் உன் ரத்தத்தால் செவ்வானம் செய்வேன்
உன் மாமிசம் மகிழம்பூவில் வாசமாயிருக்கும்''
இப்போது அதன் கழுத்து வெட்டுவதற்கு சிரமமாக இருக்கவில்லை
மறுநாள் நான் உறங்குகையில்
அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது
"கேரட் என்று நினைத்தேன்!'' என்றபடி தலைகுனிந்து நின்றது
நானதன் விழிகளில்
எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்.

இந்தக் கவிதை, /"கேரட் என்று நினைத்தேன்!'' என்றபடி தலைகுனிந்து நின்றது/ என்றாலே முடிந்து விடுகிறது. ஆனாலும், பன்றியின் சிவந்த கண்களைக் கவிஞன் பார்க்க விரும்புகிறான். அது, பன்றியின் கண்கள்தான் என்றாலும் கவியின் கண்கள்தானே!



நூல்:
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி - வெய்யில்
ரூ.80
கொம்பு பதிப்பகம்