Saturday, May 30, 2009

வெளியேறும் பாடல்கள்


கறுப்புவெள்ளை
கட்டைகளுக்குப் பின்னே
பலநூறு பாடல்கள்
வெüவால்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தன
பிடித்தவொரு பாடலைத் தேர்ந்து
அவன் இசைக்கத் தொடங்க
மற்ற பாடல்கள்
வெளியேறி
பறந்து போயின
மற்ற கீபோர்டுகளுக்கு.

நன்றி: உயிரோசை

Thursday, May 28, 2009

நிழல் மின்சாரம்


வெயில் வேய்ந்திருந்த சாலையில்
பெரிய சைக்கிளைத்
தாவித்தாவி
மிதித்துப் போன சிறுவன்
நாலு மின்கம்பிகளின்
நீள நிழல்களைக் கண்டான்
விளையாட்டு மனம்
சக்கரமாகச் சுழலத் தொடங்கியது
இரு மின்கம்பி நிழல்களின்
இடைப்பட்ட வெயிலை
நிழலின் மதிலாக நினைத்து
அதன் மேல்
ஒடித்தொடித்து வளைந்து
விளம்புகளில் நழுவிநழுவி
வித்தை காட்டிக் கொண்டே
சில மிதிகள் போனான்
எதிர்பாராமல்
திடுமென பின்னால் வந்தது
சிற்றுந்தின் பெருஞ் சத்தம்
அதில் நிழல் கம்பிகளில்
தொற்றிய மின்சாரம் பாய்ந்து
தூக்கியடிக்கப்பட்டான்
மதிலிலிருந்து சாலைக்கு.
நன்றி: வார்த்தை

Tuesday, May 26, 2009

நரிகளின் இனப்பெருக்கம்


கதை வனங்களில் பல்கியிருப்பதுபோல்
அடர் கவிதைகளில் நரிகள்
அதிகம் இனப்பெருக்கம் செய்யாதது
ஏன்?
வேர் சங்கிலி துண்டிக்காத பெரும் வனம்
பூமியையே இழுத்துக்கொண்டு பாயும் நதி
பல்லுயிர்களின் மூச்சு சுழற்சிகள்
இவற்றோடுதானே ஒரு பாட்டி
பேரன், பேத்தியிடம் கதையை ஒப்படைக்கிறாள்
முளையடித்து நரிகளை மட்டும்
தங்களோடு கட்டிப்போட்டுக்கொண்டு
மற்றவற்றை அவர்கள் விரட்டியழிப்பது
ஏன்?
பதின் வயது பரவசம்
அவன்/அவள் கருவிழிகளில் நிழலாய் விழ
நரிகளை
கதையிலிருந்து கவிதைக்கு
அவர்கள் ஓட்டிவிடுவது
ஏன்?
வழித்துணைக்குச் சூரியனை
அழைத்துப் போனாலும்
ஒளிக் காட்டில்
அருகில் நிற்கும் நரிகள்
எவருக்கும் தெரிவதே இல்லையே
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
என்பதற்குள்ளேவும்
ஒரு நரியாக ஒளிந்திருந்து
உங்கள் மேல்
நான் பாய்வதை உணராமலிருப்பது
ஏன்?
நன்றி: உயிரோசை

Saturday, May 23, 2009

மிருதகரம்


வார் பிடிக்காத மிருதங்கத்தைத்
தூக்கித்தூக்கி
ஒருவன்
மஞ்சள் வண்ண வீட்டு வாசல் முன்
ஐந்து நிமிடம் விடாமல் வாசித்தான்

டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டக்டக்குடக்டக்குக்கு
க்குடகுடகுடகுடக்கு
ஐம்பது பைசாவை
மகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு
உள் பக்கமாய் ஓடியவன்
உலகின் கடைசி விளிம்பைக்
கடக்க இயலாதென்பதுபோல
கொல்லைச்சுவரை முட்டிக்கொண்டு
நின்றான் தகப்பன்
வாங்கிப் பார்த்து
துணிப்பைக்குள் பைசாவை
அலுத்தெறிந்து நகர்ந்தவன்
நாய்களின் குரைப்புகளோடு
பச்சை வண்ண வீட்டு வாசல் முன்
பத்து நிமிடம் விடாமல் வாசிக்கிறான்

டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டகடகா
டக்டக்குடக்டக்குக்கு
க்குடகுடகுடகுடக்கு
நன்றி: உயிரோசை

Friday, May 22, 2009

கனிஷ்கா இமையை நடைபாதையாக உபயோகிக்காதீர்

வேப்பம்பழங்களாகப் பிதுங்கி
வழியெங்கும் வழிபவர்களில்
சாகசம் புரியும் ஒருவனைத் தேடுகிறாள்.
மேலேறுவதற்கு
சரிந்து
ஒரு காலை மடக்கிக் கொடுக்கும் யானையைப்போல
இமைகள் இணையும் கூர்முனைகளில் அவள் அனுமதிக்கிறாள்.
தொத்துபவரெல்லாம்
மையிட்ட விளிம்புகளை
மரநிழலுள்ள நடைபாதையாக உபயோகிக்கத் தொடங்குகிறார்கள்.
அதை அவள் விரும்புவதேயில்லை.
மேடேறும், சரியும் நடைகளில்
பரவசத்தைப் பதற்றத்தில் தொலைப்பவர்;
அந்தரத்துக் கயிற்றில்
அடிஅடியாய் நடப்பதுபோல் கடப்பவரையெல்லாம்
கவலையேகொள்ளாமல்
பாறாங் கல்லில் விழுந்து சிதறிப்போக
இமைத்து தள்ளிவிடுகிறாள்.
கால் கட்டை விரலை அழுத்தி வேகமெடுத்து
தடைகள் தாண்டி ஓடிவந்து
மேலிமை மைய பீலியின் உயரத்துக்கும்
மேலெழும்பி
கிறுகிறுவென குட்டிக்கரணங்ககககககள் அடித்தபடியே
கீழறங்கி
கைகளை உயர்த்தி விரைத்து
ஒருவன் நின்றபோது மட்டுமே
அவள் மென் கண்களின் செந்நரம்புகள்
லேசாகப் புடைத்திருக்கின்றன.
நன்றி: ஆனந்தவிகடன்