Tuesday, February 8, 2011

யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்



12

இருண்டிருக்கும் பாழடைந்த மண்டபத்தில் வைத்து என்னை அவர்கள் இரத்தம் வழிய கை வேறாக; கால் வேறாக: தலை வேறாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்: "என்னை நீர் வேறாக, நிலம் வேறாக, காற்று வேறாக, நெருப்பு வேறாக, ஆகாயம் வேறாகப் பிரிக்க வேண்டும்' என்று. இயற்கையின் செயற்கையாகவே எல்லாம் பிறக்கின்றன. மடிகின்றன. நானும் இயற்கையின் செயற்கையாலேயே பிறந்தேன். இயற்கையின் செயற்கையாகவேதான் மடிய வேண்டுமா? எந்த இயற்கையின் கலவையாகவும், எந்த இயற்கையின் மாதிரியாகவும் இருக்க எனக்கு விருப்பமில்லை. ஐம்பூதங்களில் தனித்து ஏதாவதொரு பூதமாக வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன். என் மாதிரி உடலிலிருந்து எப்பூதமும் கலவாத ஏதாவதொரு பூதத்தைப் பிரித்தெடுக்க யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்.