Thursday, August 6, 2009

காட்ஸில்லா முட்டைகள்


மனவீதிகள்
தானே குலைத்துக் கொள்ளும் பொழுதில்
காற்றிலிருந்து வரும் காட்ஸில்லா
அந்த வீதிகளில் ஓடத் தொடங்கும்.
தானே எழுப்பிக்கொண்ட பிரம்மாண்டம்
தானே கற்பித்துக்கொண்ட நியாயம்
தானே கொடுத்துக்கொண்ட கையூட்டு
தானே ரசித்துக்கொண்ட திருட்டு
தானே திறந்து பார்க்கக் கூசும் இரகசியம்
தானே புணர்ந்துகொண்ட உவகை
தானே
தானே
தானே என்று நிர்மாணித்ததெல்லாம்
அதன் வால்பட்டு துகள்துகளாக உடையும்.
வீதிகள்
வளையவளைய
கடும் தோட்டாக்கள் தீரத்தீர
அசுரமாய் புனைதிகைப்பு சுட்டு விரட்ட
திருப்பிக்கொள்ளும் காட்ஸில்லா
வானூர்தியை லாவகமாகப் பிடித்து
கடித்து மென்று துப்பி மறையும்.
ராட்சத பாதச்சுவடைப் பின்தொடர்ந்து வந்து
மறதியை மீன்களாய்க் குவித்து
மறைவெளிகளிலிருந்து வரவழைத்து
ஒரு பொழுதில்
தந்திரங்கள் அதனைச் சுடலாம்
விரட்டி கடலில் விடலாம்.
ஆனால்
காற்றைப் புணரும் காட்ஸில்லாக்கள்
மூர்ச்சையடைவதில்லை.
காற்றெங்கும் முட்டைகளை நிரப்புகின்றன.
நன்றி :உயிரோசை

No comments: