Saturday, December 1, 2007

முடி வளராதென்றால் மொட்டையடிப்பார்களா?



தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!

(1.12.2007)



செய்தி:



எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு கட்டாயக்
கிராமப்புற சேவை திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். ஆனால் இந்தத் திட்டம்
அமல்படுத்தப்பட்டால், எம்.பி.பி.எஸ். படிப்பு காலம் ஐந்தரை
ஆண்டிலிருந்து ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாகக் கூறி
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஒரு
கட்டமாக கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
மொட்டையடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி கோவையை அடுத்த பேரூர் பட்டீசுவரர் கோவிலில்
மருத்துவக் கல்லூரி மாணவ}மாணவிகள் 650 பேர் திரண்டனர்.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அவர்களில்
ஐந்துபேர் மொட்டையடித்துக் கொண்டனர். மேலும் மாணவிகள் 50
பேர் அடி பிரதட்சணம் செய்தனர். அவர்கள் கோவிலைச் சுற்றி
அடிமேல் அடி வைத்து நடந்து வந்து சிறப்பு பிரார்த்தனையிலும்
ஈடுபட்டனர். நெல்லையில் தூக்கில் தொங்கும் போராட்டத்தில்
மாணவர்கள் ஈடுபட்டனர். முகத்தைக் கறுப்பு துணியால்
மறைத்துக்கொண்டும், கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டும்
போராடினர்.

கேள்வி:

மருத்துவம் படித்த அனைவருமே நகர்ப்புறம் சார்ந்தே இருக்க
விரும்புகிறார்கள். வருமானம் அதிகம் கிடைக்கும் என்கிற
எண்ணத்துடன்தான் அவர்கள் நகர்ப்புறத்தை நாடுகிறார்கள். (பணமே வாங்காமல் மருத்துவச் சேவை மட்டுமே செய்யும் சில மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் இருக்கிறார்கள். இது அவர்களைக் குறிப்பிடுவன அல்ல.)
பத்தாவது, பனிரெண்டாவது வகுப்பில் அதிகம் மதிப்பெண்கள்
எடுத்த மாணவ-மாணவிகளைக் கேட்டால், "நான் ஏழைகளுக்குப்
பாடுபடப் போகிறேன்... கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்யப்
போகிறேன்' என்று சொல்வார்கள். ஆனால் படிப்பு முடிந்தபிறகு
அப்படிச் சொன்னோம் என்கிற எண்ணமே மாணவர்களுக்கு
வராதளவு சமூகச் சூழல் அவர்களை மாற்றிவிடுகிறது. இதனால்
கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்பது
உண்மை. இதனால் கிராமப்புறங்களில் மருத்துவர்களுடைய
சேவை என்பது அவசியமான ஒன்று. இதைக் கருத்தில் கொண்டு
அன்புமணி ராமதாஸ் எடுக்கிற முயற்சி பாராட்டுக்குரியதுதான்.
ஆனால் எதை எப்படிச் செய்யவேண்டும் என்று இருக்கிறது.
ஐந்தரை வருட மருத்துவப் படிப்பை ஆறரை வருடமாக்கினால்,
மாணவர்களுக்கு படிப்புச் செலவு எவ்வளவு ஆகும் என்பதை
எண்ணிப் பார்க்கவேண்டும். வீட்டை விற்று, காட்டை விற்று
ஐந்தரை ஆண்டுகள் மாணவர்களைப் படிக்க வைத்து
முடிப்பதற்கும் அப்பா, அம்மாக்கள் மனநோயாளிகளாக
மாறிப்போகிற காட்சிகளை நாம் பார்க்கிறோம். இந்நிலையில்
இன்னும் ஓர் வருடம் என்றால் அவர்களின் நிலை என்ன ஆவது?
ஒரு வருடம் கட்டாயக் கிராமப்புற சேவை செய்யவே மாணவர்களை
வைக்கிறோம் என்று வைத்துக்கொண்டால் அதன்பிறகு
மாணவர்கள் கிராமப்புறங்களிலேயே சேவை செய்வார்கள் என்பது
மட்டும் என்ன நிச்சயம்? எனவே இந்த அணுகுமுறையை மாற்றி
அமைத்தால் நன்றாக இருக்கும். கிராமப்புறத்தில் சேவையாற்றுகிற
மருத்துவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்கலாம். இது
இல்லாவிட்டால் மாணவர்களை மருத்துவக் கல்லூரியில்
சேர்க்கிறபோதே கிராமப்புறத்தில் சேவை செய்யவேண்டும் என்கிற
ஒப்புதலுடன் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
செய்யலாம் அல்லது கிராமப்புறச் சேவை மருத்துவர்களை
உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கு என்று தனி மருத்துவக்
கல்லூரி நடத்தலாம். அதைவிட்டு, திடீரென்று ஆறரை ஆண்டு
படிப்பு என்றால் மாணவர்கள் பாடு என்னாவது? பெற்றோர்கள்
பாடு என்னாவது? என்பதை மத்திய மந்திரி யோசித்து நடவடிக்கை
எடுக்கவேண்டும். எடுப்பாரா? மத்திய மந்திரி பிடிவாதம் பிடித்தால்
மாணவர்களும் பிடிவாதம் பிடிப்பார்கள் என்றுதான்
போராட்டங்களைப் பார்க்கிறபோது தெரிகிறது. பதினேழு நாளாகத்
தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராட்டத்தின்
உச்சமாகத்தான் கோவை கல்லூரி மாணவர்கள்
மொட்டையடித்துக் கொள்கிற போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
பெரியார் கேட்பார், "முடிவளராதென்றால் எவனாவது மொட்டை
எடுப்பானா?' என்று. அந்தக் கேள்விக்கு மாணவர்களும் இடம்
கொடுத்திருக்கிறார்கள் என்பது வேதனையே! மொட்டையடித்துக்
கொண்ட செயல் அவர்கள் வாழ்வை மொட்டையடித்துவிடாமல்
இருந்தால் சரி.

1 comment:

Bruno_புருனோ said...

Thanks for understanding....

I request you to see http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html where I have given few points

And then
//... கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்யப்
போகிறேன்' என்று சொல்வார்கள்//
http://bruno.penandscale.com/2007/11/comparing-compulsary-1-year-service-for.html

No one is opposing the scheme of Tamil Nadu Government because

1. They give full pay
2. They give permanent Job

// இதைக் கருத்தில் கொண்டு
அன்புமணி ராமதாஸ் எடுக்கிற முயற்சி பாராட்டுக்குரியதுதான்.//
The opposition is for 8 months city posting and 4 months rural posting

//கிராமப்புறத்தில் சேவையாற்றுகிற
மருத்துவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்கலாம். //
They are not asking for அதிகச் சம்பளம் .. They are asking for the actual pay of 19000 where as government is giving only 8000.

The protest is not for pay hike. it is to prevent pay decrease