Tuesday, September 1, 2009

வொரு மொற மதி - சிறுகதை



1978-ல வொரு மொற மதி
---------------------------------
நாலாம் வகுப்பு படிக்கிறப்ப, வொரு வொற மதி, பள்ளிக்கொடத்துல இருந்து ஆஃப் டேவுலயே வீட்டுக்கு வந்தான் . வந்தவனுக்கு வொரே அதிர்ச்சி. தாத்தா காப்பி குடிச்சிக்கிட்டு உசிரோடு உக்காந்திருந்தாரு. எப்டியாவது தாத்தா செத்திருக்கணும்னு வர்ற வழியெல்லாம் வேண்டிக்கிட்டே வந்துது பலிக்கவே இல்ல. 'ஒக்காளவோழி சாமிங்க'. 'வாத்தி செத்துட்டாரு அதான் லீவு' ன்னு தாத்தாட்ட சொல்லிட்டு பசங்களோடு காட்டாமணிச் செடி காட்டுக்குப் போனான். காய்ஞ்ச பறங்கித் தண்ட பீடியா பிடிச்சுக்கிட்டு யாருக்கும் தெரியாம மறைவுல உக்காந்திருந்தான். பள்ளிக்கொடத்துக்கு டிமிக்கி கொடுத்துதுக்குக் காரணம் கேட்டான் சுப்பீ...பீ. 'பசங்கெல்லாம் என்ன மலர்விழி... மலர்விழினு கூப்பிட்டானுங்க. அட்டனென்ஸ கிழிச்சிப் போட்டுட்டேன். முண்டக்கண்ணு வாத்தி தெரிஞ்சா அடிப்பாரு. அதான் தாத்தா செத்துட்டாருன்னு சொல்லிட்டு வந்துட்டேன்'னான். அட்டனென்ஸýக்கும் மலருக்கும் என்ன கனெக்ஷன்னு கேட்டான் மாக்கான். ஆம்பளைங்க பேரையும், பொம்பளைங்க பேரையும் தனித்தனியா எழுதி வைச்சிருக்கானுங்க. அவவன் பேருக்கு நேரா வர்றது அவவன் செட். எனக்கு மட்டும் அந்தச் சப்ப மூக்கி மலர்விழி பேருன்னான். ஓசிப்புள்ள சும்மா இருக்காம, "மலர்விழி..மலர்விழி'ன்னு மதிய கூப்பிட்டான். விரலை மடக்கி, முறிக்கின கையிக்கு வொரு முத்தம் கொடுத்து, ஓசிப்புள்ள மூஞ்சில மதி ஓங்கி வொரு குத்துவுட்டான். பதிலுக்கு ஓசிப்புள்ளயும் செடி மேலயே மதியப் போட்டு பொரட்டி, டவுசரையும் அவுத்துவுட்டான். பச்சப் பாம்பு வொண்ணு போறத பாத்துட்டு திடீர்னு கருப்பன் கத்துனான். பசங்க அப்டியே திருப்பிக்கிட்டு பாம்ப வெரட்ட ஆரம்பிச்சானுங்க. அரணாக்கயிற டவுசர் மேல இறுக்கிக் போட்டுக்கிட்டு மதியும் பாம்ப அடிச்சிப்போட்டு வீடு வந்தான். செத்துப்போன வாத்தி, தாத்தனோடு உக்காந்திருந்தாரு. வொரே சமயத்தில ரெண்டு பேரயும் சாகடிச்சதற்காக மதிய நைய்ய புடைச்சா அம்மாக்காரி. ஆம்படையான் அவள அடிக்கும் முறையில வொண்ணு மிச்சமிருப்பது நெனவுக்கு வந்துது. அதயும் யோசிச்சு அடிச்சு முடிச்சா. அட்டனென்ஸ கிழிச்சுதுக்கு அடிவாங்க மதி, உடம்பு முழுக்க வெளக்கெண்ண தடவிக்கிட்டு மறு நா பள்ளிக்கொடம் போனான்.

1988-ல வொரு மொற மதி
----------------------------------
'பேரன்களுக்கு நடுவுல வொரு பெரியவரு உக்காந்திருக்காரே .... அவுரு கொஞ்சம் எழுந்திருக்க முடியுங்களா'ன்னு மதிய மரியாதயா எழுப்பாத வாத்திகளை உடனே வீட்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு ஏதோ வொரு கல்வி அதிகாரி உத்தரவு போல. எந்த வாத்தியும் அந்த உத்தரவ மீறுறதில்ல. எட்டாம் வகுப்ப நாலு வருஷம் பலமா படிக்கிற மதிக்கு இந்தச் சின்ன மரியாதகூட கொடுக்கலன்னா அநியாயமா இல்லாம பின்ன என்னன்னு அவரு தெருவாசிக மத்தியிலகூட பரவலா பேச்சு. ஆனா, பேரன்கதான் பாவம். பெரியவர வாத்திக எழுப்பும்போது பேரன்க எவனாவது சிரிச்சிப்புடுவானுக. தேன்மிட்டாய் வாங்கிக் கொடுத்தாலும் சிரிச்ச பேரனுகள பெரியவரு விடமாட்டாரு. இன்டர்வெல் நேரத்துல வெரட்டிவெரட்டி அடிப்பாரு . மரியாத தெரியாத பயலுககூட இனி சேர்ந்து படிக்கக் கூடாது. எப்டியாவது எட்டாவது முடிச்சிட்டு ஒன்பதாவது வேற பள்ளிக்கொடத்துல போயி சேர்ந்துடணும்னு இப்பெல்லாம் வெறியோடு படிக்கிறாரு. இன்னிக்கிக்கூட இங்கிலீசு, சைனஸ் வாத்திக கொடுத்த வீட்டுப்பாடம் அத்தனயயும் முடிச்சிட்டு வந்து காட்டி சபாஷ் வாங்கிட்டாரு. அடுத்து மேக்ஸ் பீரியட். பயலுக எல்லாம் சேர்ந்து, "வீட்டுப்பாடம் ஏன்டா செய்யலன்னு டீச்சர் கேட்டா...சொல்லிக்குடுத்துது புரியல டீச்சர். இன்னொரு தடவ சொல்லிக்கொடுங்கன்னு கேட்கணும்'னு முடிவெடுத்தானுக. பெரியவரு வொத்துக்கவே இல்ல. காயத்ரி டீச்சர் வந்து கேட்டாக. எல்லாப் பயலும் புரியலைன்னுட்டானுக. பெரியவரு மட்டும் எல்லாக் கணக்கும் போட்டிருந்தாரு. நோட்ட வாங்கி பாத்து அசந்துட்டாக. இந்த மாதிரி நேரத்துல வொண்ணாம் வகுப்புக்கு ட்யூசன் எடுக்கிற, எட்டாம் வகுப்புல பெயிலாகி, வீட்லயே உக்காந்திருக்கிற டீச்சர் மாதிரிககூட பழமொழி சொல்றது வழக்கம். "பாருங்கடா.. வரவர மாமியாரு துடைப்பக்கட்ட மாதிரி ஆனாருங்கிறது போல நீங்க ஆயிட்டீங்க. பெரியவரு அசத்திட்டாரு பாருங்கடா'. "டீச்சர் தப்பா சொல்றீங்க... கழுத மாதிரி டீச்சர்'. "தெரியும் சும்மா இருங்கடா... பெரியவரே! அப்படியே நீங்க போட்ட கணக்கு எல்லாத்தயும் பசங்களுக்கும் போர்டுல போட்டுக் காட்டிடுங்க. பசங்க கத்துக்கிட்டும்'. பெரியவரு சாக்பீஸ எடுத்துக்கிட்டுப் போய் போர்டுகிட்ட நின்னாரு..நின்னாரு...ரொம்ப நேரம் நின்னாரு. எல்லாம் மறந்துபோச்சு டீச்சர்ன்னாரு. "நோட்டுல நீதான போட்ட ... அதை அப்படியே போர்டுல போடப் போற அவ்வளவுதான். நான் பக்கத்துலயே இருக்கேன். பயப்படாம போடு.' ஊக்கு விக்கிறதுல காயத்ரி டீச்சருக்கு நிகரா வேற்று கிரகத்துலயும் யாரும் இருக்கப் போறதில்ல. "பெரியவரு எங்க டீச்சர் போட்டாரு. வெற்றி நோட்ஸýல போட்டிருந்துது. அத அப்படியே எழுதிட்டு வந்தாரு'ன்னு பாவாடை போட்டுக்கொடுத்துட்டான். அடிக்கவே அடிக்காத டீச்சர் வேலயே போனாலும் பரவாயிலங்கிற ரேஞ்சுக்கு பெரியவர அடிச்சுது. டீச்சர துன்புறுத்துன துயரம் தாங்கமுடியாம அந்தப் பக்கமா போய்க்கிட்டிருந்த ஸ்டைல் வாத்தி உள்ள வந்தாரு. தேம்புன குரலுல டீச்சர் எல்லாத்தயும் சொல்லிச்சு. ஏற்கனவே ஸ்டைல் வாத்திக்கும் பெரியவருக்கும் முன்விரோதம் இருந்துது. ஸ்டைல் வாத்திக்கு "அன்டராயர் ஸ்டேன்ட'ன்னு இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அத பெரியவருதான் வச்சாரு. ஸ்டைல்வாத்திக்குப் பிடிச்சு இங்கிலீசு வார்த்த "அன்டர்ஸ்டேன்ட்'. தமிழ் வாத்தியா இருந்தாலும், "திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்... அன்டர்ஸ்டேன்ட்... அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால்களால் ஆனது திருக்குறள்... அன்டர்ஸ்டேன்ட்... 133 அதிகாரமும், 1330 குறள்களும் கொண்டது திருக்குறள்... அன்டர்ஸ்டேன்ட்'ன்னு எல்லாத்துக்கும் அன்டர்ஸ்டேன்ட் வார்த்தய சேர்த்து இங்கிலீசு பொலமைய காட்டுவாரு. வொரு வகுப்புல பெரியவரு, வாத்தி அன்டர்ஸ்டேன்னு சொல்ல சொல்ல, வொண்ணு ரெண்டு மூணு போடத் தொடங்கி பசங்க நூறு வந்தப்ப செஞ்சுரின்னு கத்தியும்பூட்டானுவ. கத்தின விவரம் கேட்டுத் தெரிஞ்ச வாத்தி பெரியவர கன்னத்துலயே "பளார்பளார்'ன்னு அறைஞ்சாரு. ஸ்டைல்வாத்தியாரில்லையா எப்பவுமே வித்தியாசமாதான் அடிப்பாரு. தங்கம் மோதரம் வொண்ணு போட்டிருப்பாரு. அதக் கழட்டி மேலே போடுவாரு. கீழ வர்றதுக்குள்ள கன்னத்துல அறைஞ்சிட்டு மோதரத்த பிடிப்பாரு. திரும்பவும் மேல போடுவாரு. அறைவாரு. பிடிப்பாரு. இன்னைக்கும் அப்டித்தான். ஸ்டைல்வாத்தியாரு மோதரத்த கழற்றி மேல போட்டாரு. ஆனா இன்னைக்குப் பெரியவரு மோதரத்த பிடிச்சாரு. ஒக்காளவோழின்னு கத்திக்கிட்டு வாத்தியாரு கன்னத்துல வொரு அறைவிட்டாரு. மோதரத்த பசங்க மேல தூக்கியடிச்சிட்டு, பையத் தூக்கிட்டுப் பள்ளிக்கொடத்த விட்டே போனாரு. போட்டுக்கொடுத்த பாவாட பயத்துல ஒண்ணுக்குக்கெல்லாம் போகாம வகுப்புலயே வயிறு கலங்க உக்காந்திருந்தான். சாங்காலம் பெல்லு அடிச்சதும் கூட்டத்தோடு கூட்டமா யாரயும் திரும்பிப் பார்க்காம வொரே ஓட்டமா வீட்டுக்கு ஓடுனான்.

1991-ல வொரு மொற மதி
------------------------------------
மாண்புமிகு. மதி அவர்கள்
பொதுப்பணித்துறை அமைச்சர்
கேட்கவே எம்மோ ரம்யமா இருக்கு. எப்டியும் ஆகியே தீர்றதுங்கிற நம்பிக்கையோடு வட்டம் ஜனாவோட கடைக்குட்டி அடியாளா இருந்து வர்றாரு மதி. சமீபமா மதி பொலிடிக்கல் கேரியர்ல மிகப்பெரிய சறுக்கல். அவருடைய அரசியல் வாழ்க்கயே சூன்யமானதுபோல இடிஞ்சிப்போயிட்டாரு. அது கொஞ்சம் சீரியஸôன விசயம்தான். மதியோட அரசியல் வழிகாட்டி செண்பகாதேவி. மாநிலக் கட்சி பக்கமா.. கவனம் செலுத்திக்கிட்டிருந்தவர, தேசிய கட்சி பக்கமா இழுத்து வந்ததே செண்பகாதான். கட்சி பக்கமாங்கிறதுல அதிகமா அவுங்க பக்கமாங்கிறதயும் சேத்துக்கணும். செண்பகா நடந்தா எந்தப் பட்டி ரோடாயிருந்தாலும் சும்மா அப்டி ஜிலுஜிலுங்கும். ஆனா செண்பகா வூட்டுக்காரருக்கு அந்த ஜிலுஜிலுப்பு தெரியவேயில. வொறையவிட உலகத்துல ஒசத்தி வொண்ணுமில்லங்றத தெளிவா புரிஞ்சிக்கிட்டவரு. ஆரம்பத்துல மதி மேல சின்னப்பய மீதான பார்வதான் செண்பகாவுக்கு இருந்துது. அது எப்டியோ தெரியல பொசுக்குனு ஒரு நா இராவு பெரிய பயலா தெரிஞ்சான். அதுக்கப்பறம்தான் அடக்கி ஒடுக்குற பெரிய மனுஷனா ஆயிடுவான்ல்ல. மதி வார்த்தக்கிக் கட்டுப்பட்டுத்தான் செண்பகா கொஞ்ச நா குளிக்கக்கூட செஞ்சாங்க. ஆனா, அரசியல் அல யாரயும் விடறதில்ல. கூட மதி இருக்கும்போதே வட்டம் எப்டியோ செண்பகாவ வளைச்சிட்டாரு. விஷயம் தெரிஞ்சு மதி கொதிச்சுப்புட்டாரு. நூல்நூலா அரசியல பிரிச்சி வட்டம் அலசுற எடத்துக்குப் போனாரு. ஏறுறதுக்கு ரெண்டு பக்கமும் படிக உள்ள மாடிக் கட்டடம் அது. பச்சை வெள்ள நிற டவுசர் தெரிய வேட்டிய தூக்கிக்கட்டிக்கிட்டு உக்காந்து, வட்டம் மாடியில சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தாரு. மேல வந்த மதி, "யாரு மேலடா கை வைக்கிற'ன்னு கத்துனாரு. "யார் மேல கை வைக்கிறதுக்கு, யாருட்டடா அனுமதி கேட்கணும்'னு வட்டமும் பதிலுக்குக் கத்துனாரு. அவ வூட்டுக்காரனே சும்மா இருக்கான், நீ யாருடா கேட்குறதுன்னு வட்டம் குத்திக் காட்டுறது தெரிஞ்சதும் மதிக்கு ரோசம் பொத்துக்கிட்டு. அடிக்கப் பாஞ்சாரு. மத்த அடியாளுக வேடிக்க பார்த்துட்டு சும்மா நின்னிருந்தானுக. வட்டம் மிரண்டு போயிட்டாரு. படி வழியா எறங்கி ஓடுனாரு. மதி விடாம வெரட்டுனாரு. கீழிறங்குனவரு இன்னொரு பக்க படி வழியா திரும்பவும் மாடிக்கே வந்தாரு. அரசியல் சமயோசிதம்னா இதான். வெளிய ஓடி எல்லாருக்கும் தெரிஞ்சா கட்சிக்குத்தான கெட்டப் பெயரு. ரெண்டு ரவுண்டு இப்டியே சுத்தி வந்தாக. அப்புறம் அடியாளுக மதிய பிடிச்சி விலக்கிவிட்டானுக. ரெண்டு ரவுண்டு சுத்துனதுல மதிக்கு ரோசம் கொஞ்சம் கொறைஞ்சு போயிருந்துது. "வெளிய வாடா.. உன்ன பெட்ரோல் ஊத்தி கொளுத்தாம விடமாட்டேன்'னு சொல்லிட்டு, மதி எறங்கிப் போயிட்டாரு. வட்டத்துக்கு கொல நடுங்கிடுச்சு. எறங்கிறத பத்தி யோசிக்கவே இல்ல. "வாங்க தலவரே நாங்க இருக்கோம். பாத்துக்குறோம்'ன்னு யார் சொல்லியும் வட்டம் கேட்கல. லூசுப் பய செஞ்சாலும் செஞ்சிப்புடுவான்டான்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்புறம் நாலைஞ்சு மணி நேரம் கழிச்சி, வொண்ணுக்கு ரெண்டு மூணு பேரா கீழ அனுப்பி, பார்த்துட்டு வரச்சொல்லிட்டுத்தான் எறங்கிப் போனாரு. நாலைஞ்சு நா மதியும் தனியாதான் சுத்திட்டிருந்தாரு. பாழாப் போன மனசு கேட்குமா... செண்பகாவ பாக்கப் போனாரு. "வட்டம் சும்மா... வொண்ணுத்துக்கும் லாயிக்கில்ல.. நீதான் எனக்கு எல்லாமும்...நம்ம பொலிடிக்கல் பேக்கிரவுண்டுக்கு ஏதாவது உதவுமே'ன்னு செண்பகா உருகுனதுல மதியும் தணிஞ்சு போனாரு. வட்டத்துக்கிட்ட மதிய திரும்பவும் செண்பகாவே அழைச்சு வந்தாக. வட்டத்துக்கும் வெட்கம். மதிக்கும் வெட்கம். "என்னடா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு சொன்ன'ன்னு வட்டம் இழுத்தாரு. "நான் ஏன் தலைவர உங்கள கொளுத்தறேன். என்ன நானே கொளுத்திப்பேன் தலைவரே'ன்னு மதி சொன்னாரு. உச்சி குளிந்துபோன வட்டம் அட்வைஸô அடுக்க ஆரம்பிச்சிட்டாரு. "தே பாருடா மதி... யானை மேல ஏறுணும்னு ஆசப்பட்டா மட்டும் போதுமா... அதுக்கு தகுந்த நீட்டு வேணா. சரி அத வுடு. வொரு சிட்டு இருக்கு. பேங்ல வேல. மாசம் பதிமூணாயிறம் சம்பளம். வூட்டுக்காரன் அவள வுட்டுட்டு எங்கயோ போயிட்டான். நீ அதுக்கு வொண்ணும் செய்ய வேணாம். அவ உனக்கு எல்லாம் செய்வா. நா தவறாம போயி, நீ ஏறிட்டு மட்டும் வந்தா போதும். என்ன சொல்ற... அவள கட்டிக்கிறியா'ன்னு ரொம்ப கரிசனமா கேட்டாரு. "ஒக்காளி இருடா எனக்கா பொண்ணு பாக்குற. உன் பொண்ண ஏறாம விடுறதில'ன்னு உள்ளுக்குள்ள கறுவிக்கிட்டே "அதலாம் வேணாங்க தலவரே'ன்னு மதியும் பணிவா சொன்னாரு. கட்சிக்கு விசுவாசமா நடந்து வட்டத்தவிட பெரிய போஸ்டிங்கும் வாங்கிடணும்னு மதி சபதமும் எடுத்தாரு. வொரு மொற அருமையான வாய்ப்பு கிடைச்சுது. அவங்க தேசிய கட்சித் தலைவரு திடீர்னு இராவுல செத்துப்போயிட்டாரு. மறு நா காலயில பதினோரு மணிக்கு மேலதான் மதிக்கு விசயமே தெரிய வந்துச்சு. கலாட்டா செய்றதுக்கு ஆளுகள அழைச்சுக்கிட்டு மெயின் சாலைக்கு வந்தாரு. ஒரு பய கட திறக்குல. எல்லா கடயும் பூட்டிக்கிடக்கு. மதி மனம் தளருல. நாம யாருனு காட்டணும். கிடைக்கிறதெல்லாம் இழுத்துப்போட்டு உடைங்கடான்னாரு. வெளியில மாட்டியிருந்த பல்பு, பெயர்பலக எல்லாத்தயும் உடைச்சானுக. மரப் பொருளுகள உடைச்சி கொளுத்திவுட்டானுக. மளிக கடக முன்னால உப்பு மூட்ட கிடந்துது. அதயும் எடுத்து நடு ரோட்டுல கொட்டுனானுக. ரெண்டு பக்கக் ரோட்டயும் மதி திரும்பிப் பார்த்தாரு. எரியுறதும், சிதறிக் கிடக்கிறதுமா பெரிய கலவர கோலமா தெரிஞ்சுது. மதிக்கு வெற்றி பெருமிதம். திரும்பித்திரும்பி பாத்துக்கிட்டே இருந்தாரு. திடீர்னு மதிக்கு காலயில சாப்பிடறப்ப வீட்டுல உப்பு இல்லன்னு சொன்னது நெனவுக்கு வந்துது. உடனே மதி ரோட்டுல கொட்டியிருந்த உப்ப அள்ளி லுங்கியில கட்டிக்கிட்டு வேகமா வீடு வந்து சேர்ந்தாரு.

1992- ல வொரு மொற மதி
----------------------------------
'தமில் இங்கிலீசு ரெண்டுமே நமக்குத் தண்ணிப்பட்ட பாடுதான். இருந்தாலும் தமில்லயே பேசுங்க 'ன்னு எலெக்ஷன் ஆபீசருட்ட மதி சொன்னாரு. "நூறு மீட்டருக்கு அப்புறம்தான் எதுவா இருந்தாலும் வச்சுக்கணும். இது கடைசி வார்னிங். இன்னொரு தடவ இங்க நின்னு சீட்டுக் கொடுத்தா உள்ள வச்சிடுவேன் பார்த்துக்கோ'ன்னு எலக்ஷன் ஆபீசரு சொன்னாரு. "இதுக்கு எதுக்கு இங்கிலீச கோதாவுல எறக்குறீங்க. தமில்யே சொல்லலாம்'லன்னு சொல்லிட்டு, சத்தம் போடாம நூறு மீட்டர கடந்த மதி, "எதுவா இருந்தாலும் நூறு மீட்டருக்கு அப்புறமா வச்சுக்குங்கன்னு சொல்றானே. அவன் பொண்டாட்டியையுமா?'ன்னு கூட இருந்த பசங்கள்ட்ட குதிச்சாரு. "அதயெல்லாம் பெரிசா எடுத்துக்காத மதி, நம்ம கட்சி ஜெளிச்சிடுங்கிற பயத்துல, கோதண்டன் எலக்ஷன் ஆபீசர்ட்ட போட்டுக் கொடுத்திருப்பான்... எலிய விட்டுட்டு அம்ப எதுக்கு நோகணும் சொல்லு'ன்னு மொட்டயன் எடுத்துக் கொடுத்தான். "நம்ம கட்சி ஜெளிச்சிடும்னு என்னம்மா மொட்டயன் ஏத்திவிடுறா'ன்னு மதி உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டாரு. நேத்தே வட்டம் மதி கிட்ட தெளிவா சொல்லிட்டாரு. நம்ம கட்சி தோக்குறதுங்கிறது உலகறிஞ்ச உண்ம. ஆனா நாம தோக்கக் கூடாது. அதான் அரசியல் சாணக்கியம். எம்.எல்.ஏவா எந்த மயிராண்டியாவது வரட்டும். நம்ம கடம என்னான்னா மத்த வட்டத்துல நம்ம கட்சிக்கு விழுற வோட்டவிட நம்ம வட்டத்துல அதிக வோட்டு விழ வைக்கணும். அப்படி விழுந்திடுச்சின்னா... எப்படியாவது மாவட்டமாயிடுவேன். செண்பகா மாவட்ட மகளிரணி தலவி, நீ மாவட்ட இளைஞரணி தலவர் பாத்துக்கோன்னு சொல்லிட்டாரு. வட்டத்தோட அந்த வார்த்தகதான் மதிய இந்தப் போடு போட வைக்குது. பூத்துக்கு வெளிய நின்னுக்கிட்டு பெயரெழுதி நம்பர எழுதி சீட்ட கொடுத்துக்கிட்டே ஆட்டோக்காரங்கள எல்லாத் தெருவுக்கும் வெரட்டிக்கிட்டிருந்தாரு. வொவ்வொரு தெருவா போயி மதி கட்சியாளுக இன்னைக்குப் போறது, நாளைக்குப் போறது, நேத்தே போனதையெல்லாம் பீறாஞ்சி எழுப்பி உக்கார வைச்சி ஆட்டோவுல ஏத்திவிட்டானுக. வர்ற வழியெல்லாம் மதி கட்சி மத்த மாநிலத்துல செஞ்ச நல்லதையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்து எறக்கிவிட்டு வோட்டு போடச் சொல்லிக் கேட்க ஆட்டோகாரங்களுக்கு மதி உத்தரவு போட்டிருந்தாரு. ஆட்டோகாரனுக நேரா மதி கிட்ட வந்து ஆட்டோவ நிறுத்துவானுக, ஆட்டோகாரனும் வோட்டுக் கேட்பான், மதியும் கேட்பாரு. உழைப்பாளிகளோடு அரும தெரிஞ்சவரில்லையா மதி, மதியம் நாலு புரோட்டாவும் குருமாவும் ஆட்டோகாரங்களுக்கு வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருந்தாரு வட்டம். ஆனா மதி எல்லோருக்கும் எட்டு புரோட்டாவும் குருமாவும் வாங்கிக் கொடுத்தாரு. வர்ற வழியில பிரசாரம் செய்றதுக்கும் வட்டத்துக்குத் தெரியாம இருபது ரூபா தனியா தரேன்னும் சொல்லிப்புட்டாரு. ஆனா என்னன்னா எலெக்ஷன் முடியறதுக்கு அஞ்சு நிமிஷம் இருக்கிறப்பதான் தெரியுது ஆட்டோக்காரனுக எல்லோருமே கோதண்டன் ஆளுகன்னு. வர்ற வழியில எல்லாம் கோதண்டன் கட்சி வேட்பாளர் போட்டாவ பாக்கெட்டுல இருந்து எடுத்துக் காட்டி, அவருடைய அரும பெருமகள வாசிச்சி வோட்டுக் கேட்டிருக்கானுக. மதி கிட்ட வந்ததும் சும்மா மதி கட்சிக்கு வோட்டுக் கேட்டிருக்கானுக. மதி கட்சியின் உண்மயான விசுவாசி ஒருத்தன் ஆட்டோவுல வந்தப்பதான் உண்மயே தெரிய வந்துச்சு. வட்டமும் மதியும் கொதிச்சிப்புட்டாங்க. ஆட்டோகாரனுகளை எல்லாம் கூலியே கொடுக்காம வெரட்டி அடிச்சாங்க. திரும்பவும் மொட்டயன் எடுத்துக்கொடுத்தான், "எலிய விட்டுட்டு அம்ப எதுக்கு நோகணும்'. செண்பகாவும் கோதண்டன் பக்கம் சாயப்போறதா வொரு சேதி வந்துக்கிட்டிருந்தது. எலெக்ஷன் முடிஞ்சி எல்லாத்தயும் பாத்துக்கலாம்னு இருந்த வட்டத்துக்கு இதலாம் சேந்து கொலை வெறி வந்துச்சு. பயலுகள அழைச்சிட்டுப் போயி கோதண்டத்த தெருவுல ஓடவுட்டுப் வெட்டித் தள்ளிட்டு எல்லோருமா ஜெயிலுக்குப் போனாக. ஆனா எவன் நினைக்கிறதும்தான் எப்பவுமே நடக்காதே. மதி கட்சி அந்தத் தேர்தலுல ஜெளிப்புன்னா ஜெளிப்பு அப்டியொரு ஜெளிப்பு. ஆறே மாசத்துல வெளிய வந்துட்டாங்க. கொல செஞ்ச வீரங்க இல்லையா நெஞ்ச நிமித்திக்கிட்டுத்தான் செட்டு செட்டா எல்லா எடத்துக்கும் போனாங்க. எது வரைக்கும் அப்டிப் போக முடியும்? கோதண்டம் தம்பிக அழகா ஸ்கெட்ச் போட்டாங்க. முதல்ல வட்டத்தயும், ரெண்டாவது மொட்டையனையும் நடு ரோட்டுலேயே ஓட வுட்டு கண்டம்துண்டமாக்கினாங்க. வெளிய போறதயே மதி நிறுத்திட்டாரு. நாலஞ்சு பேரா வெரட்டி வந்து வெட்டுற கனவு வந்துக்கிட்டே இருந்தது. வொரு மொற கட்டையன் அவன் ஆள பாக்க போறதுக்கு மதியையும் கூப்பிட்டான். கடைசி வரை மதி மறுத்திருக்கலாம். ரெண்டு மூணு தெரு போறதுக்குள்ள சுத்துப்போட்டு வெரட்ட ஆரம்பிச்சானுக. கட்டையன் மாட்டிக்கிட்டான். சரமாரியா கத்திய எறக்குனானுங்க. "ஒக்காளவோழிகள உங்கள வெட்டாம விடமாட்டே'னு கைய ஓங்கிக்கிட்டு கட்டையன் எழுந்தான். ஓங்குன கையில கடைசி வெட்டு விழுந்துது. அதுக்கப்புறம் கட்டையன் சத்தம் வெளிய வரவே இல்ல. மதி திரும்பிப் பாக்கவே இல்ல. நேரா கோதண்டன் வீட்டுக்கு ஓடி வந்தாரு. கோதண்டன் வீட்டுல இருந்தவங்க எல்லாமே கொல பயத்துல நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க. வெட்ட வந்திருக்கான்னு அவுங்களுக்குத் தெளிவா தெரிஞ்சிருச்சு. யாரன்னு மட்டும் தெரியல. அததும் அங்கங்க தெறிச்சி ஓடப் பாக்குது. மதி நேரா ஓடி கோதண்டம் பொண்டாட்டி கால கெட்டியா பிடிச்சுக்கிட்டு, "மன்னிச்சிடுங்க அண்ணி. அண்ணன நான் கொல்லல. இனிமே நான் பாலிடிக்ஸ்லேயே இருக்கமாட்டேன். வுட்டுடச் சொல்லுங்க அண்ணி... வுட்டுடச் சொல்லுங்க அண்ணி..' ன்னு அழுதாரு. பயந்துபோன கோதண்டம்மாள் ஒத்தக் காலைத் தூக்கி மடக்கி அருள்பாலிக்கிறவர மதி அவ கால விடவே இல்ல.

1995-ல வொரு மொற மதி
----------------------------------
யான கட்டுற சங்கிலி கணக்கா கழுத்துல தங்கச் செயினும், மரப் பலக சைஸýக்கு கையில பிரேஸ்லெட்டும், மொறம் சைஸýக்கு நாலு மோதரமும், வெள்ள வேட்டி சட்டயும் இல்லாம மதி வெளிய வர மாட்டாரு. அதுதான் அவரோட இப்போதய ட்ரேட் மார்க், புரோக்கர் மார்க் எல்லாம். நடமாடும் தங்கமாளிகையா நடந்து வந்து, "ராசியான நம்பர் சார் 36. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டு நம்பரும் 36தான் சார். சரி... அத வுடங்க இந்த ப்ளாட்ட பாருங்க நம்பர் 8. கருணாநிதி கோபாலபுரம் வீட்டு நம்பர் சார். இத வாங்குறீங்களா ராகவவீரா அவென்யூல உள்ள ரஜினிகாந்த வீட்டு நம்பர் 18'ன்னு ஆசக் காட்டுனாருன்னா அவரு நகை அடிக்கிற டாலுலேயே மயங்கிடுவாங்க. இவ்வளவு நகை போட்டிருக்காரு பணத்துக்கு ஏன் ஆசப்பட்டு பொய் சொல்லப் போறாருன்னு எது சொன்னாலும் ஒத்துப்பாங்க. "பகல்ல கொள்ள லாபம். இராவுல கொள்ளாத போத தாகம்'ன்னு ஜோரா போயிக்கிட்டிருந்த அவர் வாழ்க்கயில வொரு சேஞ்ச் வந்துது. அதுவும் அவரோட நடமாடும் தங்கமாளிகையாளதான். வொரு நா இராவு ஒன்பது மணிக்கு வனாந்தரமான பகுதியில தனியா போய்க்கிட்டிருந்தாரு. அந்தப் பகுதியிலிருந்து "உஸ்..உஸ்'ன்னு சத்தம் வரும்னு அவருக்குத் தெரியும். அன்னைக்கும் சத்தம் வந்துது. ரொம்ப நாளா மதிக்கு வொரு ஆச. அரவானிகளுட்ட போயி அவுளுகளுக்கு என்ன இருக்குன்னு பாக்கணும்னு. சரின்னு போயிட்டாரு. நாலைஞ்சு பேரு அங்க இருந்தாக. அதுல குண்டாயிருந்த ஒருத்திய செலக்ட் பண்ணிக்கிட்டு புதருக்குள்ள போயி வேட்டிய அவுத்துட்டு நின்னாரு. அவ வொண்ணும் செய்யாம மதி நகைகளயே பாத்துக்கிட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மதி மொகத்துக்கு நேரா அவ மொகத்த கொண்டு போனா. அவ பவுடரு வாசனய இழுத்துக்கிட்டு மதி விறைச்சிக்கிட்டிருந்தாரு. திடீர்னு விநோதமா வொரு சத்தமெழுப்பினா. உடனே மத்த அரவானிகளும் ஓடிவந்தாக. மதிய அடிச்சி உதச்சி தரையில பொரட்டி, அவரு போட்டிருந்த எல்லா நகைகளயும் கழட்டிட்டு ஓடிட்டாங்க. மதிக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. வெளிய சொன்னா மானம் போயிடும்னு பயந்தாரு. அப்புறம் மானமா நகையான்னு யோசிச்சாரு. நகைதான்னு முடிவு பண்ணாரு. நேரா போலீஸýட்டு போயி சொன்னாரு. "கல்யாணத்த கட்டிக்கிட்டு எவளயாவது ஏறாம அவளுகக்கிட்ட ஏன்டா போன'ன்னு ஆரம்பிச்சு போலீஸýகாரங்க வாயில வந்ததையெல்லாம் வார்த்தயா காறித் துப்புனாங்க. அப்புறம் போலீஸýகாரங்களும் மதியும் வொரு வொப்பந்தம் போட்டாக. "நகைய புடிச்சிடலாம். அப்டி புடிச்சா பாதி...பாதி.' மதியும் வொத்துக்கிட்டாரு. மறு நா காலயில அரவானிக இருக்கிற ஏரியாவுக்கு மதிய போலீஸýகாரங்க அழைச்சிட்டுப் போனாக. இராவுல பாத்த முகத்த எடுத்து பலவிதமா ஆல்ட்ரேஷன் பண்ணி பாத்துக்கிட்டே வந்தாரு. வொல்லியா இருந்த அரவானிக எல்லாம் வொரே மாதிரியா இருந்தாக. அதனால குண்டா இருக்கிற அரவானிகளா பாத்து தேட ஆரம்பிச்சாரு. கடைசியா அவள கண்டும்பிடிச்சிட்டாரு. ஆனா அவள காட்டிக் கொடுக்கல. காட்டிக் கொடுக்கத்தான் போனாரு. அதுக்குள்ள அவ நீண்ட நாக்க நீட்டி "லூலூலூ'ன்னு வொரு சைக காட்டுனா பாருங்க. அதலு மதி சாஞ்சுப்புட்டாரு. அதலயும் "அப்புறமா வா எல்லாத்தயும் கொடுத்திர்றே'ன்னு சைக வேறு காட்டுனா. மதியும் யோசிச்சாரு. இப்ப காட்டிக் கொடுத்தா பாதிதான் கிடைக்கும்னுட்டு, "இங்க யாரும் இல்லை'ன்னு திரும்பி வந்துட்டாரு. மதியத்துக்கு மேல அரவானிக ஏரியாவுக்கு அவள தேடிப் போனாரு. பாதி கவரிங் நகையா இருந்துதுக்காக சில அரவானிக மதிய அடிக்க வந்தாக. மதிய சாஞ்சவங்கதான் காப்பாத்தினாங்க. அந்த நொடியிலிருந்து கனகாங்கிற அவுங்கள மதி உசுருக்குஉசுரா நேசிக்க ஆரம்பிச்சிட்டாரு. பிரேஸ்லெட்ட மட்டும் திருப்பிக் கொடுக்க முன்வந்தபோதுகூட வேணவே வேணாம்ன்னு திரும்பி வந்தவரு, கனகாவ பாக்க அடிக்கடி போனாரு. நாளுக்கு நாள் அவுங்க நேசம் கூடிக்கிட்டே போச்சு. ஊரு முழுக்க அந்தச் சேதி தெரிய வந்துச்சு. அவசரஅவசரமா மதிக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாரு மதியோட அப்பா. கட்டுனா கனகாவதான் கட்டுவேன்னு மதி ரெட்ட கால்லயும் நின்னாரு. மதி சொல்ற எதயும் அப்பா காதுல போட்டுக்கவே இல்ல. உறவுக்காரப் பொண்ணு வொண்ண பாத்து கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சாரு . கல்யாணத்தன்னிக்கு காலையில மதி வாயில குவார்ட்டர் குவார்ட்டரா வாங்கி ஊத்துனாங்க. போதையிலேயே மதி நீலவேணி கழுத்துல தாலி கட்டுனாரு. மாவட்ட மகளிரணித் தலவி செண்பகாதேவி வந்து வாள்த்திட்டு ஐநூத்தி வொண்ணு மொய்யி எழுத்திட்டு போனாங்க.

2005-ல வொரு மொற மதி
-------------------------------------
'எனக்கும் செண்பகாதேவிக்கும் உள்ள நெருக்கம் உங்க எல்லாருக்கும் தெரியும். வொரு ஃபோன் போட்டா போதும். பணத்த கொண்டு வந்து கொட்டிட்டுப் போயிடுவாங்க. ஆனா அது அவ்வளவு மரியாதயா இருக்காது. அதனாலதான் கேட்குல. உங்களுக்குச் சம்பளம் ரெண்டு மூணு மாசம் தராம இருக்கலாம். அதுக்காக தரவே மாட்டேன்லாம் சொல்ல வரல. பேங்ல போட்டா போல நெனச்சுங்க'ன்னு ரொம்ப உருக்கமா அரசியல் மீட்டிங்ல பேசுறா போல மதி பேசினாரு . அவரு எக்ஸ்போர்ட்ல வேல செஞ்ச பத்து பேரும் ரொம்ப நொந்து போயிட்டாங்க. தைக்க துணி வராததால எல்லோரும் மதியமே வீட்டுக்குப் போனாங்க. தனியா உக்காந்து, 'அந்தச் சக்களத்திய விட்டுட்டு வந்தாதான் இனி உங்கூட குடும்பம் நடத்துவே'ன்னு சொல்லிட்டு, ரெண்டு புள்ளைங்களயும் விட்டுட்டு நீலவேணி அவ அப்பா வூட்டுக்கே போனத பத்தி மதி கொஞ்ச நேரம் யோசிக்கிட்டே இருந்தாரு. கனகா வீட்டுக்கே போகலாம்னு எழுந்து எக்ஸ்போர்ட்ட பூட்டிட்டு வெளிய வந்தவரு நேரா அவரு வீட்டுக்கே போனாரு. மூணாம் வகுப்பு படிக்குற மூத்தவன் பள்ளிக்கொடத்துலேர்ந்து சீக்கிரமே வந்திருந்தான். ஏன்டா வந்துட்டேன்னாரு. வாத்தியார் செத்துட்டாருன்னான். பெல்ட உருவுன மதி பையன் தோல உரிச்சாரு.
நன்றி : உயிரோசை

Wednesday, August 19, 2009

பாலை, மழை, காளான்


பார்த்துப் பார்த்து
கால்நகங்களின் அழுக்கு நீங்கத் தேய்த்து
சிலீரிட நன்றாய்க் குளிக்க
எதிர்படுகிறவர்களிடமெல்லாம்
தாராளமாய்ச் சொற்களைக் கொடுத்து வைக்க
வெறிப்பற்களால் குதறிக் கொண்டு
நாய்கள் போடும் சண்டையெதையும்
அலுவலகக் கோப்புகளில் பார்க்காமல் கடக்க
துயரை பின்னால் நிறுத்திக் கொண்டு வராத
மகிழ்ச்சியை விரல் பிடித்து நடக்க
சென்றும் செல்லாமலும்
நிலைகொண்ட காட்சியோடு
வெறித்து, பிதுங்கிக் கிடக்கும்
விபத்துக்கண்களெதையும் வழிகளில் காணாமல் வீடு திரும்ப
அருவியில் குளிக்க வைக்கும் புத்தக வரியிலிருந்து
அப்படியே நெட்டித் தள்ளி பாறையில் சிதறவிடும்
இடையூறற்று வாசித்துக் குளிர
புகார்கள், கோரிக்கைகளால்
புடைத்திருக்காத அவள் புருவங்களைக் காண
அவசரமின்றி பதற்றமின்றி
நெடுநேரம் நொறுங்கிப் புணர
நினைவு வௌவாலெதும் கொத்தி எழுப்பாது
பற்றாக்குறையற்று தூங்க
வாயில் வழுக்கியோடும் அல்வாதுண்டுபோல
புதுச் சூரியனுக்குள் கால் பதித்துப் போக -
என்றாவது வாய்க்கும்
அந்த மழைநாள்களின் வெள்ளத்தில்
எல்லாப் பாலைநாள்களும்
அடித்துப்போய்
காளான்களாய் முளைக்கின்றன.
நன்றி: உயிரோசை

Thursday, August 6, 2009

காட்ஸில்லா முட்டைகள்


மனவீதிகள்
தானே குலைத்துக் கொள்ளும் பொழுதில்
காற்றிலிருந்து வரும் காட்ஸில்லா
அந்த வீதிகளில் ஓடத் தொடங்கும்.
தானே எழுப்பிக்கொண்ட பிரம்மாண்டம்
தானே கற்பித்துக்கொண்ட நியாயம்
தானே கொடுத்துக்கொண்ட கையூட்டு
தானே ரசித்துக்கொண்ட திருட்டு
தானே திறந்து பார்க்கக் கூசும் இரகசியம்
தானே புணர்ந்துகொண்ட உவகை
தானே
தானே
தானே என்று நிர்மாணித்ததெல்லாம்
அதன் வால்பட்டு துகள்துகளாக உடையும்.
வீதிகள்
வளையவளைய
கடும் தோட்டாக்கள் தீரத்தீர
அசுரமாய் புனைதிகைப்பு சுட்டு விரட்ட
திருப்பிக்கொள்ளும் காட்ஸில்லா
வானூர்தியை லாவகமாகப் பிடித்து
கடித்து மென்று துப்பி மறையும்.
ராட்சத பாதச்சுவடைப் பின்தொடர்ந்து வந்து
மறதியை மீன்களாய்க் குவித்து
மறைவெளிகளிலிருந்து வரவழைத்து
ஒரு பொழுதில்
தந்திரங்கள் அதனைச் சுடலாம்
விரட்டி கடலில் விடலாம்.
ஆனால்
காற்றைப் புணரும் காட்ஸில்லாக்கள்
மூர்ச்சையடைவதில்லை.
காற்றெங்கும் முட்டைகளை நிரப்புகின்றன.
நன்றி :உயிரோசை

Thursday, July 16, 2009

கீறல் பெயர்கள்


கருவேலம் மரத்தில் காலம் தள்ளும்
கீறப்பட்ட அந்தப் பெயர்களுக்குள்
சமீபமாய்
பல பிணக்குகள்

பிசினை வழித்து
கீழே தள்ளுவது
யார் வேலை?
கட்டெறும்புகள் மேலேறி வர
யார் காரணம்?
கோடை தொடங்குவதற்குள்ளே
இலையுதிர்க்க
யார் காரணம்?
காக்கா முட்டையை
பச்சப் பாம்புக்கு
காட்டிக் கொடுத்தது ஏன்?
தேனடை கட்ட
அனுமதிக்காதது ஏன்?

உச்சிக் கிளை முள்ளைப் பிடித்து
தொங்கியவாறே
கீழே குதித்துவிடப் போவதாக
நேற்று மதியம்
'ள்' பெயர் மிரட்ட
'குதிக்காதே...குதிக்காதே ' என
'ன்' பெயர் கெஞ்சிய பிணக்கு

'உன் சொந்தக்காரப் பசுக்களுக்கு
பழுத்த கருவேலங் காய்களை
அதிகமாய் பறித்துப் போட்டாய்
என் பசுக்களுக்குப் போடவே இல்லை.'
நன்றி: நவீன விருட்சம்

Monday, July 13, 2009

வெயிலை உலர்த்தும் இரவு


பகல் வெளியில் பயணிக்கையில்
கிரகிக்கும் வெயிலையெல்லாம் குவித்து
வைக்கோல்போராய் வைத்துக்கொள்வான்
இரவு படுக்கையில்
போரின் மையத்திலிருந்து
கொத்துக்கொத்தாகப் பிய்த்து
உதறி, பரப்பி
மேலே படுத்துருண்டவாறு
வேக வட்டமடிப்பான்
ஈரமுள்ள வெயில் பக்கம்
சொணை சுள்ளெனடிக்க
அதிகச் சுற்றடிப்பான்
நள்ளிரவு சோர்கையில்
உலர்த்திய வெயிலைக் குவித்துக் கட்டி
உறங்கப் போவான்.
நன்றி: நவீன விருட்சம்

Wednesday, July 8, 2009

உயிர்ப்பிக்காத சொற்களின் வதை!


வெண்தாடி வைத்திருப்பவர்களைப் பார்க்கிறபோது, ஒன்றாம் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்த கவிஞர் தம்பி சீனிவாசனின் 'காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு காடுபோல தாடியாம். மாடி மேலே நிற்கும்போதும் தாடி மண்ணில் புரளுமாம்' என்ற பாடலை என் நினைவுகள் பாடும். குருவிகள் கூடு கட்டியிருக்க, தரை புரளும் தாடியுடன் காட்டுப்பாக்கம் தாத்தா வரையப்பட்டிருப்பார். (ஓவியர் பெயர் தெரியவில்லை - மன்னிக்கவும்) அந்த ஓவியத்தோடும் அந்தப் பாடலோடும் கவிஞர் ராஜமார்த்தாண்டனையும் ஒப்புமைப்படுத்தி அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டனின் கண்கள் எல்லோரையும் விட அசல் அந்த ஓவியமாகவே அவரைக் காட்டும். தாடியில் கூடு கட்டிய குருவிகளுக்குப் பதில் அவருடைய கவிதைகளை வைத்து என் கற்பனை வரைகோடுகள் நீண்டிருக்கின்றன.

ராஜமார்த்தாண்டன் பெயரை 97-ம் ஆண்டின் இறுதி மாதங்களில்தான் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். துரை என அழைக்கப்படும் கவிஞர் வித்யாஷங்கர் ஆசிரியராக இருந்த "ராஜரிஷி' அரசியல் வார இதழில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாள்களில் தினமணி கதிரில் வெளியான கவிதைகள் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்பட்டன. அக் கவிதைகளைத் தேர்வு செய்பவர் ராஜமார்த்தாண்டன் என்பதை அறிந்திருந்தேன். அதன் காரணமாகவும், அவர் பெயர் வெளிப்படுத்துகிற கம்பீரத்தின் காரணமாகவும் இயல்பாகவே அவரைப் பார்க்காமலேயே அவர் மீது பயம் கலந்த மரியாதை எனக்குள் வந்திருந்தது. அப்போது அவருடைய ஒன்றிரண்டு கவிதைகளை மட்டுமே படித்திருந்தேன். மாதம் போகப்போக "பயம் கலந்த அந்த மரியாதை' மனவோரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க, ராஜமார்த்தாண்டன் மீது கொஞ்சம் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. இப்போது அவமானமாகக் கருதும் அப்போதிருந்த அந்தக் கோபம் கலந்த வருத்தத்திற்கு இருந்த பெரிய காரணம் என் கவிதைகளை வெளியிடவில்லை என்பதுதான். தொய்வில்லாமல் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பேன். பிரசுரமானதே இல்லை. மாறாக , யூமா வாசுகியின் கவிதைகள் இரு வாரங்களுக்கொரு முறையோ, மூன்று வாரங்களுக்கொரு முறையோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. யூமா வாசுகி மீதும் விடலை மன இயலாமை ஏற்படுத்திய வெகாமை இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் , தலைபிரட்டையைப் பிடித்துவிட்டு மீன்குஞ்சுகளைப் பிடித்ததாய் சந்தோஷப்படும் சிறுவர்கள்போல் ஆத்திர வரிகளால் கவிதை எனக் கட்டமைக்கப்படுகின்ற ஒன்றைத்தான் அப்போது தூங்காமல் பல இரவுகளில் செய்துகொண்டிருந்திருக்கிறேன். இத்தெளிவு 2003-ல் "பூமத்திய வேர்கள்' என்ற தலைப்பில் என் முதல் தொகுப்பை வெளியிட்டதற்குப் பின்னர்தான் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் கவிதை எழுதுகிறேன் என்று வெளியில் சொல்லவே எனக்குப் பயமாக இருந்தது. ராஜமார்த்தாண்டனிடம் இன்னும் அதிகம் பயப்பட வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிவிட்டு 2005-ல் தினமணியில் அதுவும் தினமணி கதிர் இதழில் பணியாற்ற சேர்ந்தேன். ராஜமார்த்தாண்டன் கலக்கம் அதிகரித்தது. திட்டமிடத்தொடங்கினேன். கவிதை, கவிதை சார்ந்த எதையும் பேசுவதில்லை என்கிற முன் தீர்மானத்தோடுதான் அலுவலகத்தில் நுழைந்தேன். ஆனால் சூழலின் மறுபக்க எழுத்துகள் வேறு வகையாக இருந்தன. ராஜமார்த்தாண்டன் பணியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்குக் கடிதம் கொடுத்துவிட்டு, கடைசி இரு தினங்கள் மட்டும் வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் விலகலால் காலியான இடத்தை (பத்திரிகையில்) நிரப்பும் முயற்சியிலேயே நானும் சேர்க்கப்பட்டிருந்தேன். முதன்முதலாய் பார்த்தபோது ராஜமார்த்தாண்டன் பெயருக்கேற்ப நான் எழுப்பியிருந்த கற்பனை சரீரம் பொலபொலத்து இறங்கி, காட்டுப்பாக்கம் தாத்தா எனக்குள் வந்தார். அறிமுகம் செய்துகொள்ள என்னிடம் அப்போதும் ஏதும் இல்லாததால் திரையரங்கத்திற்கும் ஆசிரியர் வந்துவிட பதற்றத்தோடு படம் பார்க்கும் மாணவன் போல அவருக்கே தெரியாமல் அவரைப் பார்ப்பதும், அவர் பார்க்கிறபோது திரும்பிக் கொள்வதுமாகவே கடத்தினேன். பழுப்பேறிய வெள்ளை வேட்டி சட்டை, ரப்பர் செருப்பு, தாடி என அலுவலக இயல்புக்கு முற்றிலும் அந்நியப்பட்டு இருந்தார். காற்றைப்போல கதவு திறந்து நுழைந்தார். காற்றைப் போல இருக்கையில் அமர்ந்தார். காற்றைப்போல காகிதங்களைப் புரட்டினார். காற்று ஓரிடத்தில் நிற்காது என்பதுபோல சட்டென கதவு திறந்து வெளியில்போய் நண்பர்களைப் பார்ப்பதும் வருவதுமாகவே இருந்தார். அலுவலகத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். அலுவலகத்தை விட்டுப் போன பிறகும்கூட நண்பர்களைப் பார்ப்பதற்காகவே பலமுறை வந்திருக்கிறார். நண்பர்கள் மீது அவருக்கு எவ்வளவு பிடிப்பு என்பதற்கு அலுவலகத்தாரால் சொல்லப்படும் ஒரு நிகழ்வு; பலமுறை நடந்துள்ளது: சொல்லாமல் திடுமென விடுப்பு எடுத்துவிடுவாராம். "இப்படி எடுக்கலாமா?' என்று கேட்டால், "ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க இங்றேன் புரிஞ்சுக்கமாட்டேங்கிறீங்களே..' என்பதாகவே இருந்திருக்கிறது.

படைப்பாளி என்பவன் புறவெளியில் பயணிக்கும் அதே நேரம் அகவெளியில் ஆழ்ந்து பல மைல் தூரம் பயணிப்பவனாக இருக்கிறான். அவனுக்குப் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அவனைப் புரிந்துகொள்ளுதல் என்பது இயலாத ஒன்று. ஒரு படைப்பாளிகூட மற்றொரு படைப்பாளியின் பயணத் திசைகளைக் கண்டறிதல் என்பது இயலாதது. அப்படியிருக்கையில், அலுவலகத்தின் கட்டுப்பாடுகள் பிரசவிக்க இடம் தேடும் பூனைகள்போல அவனை ஓயாமல் அலையவிடுகிறது. சொந்த சூழல் சரியாக இருக்குமானால் அவன் அனைத்தையும் உதறிவிடுவான். அலுவலகம் மட்டுமல்ல; தன் சொந்த வாழ்க்கையிலான விஷயங்களில்கூட அநியாயத்திற்குச் சறுக்கிக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். ராஜமார்த்தாண்டன் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? விடுவித்துக்கொண்டு, பலமுறை அலுவலகம் வந்து போய்க்கொண்டிருந்தவருக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான், அலுவலகத்தின் ஆதாரத்துடன் அவர் கேட்டுப் பெற வேண்டிய மாதாந்திர தொகையின் நினைவோ அல்லது தெரியவோ வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் அது. அலுவலகத்தை விட்டு விலகுகிற அன்றே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுவிடுவார்கள். ஆனால், மூன்று வருடங்கள் கழித்து விண்ணப்பிக்க ராஜமார்த்தாண்டன் வந்தபோது எல்லோருக்கும் ஆச்சர்யம். "இவ்வளவு நாளா வாங்கலையா... இவ்வளவு நாளா வாங்கலையா' என அவரைக் குடைந்தெடுத்தனர். கேட்ட எல்லோருக்கும் மெüனத்தையே அவர் பதிலாக அளித்துக் கொண்டிருந்தார். ராஜமார்த்தாண்டனைப் பார்க்க யூமா வாசுகி அன்று மாலை வந்திருந்தார். அவருக்கும் ஆச்சர்யம். "நீங்கள் மகா கவியாகிவிட்டீர்கள்' என்று இரண்டு மூன்று தடவை கேலியாகச் சொன்னார். இந்தக் காலகட்டங்களில் ராஜமார்த்தாண்டன் மீதான பயம் காணாமல் போய்விட்டாலும் அதிகம் பேசாமலேயே இருந்து வந்தேன். உடனிருந்த நானும் தமிழ்மகனும் சிரித்தோம். ராஜமார்த்தாண்டன் மெüனமாகவே வந்தார். இதன்பிறகு தமிழ்மகன்தான் ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார்.

மெüனத்தைக் கைவசப்படுத்திக் கொள்வது ஓர் அரிய கலை. வெளிப்படுகிற வார்த்தைகளைவிட மெüனங்கள் அதிகம் பேசும். அந்தக் கலையில் ஆழ்ந்தவராக இருந்தார் அவர். பல பேச்சுகளில் அதைக் கவனித்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டன் அறுபதாவது வயதையொட்டி 'உயிர் எழுத்து' ஆகஸ்ட் மாத 2008 இதழை அவரின் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. அதில் என்னுடைய 'இருட்டாழி' சிறுகதையும் வெளியாகி இருந்தது. எனக்கது இனம்புரிந்த மகிழ் சலனத்தை ஏற்படுத்தவே செய்தது. சுகுமாரன், ந.முருகேச பாண்டியன், சுரேஷ்குமார் இந்திரஜித், கரிகாலன், சிபிச்செல்வன், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் ராஜமார்த்தாண்டன் குறித்து கட்டுரை எழுதியிருந்தார்கள். இதில் சிபிச்செல்வன் கட்டுரையில் மட்டும் நான் உணராத ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

'ராஜமார்த்தாண்டன் கவிதைகளில் பசுவய்யா, யூமாவாசுகி ஆகிய கவிகளின் பாதிப்பு இருப்பதைப் பல கவிதைகள் காட்டுவதைப்போலவே, அவருக்குப் பிடித்த புதுமைப்பித்தனின் சில கவிதைகளின் பாதிப்பையும் பார்க்க முடிகிறது' என்று சிபிச்செல்வன் எழுதியிருந்தார்.

பேராற்று பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து பாயக்கூடியவை யூமாவாசுகியின் கவிதை மொழி. வழியினூடே பல குன்றுகள், நறுமணத் தோட்டங்களைக் கடக்கும். இதிலிருந்து மாறானவை ராஜமார்த்தாண்டனுடைய கவிதை மொழி. இடைஇடையே கெண்டைகள் துள்ள சலசலத்து ஓடக்கூடிய ஓடையைப் போன்றது. இதழ் தொடர்பாக சுதீர் செந்திலிடம் தொலைபேசியில் பேசியபோது, 'இதழ் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், சிபிச்செல்வன் எழுதியிருப்பதுபோன்று மட்டும் என்னால் உணர முடியவில்லை' என்று தெரிவித்தேன். அதற்கடுத்ததொரு நாளில் யூமா வாசுகியிடமும் இதைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் திடமாக மறுத்து பாதிப்பை உணரவில்லை என்றே சொன்னார். ராஜமார்த்தாண்டன் இதற்கு ஏதாவது எதிர்வினையாற்றுகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளவே அடுத்த செப்டம்பர் மாத உயிர் எழுத்து இதழை அதிக ஆவலுடன் பார்த்தேன். நன்றி தெரிவித்து ராஜமார்த்தாண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் ஒரு பகுதி:

'பாராட்டுவதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, நிறைகளை மட்டுமே குறிப்பிட்டு பாராட்டுவது. இன்னொரு வகை, நிறைகளையும் குறைகளையும் மதிப்பிட்டு விமர்சனபூர்வமாகப் பாராட்டுவது. இரண்டாவது வகையே, பாராட்டப்படுபவனுக்குப் பயன்தரக் கூடியது என்று கருதுகிறவன் நான். ஓர் எழுத்தாளன் இறந்த பிறகு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளால் அவனளவில் அவனுக்குப் எந்தப் பயனும் இல்லை. வாழும்போதே அவன் எழுத்துக்கள் உரிய முறையில் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதே, அவன் தன்னை சுய பரிசீலனை செய்து கொள்ளவும் மேலும் தீவிரமாகச் செயல்படவும் தூண்டுதலாக அமையும்.'

எல்லாப் படைப்பாளிகளுக்கும் இத்தெளிவு இருக்கும் என்று சொல்லமுடியாது. சிபிச்செல்வன் குறிப்பிட்டதையும் கவனத்தில் கொண்டு தீவிரமாகச் செயல்பட அவர் நினைத்திருக்கலாம். அதே கடிதத்தில் 'ஓர் எழுத்தாளன் இறந்தபிறகு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளால் அவனளவில் எந்தப் பயனும் இல்லை' என்று எழுதியிருந்தார். ஆனால், உண்மையில் இவ்வளவு விரைவில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

மறைவதற்கு நாலைந்து நாள்களுக்கு முன்பு தினமணி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதே ஓய்வூதிய விவகாரம். தேதி குறிப்பிட்டதில் தவறென்பதால் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம். எல்லோரையும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இந்த முறைதான் அவரிடம் சற்று அதிகம் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ்மகன் மூலம் என்னுடைய ஐந்து கவிதைகளை காலச்சுவடு இதழுக்கு அவரிடம் கொடுத்திருந்தேன். அதில் மூன்று கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார். அது எட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும் பிரசுரமாகவில்லை. இதைத்தான் கேட்கப் போகிறேனோ என்று அவருக்குப் பேசுவதற்கு முதலில் சிறு தயக்கம் இருந்தது. எனக்குப் பேசுவதற்கு வேறு விஷயங்கள் இருந்தன.

'காலச்சுவடு பெண் படைப்பாளிகள்' தொகுப்பை ராஜமார்த்தாண்டன் தொகுத்து இருந்தார். இதில் காலச்சுவடு மே-2004 இதழில் என் மனைவி பெயரில் (அ.அருந்ததி) நான் எழுதியிருந்த 'இன்னொன்றிலான உலகு' என்ற தலைப்பிலான கவிதையும் தொகுக்கப்பட்டிருந்தது. பெண்கள் பேருந்தில் திருட்டுத்தனமாய் ஏறி அமர்ந்திருக்கும் ஆணைப்போல அப்புத்தகத்தில் என் கவிதை திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த பதிப்பில் இதை நீக்கிவிடும்படி கேட்டுக்கொண்டேன். 'இந்தப் பிரச்சினைக்காகவே சந்தேகம் வந்த அனைவருக்கும் கடிதம் எழுதிக் கேட்டோம். அருந்ததி என்ற பெயரில் ஈழத்துக் கவிஞர் ஒருவர் இருக்கிறார். அவர் என்று நினைத்து இணைத்துவிட்டேன். இதில் இன்ஷியல் இருப்பதைக் கவனிக்கவில்லை' என்று சொன்னார். பெயரை மாற்றிமாற்றி எழுதுவதால் இப்படியொரு பிரச்னை வரும் நானும் கருதியதில்லை. அதற்கடுத்து பேச்சுகள் மாறி, 'கவிதையில் ஏதாவது சந்தேகம் என்றால் சுகுமாரனிடம் கேட்பேன்; ஒரு கவிதை தொகுப்பு கொண்டு வரவேண்டும்; 'புதுக்கவிதை வரலாறு' நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும்' என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் நெடுநாளாய் பழகிய மாலை சங்கம நண்பர்கள் திரண்டுக் கொண்டிருந்தார்கள். அவர் கவனம் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டது. எல்லோரிடம் விடைபெற்றார். அதுதான் இறுதியான விடைபெறல் எனத் தெரியாமலேயே கையசைத்தோம். முத்தையா வெள்ளையன் அவர் இறப்புச் செய்தியைச் சொன்னபோது தாங்க முடியவில்லை. துடித்துவிட்டேன். அலுவலகமே சோகத்தால் உறைந்துபோனது. துக்கத்தைத் தாங்கமுடியாமல் எல்லோர் நாவும் திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது. 'சொல்லிட்டுப் போவதுபோல வந்தார். கடைசி வரை ஓய்வூதியத்தை வாங்கிப் பார்க்கவே இல்லை'.

ராஜமார்த்தாண்டனின் பல கவிதைகள் என்னை மீண்டும் கவிதைக் காடுகளில் பயணிக்க உதவியிருக்கின்றன. 'வால் மனிதன்' என்றொரு அவர் கவிதை. /இப்போதெல்லாம் அவனுடன் ஒரு வால்/ ஏதேனுமொரு வால்/ சிலபோது குரங்கின் வால்/ சிலபோது சிங்கத்தின் வால்/ சிலபோது நரியின் வால்/ சிலபோது குதிரையின் வால்/ சிலபோது எலியின் வால்/ சிலபோது ஆட்டின் வால்/ சிலபோது பன்றியின் வால்/ என்றிப்படி எப்போதும்/ ஏதேனுமொரு வால்/ ஒரு வால் மறைந்த கணம்/ ஒட்டிக்கொள்ளும் இன்னொரு வால்/ விரைவாக/ இப்போதெல்லாம் அரிதாகி வருகின்றன/வாலில்லாமல் அவன்/ நடமாடும் கணங்கள்/ என்று முடியும் அந்தக் கவிதை. பல நண்பர்களிடம் சிலாகித்து இந்தக் கவிதையைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரைச் சந்தித்த காலங்களில் அவரிடம் அவர் கவிதை குறித்து ஒரு சொற்கள்கூட உதிர்த்ததில்லை.

'என் கையில் இருந்த பரிசைப் பிரிக்கவில்லை. பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும்போல் இருக்கிறது' என்று தேவதச்சன் அவருடைய "பரிசு' கவிதையில் எழுதியிருப்பார். அந்த வரிகளை நான் பின்பற்றியிருக்கிறேன். பல கவிஞர்களிடம் அவர் கவிதைகள் பிடித்திருந்தாலும் அது பற்றி பேசாமலேயே இருந்திருக்கிறேன். அதைப்போல்தான் ராஜமார்தாண்டனிடமும் இருந்தேன். அப்படி உயிர்ப்பித்துச் சொல்லாத அந்தச் சொற்கள் இப்போது என்னைக் குற்றவாளியாக்கி வதைக்கிறது.
நன்றி: `புதிய புத்தகம் பேசுது'

Saturday, July 4, 2009

கோடில்லாத நோட்டின் கோணல் எழுத்துகள்


பேசாதவைக்கு எல்லாம்
பிள்ளைகளோடு பேசுவதுதான் பேறு.
கைப்பிடித்து அழைத்து வந்து
மூன்றாம் வகுப்பு 'பி' பிரிவு கனகாவின்
கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு
நாலு வரி நோட்டுச் சொன்னது:

'வா... செல்ல மகளே
எழுத்தோடு
நாலு சக்கர நடைவண்டியால் பழகுவோம்
சீவின இந்தப் பென்சிலை
கைப்பிடியாகப் பிடித்துக்கொள்
மெல்ல துவங்கி வா
அப்படித்தான்...அப்படித்தான்
முதல் சக்கரத்தையும் நான்காம் சக்கரத்தையும்
நன்றாகக் கவனி
பாதையைத் தாண்டிப் போகவிடாதே
நேராக...நேராக...நேராக வா...
அவ்வளவுதான் மகளே.'

ஃபைவ் ஸ்டார் சுவைத்துக்கொண்டிருந்த
நான்காம் வகுப்பு 'டி' பிரிவு கேசவனின்
முதுகைத் தடவிக் கொடுத்தபடியே
இரட்டை வரி நோட்டுச் சொன்னது:

'சாக்லெட் சுவைத்துவிட்டாயா...கண்ணே
ஊதுகுழல் பிணைத்த பென்சிலாலான
உன்னுடைய காலணியை அணிந்து கொள்
எழுத்துக்குப் புவி ஈர்ப்புவிசையைக் கொடுப்பதற்காக
காத்திருக்கும் சிறு இடைவெளி விட்ட
என் இரு கோடுகளைப் பார்
நேராய் நில்
நிற்கிற நேரிலேயே
மென்மையூடே அவற்றிற்கிடையில் அழுத்திப் பதித்து வா...
ஊதுகுழல் மனனம் செய்து பாடத் தொடங்கிவிட்டன
நீயும் சத்தமாய் எழுத்தைப் போற்றி வா
கொஞ்சம் வேகமாய்....போதும்...போதும்...
அழகு கண்ணே... நேர் கொண்ட அழகு கண்ணே...'

புழுதி காலை கழுவி வர வைத்து
பயத்தோடு உட்கார்ந்திருந்த
ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு கோகிலாவிடம்
கோடில்லாத நோட்டுச் சொன்னது:

'பாதுகாப்புக்கு
ஒரு கோடும் இல்லாததற்காகத் திகைக்காதே
வளர்ந்த பிள்ளையே...
மேலூரிலிருந்து கீழூருக்கும்
கீழூரிலிருந்து மையவூருக்கும்
நெளிந்து போகுமென்பதற்காகப் பதறாதே
கண்ணாடி ஸ்கேலாக உன் பார்வையை வை
வலக் கண்ணால் மேல் கோடு வரை
இடக் கண்ணால் கீழ் கோடு வரை
கோணலில்லாத மனதை
எழுதுகோலுக்கு மையாயூட்டி
எழுத்தை எழுப்பி அழைத்து வா...
வரிவரியாய் வந்துகொண்டே இரு
மண்ணை உழுதெழும்
மண்புழுக்கள் போல.'
நன்றி: வார்த்தை