Wednesday, August 19, 2009

பாலை, மழை, காளான்


பார்த்துப் பார்த்து
கால்நகங்களின் அழுக்கு நீங்கத் தேய்த்து
சிலீரிட நன்றாய்க் குளிக்க
எதிர்படுகிறவர்களிடமெல்லாம்
தாராளமாய்ச் சொற்களைக் கொடுத்து வைக்க
வெறிப்பற்களால் குதறிக் கொண்டு
நாய்கள் போடும் சண்டையெதையும்
அலுவலகக் கோப்புகளில் பார்க்காமல் கடக்க
துயரை பின்னால் நிறுத்திக் கொண்டு வராத
மகிழ்ச்சியை விரல் பிடித்து நடக்க
சென்றும் செல்லாமலும்
நிலைகொண்ட காட்சியோடு
வெறித்து, பிதுங்கிக் கிடக்கும்
விபத்துக்கண்களெதையும் வழிகளில் காணாமல் வீடு திரும்ப
அருவியில் குளிக்க வைக்கும் புத்தக வரியிலிருந்து
அப்படியே நெட்டித் தள்ளி பாறையில் சிதறவிடும்
இடையூறற்று வாசித்துக் குளிர
புகார்கள், கோரிக்கைகளால்
புடைத்திருக்காத அவள் புருவங்களைக் காண
அவசரமின்றி பதற்றமின்றி
நெடுநேரம் நொறுங்கிப் புணர
நினைவு வௌவாலெதும் கொத்தி எழுப்பாது
பற்றாக்குறையற்று தூங்க
வாயில் வழுக்கியோடும் அல்வாதுண்டுபோல
புதுச் சூரியனுக்குள் கால் பதித்துப் போக -
என்றாவது வாய்க்கும்
அந்த மழைநாள்களின் வெள்ளத்தில்
எல்லாப் பாலைநாள்களும்
அடித்துப்போய்
காளான்களாய் முளைக்கின்றன.
நன்றி: உயிரோசை

1 comment:

சூர்யா ௧ண்ணன் said...

நல்லாயிருக்குங்க ..,