Tuesday, February 16, 2010

போர்ஹே சந்திப்பு தொடர்ச்சி



கேப்: ஆங்கிலோ - சாக்ஸன் கவிதையின்பால் ஈர்த்தது எது?
போர்ஹே: அர்ஜெண்டினாவின் தேசிய நூலகத்தின் தலைமை நூலகராக நான் நியமிக்கப்பட்டபோது, வாசிக்க முடியாதபடி பார்வையை இழந்து விட்டேன். வளைந்து கொடுக்கப்போவதில்லை, பின் வாங்க மாட்டேன், தன்னிரக்கத்திற்கு இடந்தர மாட்டேன் என்றேன். பிறிதொரு விசயத்தை முயன்று பார்த்தேன். அப்போது வீட்டிலே ஸ்வீட்டின் Anglo - saxon reader மற்றும் saxon chronicles இருப்பது நினைவுக்கு வந்தது. ஆங்கிலோ - சாக்ஸனைக் கற்றுப் பார்ப்போம் என்று தொடங்கினேன். கையேடுகள் மூலமாக கற்றேன். இரு வார்த்தைகள் மூலம் இதனுடன் காதல் வயப்பட்டேன். இன்னும் நினைவில் நிற்கின்ற அவ்விரு வார்த்தைகள் london, londonbur hand மற்றும் rome, romeoburh. இப்போது , பழைய ஆங்கிலத்தைக் காட்டிலும் சிறந்த இலக்கியத்தைப் பெற்றிருக்கும் பழைய நோர்ஸ் மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கேப்: இருபதாம் நூற்றாண்டின் தொன்மவியலை, எழுத்தாளர்களுக்குக்கென எவ்விதம் விளக்குவீர்கள்?
போர்னே: அது ஒரு பெரும் கேள்வி.

போர்ஹே: பிரக்ஞைபூர்வமாகச் செய்யப்படக் கூடியதென நான் நினைக்கவில்லை. உடனிகழ் காலத்தவராக இருந்திட முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே உடன் நிகழ்காலத்தவராகவே இருக்கிறோம். எக்காலத்திலும் உருவாகி வந்து கொண்டிருப்பதே தொன்மவியலில் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கிரேக்க பழைய நோர்ஸ் தொன்மவியலை என்னால் விளக்கக் கூடும்.

சார்லஸ் சிலுவர்: உங்களைப் பாதித்திருக்கும் வகையிலே நீங்கள் மேற்கொண்ட அனுபூதியான - மதத்தன்மையிலான வாசிப்புகள் ஏதேனும் உண்டா என்று வியப்புறுகிறேன்.
போர்ஹே: நிச்சயமாக உண்டு. ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் சூஃபிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருக்கிறேன். நான் சாவதற்குள் ஸ்வீடன் இயற்கை விஞ்ஞானியான ஸ்வீடன் போர்க் பற்றிய நூலொன்றை எழுதுவதில் என்னால் ஆனதைச் செய்வேன் என எண்ணுகிறேன். எமர்ஸனின் representative மூலமாக அவர் அறிமுகமானார். ப்ளேக்கும் ஒரு அனுபூதியாளரே. ஆனால் ப்ளேக்கின் தொன்மவியல் எனக்குப் பிடிப்பதில்லை; அது மிகவும் செய்கையானது.

போர்னே: 'விட்மனை வாசிப்பவர் விட்மனாகிறார்' என்றீர்கள். நீங்கள் காப்ஃகாவை மொழியாக்கம் செய்தபோது நீங்கள் ஏதாவதொரு அம்சத்தில் காஃப்காவாக இருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களோ என ஆச்சரியப்படுகிறேன்.
போர்ஹே: காஃப்காவுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். உண்மையில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். செஸ்டர்ன், காஃப்கா, சர் தாமஸ் ப்ரெüன் போன்றோர் முன்னிலையில் நான் வெறும் வார்த்தையே. நான் அவரை விரும்புகிறேன்; பதினேழாம் நூற்றாண்டு ஸ்பானிஷில் மொழிபெயர்தேன். அது நன்றாக வந்தது. urne: Buriall- விலிருந்து ஓர் அத்தியாயத்தை க்யூவெடோவின் ஸ்பானிஷில் மொழிபெயர்த்தோம். அது நன்றாக இருந்தது. அதே காலகட்ட, லத்தீனை வேறொரு மொழியில் எழுதுவது, லத்தீனை ஆங்கிலத்தில் மற்றும் ஸ்பானிஷில் எழுதுவது, என்னும் அதே கருத்துகள் எல்லாம் இருந்தன.

போர்னே: காஃப்காவை ஸ்பானிஷில் மொழிபெயர்த்தவர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் அவரை மொழியாக்கும்போது சேவையுணர்வு கொண்டிருந்தீர்களா?
போர்ஹே: இல்லை, வால்ட் விட்மனின் song of myself- னை மொழிபெயர்க்கும்போது அவ்வாறு உணர்ந்தேன். " நான் செய்து கொண்டிருப்பது முக்கியத்துவம் கொண்டது' என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். விட்மனை மனப்பாடமாகத் தெரியும்.

போர்னே: நீங்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளுள் ஏதாவதொன்று, உங்களது படைப்பினைப் புரிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் உதவியிருப்பதாக, நீங்களே செய்திருப்பவற்றை நியாயப்படுத்துவதாக எப்போதாவது உணர்ந்தீர்களா?
போர்ஹே: இல்லை, என்னுடைய படைப்பு பற்றி நான் எண்ணவில்லை.

போர்னே: நீங்கள் மொழிபெயர்க்கும்போது?
போர்ஹே: இல்லை, ப்யூனஸ் அயர்ஸிலுள்ள என் வீட்டை வந்து பாருங்கள், என் நூலகத்தைக் காட்டுகிறேன். என்னுடையதோ என்னைப் பற்றியோ ஒரு புத்தகம்கூட இருக்காது. இது நிச்சயமானது. என் புத்தகங்களை தெரிவு செய்கிறேன். சர் தாமஸ் ப்ரெü அல்லது எமர்ஸனுக்கு அருகிலே இடம் பிடித்துக்கொள்ள நான் யார்? ஒன்றுமில்லாதவன்.

போர்னே: படைப்பாளர் போர்ஹேயும், மொழிபெயர்ப்பாளர் போர்ஹேயும் முற்றிலும் வேறானவர்களா?
போர்ஹே: ஆமாம், வேறானவர்களே. மொழிபெயர்க்கும்போது அத்துமீறாதிருக்க முயலுகின்றேன். நல்லதொரு மொழியாக்கம் செய்ய, அத்துடன் கவிஞராக இருக்கவும் முயலுகிறேன்.

போர்னே: உங்களது படைப்புகளில் அர்த்தமெதனையும் பொதிந்து வைத்திவிட நீங்கள் முயன்றதில்லை என்றீர்கள்.
போர்ஹே: என்னை ஒரு அறவியல் சார்பாளராகவே கருதிக் கொள்கிறேன். ஆனால் அறநெறிகளை போதிக்க முயலுவதில்லை. என்னிடம் செய்தி கிடையாது. சமகால வாழ்வு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தினசரிகள் எதையும் வாசிப்பதில்லை. அரசியலையும், அரசியல்வாதிகளையும் வெறுக்கிறேன். எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை.என் அந்தரங்க வாழ்க்கை அந்தரங்கமானதே; புகைப்படத்தையும் விளம்பரத்தையும் தவிர்க்கவே முயலுகிறேன். என் தந்தைக்கும் இதே எண்ணம் இருந்தது. 'நான் வெல்ஸின் புலப்படாத மனிதனாக விரும்புகிறேன்' என்பார். அது குறித்து பெருமிதப்படுவார். ரியோ டி ஜெனிரோவில் என் பெயரை யாரும் அறியார். அங்கே புலப்படாதிருப்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக விளம்பரம் என்னைக் கண்டுகொண்டுவிட்டது. அதுபற்றி நான் என்ன செய்யக்கூடும்? அதனை நான் தேடுவதில்லை. என்னை அது தேடிக் கொண்டது, ஒருவருக்கு எண்பது வயதாகிறது, கண்டறியப்படுகிறார், துப்பறியப்படுகிறார்.
போர்னே: உங்களது படைப்பின் அர்த்தம், அர்த்தமின்மை தொடர்பாக; காஃப்காவின் படைப்பெங்கும் குற்றணர்வு ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களது படைப்பில் ஒவ்வொன்றும் குற்ற உணர்வைத் தாண்டியதாக இருக்கிறது
.
போர்ஹே: ஆமாம், அது சரிதான் காஃப்காவுக்கு குற்றவுணர்வு இருந்தது. என்னிடம் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் நான் செய்திருப்பவை செய்யப்பட்டுள்ளன.; எனக்காக அல்லது என் மூலமாக. ஆனால் உண்மையிலேயே நான் அதனைச் செய்திருக்கவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, என்னால் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

போர்னே: பஞ்சபூதங்களால் ஆன வரம்புக்குட்பட்ட சேர்க்கை மட்டுமே உண்டு. எனவே கருத்துக்களை உருவாக்குவதென்பது கடந்த காலம் பற்றிய மறு கண்டுபிடிப்பே - என்னும் உங்களது கூற்றுடன் இதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாமா?
போர்ஹே: பார்க்கலாம் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த காலத்துப் புத்தகங்களை மீளவும் எழுதிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனைச் சுற்று வித்தியாசமாக செய்கிறது என்று எண்ணுகிறேன். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டுவிட்ட கவிதை ஒன்று என்னால் எழுதப்படுகிறது. அதாவது என்னால் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இதுவே என் தார்மீகப் பணி. இலேசான மாறுதல்களையே நாம் செய்கிறோம். ஆனால் மொழியினை ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். அவ்வாறு செய்திட ஜாய்ஸ் முயன்றார். அவர் சில நேர்த்தி மிகு வரிகளை எழுதிய போதும் தோற்றுவிட்டார்.

போர்னே; மீண்டும்மீண்டும் எழுதப்பட்ட இக்கவிதைகளை எல்லாம் புதிர்பாதையில் ஒரே சுவரிடம் வந்து சேருதல் போன்றது என்பீர்களா?
போர்ஹே: அப்படியே, அது நல்ல உருவகம். ஆமாம், நிச்சயமாக.

போர்னே: உள்ளூர் வண்ணத்தைப் பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்; எப்போது சரியாக இருக்காது என்பதற்கான வழிகாட்டு நெறிகளைக் கூறுவீர்களா?
போர்ஹே: தடைப்படுத்தாத விதத்திலே செய்ய முடியுமானால் நல்லது. ஆனால் அழுத்திக் கூறினால், எல்லாம் செயற்கையாகிவிடும். ஆனால் அது பயன்படுத்தப்பட வேண்டும். அது விலக்கப்பட்டதல்ல என்கிறேன். அதனை அழுத்த வேண்டியதில்லை. போனஸ் அயர்ஸில் ஒருவித கொச்சை மொழியினை உருவாக்கியிருக்கிறோம். அதனை எழுத்தாளர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்களுக்கு அதனால் பயனேதும் கிடையாது. இருபது நிமிடத்திற்கொரு கொச்சை வழக்கில் வார்த்தை ஒன்றினை அவர்கள் கூறலாம். ஆனால் எப்போதும் கொச்சை மொழி பேசிட யாரும் முயலுவதில்லை.

போர்னே: வட அமெரிக்க எழுத்தாளர் யாரேனும் உள்ளூர் வண்ணத்தை திறம்பட கையாண்டுள்ளனரா; அப்பண்பாட்டிற்கு அந்நியர் என்ற முறையிலே உங்களுக்கு அதனை ஆற்றலுடன் வெளிப்படுத்தியிருப்பவர் என யாரைக் கருதுகிறீர்கள்?
போர்ஹே: மார்க் ட்வைன். ரிங் லார்ட்னர் சிறிது வழங்கியிருப்பதாக எண்ணுகிறேன். அவரை மிகமிக அமெரிக்கத் தன்மை கொண்டவராக எண்ணுகிறீர்கள் இல்லையா?

போர்னே: மற்றும் நகர்ப்புறத்தன்மை வாய்ந்தவர்.
போர்ஹே: மிகவும் நகர்ப்புறத் தன்மை. மற்ற எழுத்தாளர் யார்? ப்ரெட் ஹார்டியை வாசித்திருக்கிறேன். ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளராக இருந்தார் என எண்ணுகிறேன். ஹெமிங்வேயை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. தவறான முறையிலே கதையைச் சொல்வதும், காலக் கிரமத்தைக் கலந்து போடுவதுமாக இருந்தபோதும் ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளரே.

போர்னே: ஃபாக்னரின் ûwild palms-யை மொழிபெயர்த்தீர்கள்.
போர்ஹே: ஆம், ஆனால் அந்நூல் அவ்வளவாகப் எனக்குப் பிடிக்காது. light in august மிக நல்ல புத்தகம். ஆனால் அது அவருக்குப் பிடிக்காது. sanetuary- குறிப்பிடத்தக்க படைப்பே. அதுவே நான் படித்த முதல் ஃபாக்னர் புத்தகம். பிறகு மற்ற புத்தகங்களைப் படிக்கலானேன். அவரது கவிதையினையும் படித்தேன்.

போர்னே: ஃபாக்னரையும் அவரது உள்ளூர் வண்ணத்தையும் நீங்கள் மொழிபெயர்க்கும்போது, நேரடியான ஸ்பானிஷில் கொண்டு வந்தீர்களா அல்லது உள்ளூர் ஸ்பானிஷ் வகையொன்றில் மாற்றிட முயன்றீர்களா?
போர்ஹே: இல்லை, கொச்சை வழக்கை மொழிபெயர்க்க வேண்டுமாயின், நேரடியான ஸ்பானிஷில்தான் செய்ய வேண்டும். இல்லாதுபோனால் வேறுவிதமான உள்ளூர் வண்ணம் கிடைக்கும். உதாரணமாக El gavcho marti fierro என்றழைக்கப்படும். கவிதை மொழிபெயர்ப்பு எங்களிடமுண்டு. இப்போது அது கெüபாய் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது தவறு என்பேன். ஏனெனில் இதில் கெüபாய்கள் பற்றித்தான் நினைக்க முடிகிறதேயொழிய, தென் அமெரிக்க இடையர்களை எண்ணிப் பார்க்க இயலவில்லை. மார்ட்டின் ஃபைரோவை என்னால் முடிந்த அளவுக்கு தூய ஆங்கிலத்திலே மொழியாக்கம் செய்வேன். கெüபாயும், தென் அமெரிக்க இடையரும் ஒரேவித மனிதர்தான் என்றபோதும், அவர்களை வேறுபடுத்தித்தான் எண்ணுகிறோம். உதாரணமாக, கெüபாய் என்றதும் துப்பாக்கிகளை எண்ணிப் பார்க்கிறோம். ஆனால், தென்அமெரிக்க இடையனை நினைக்கும்போது குறுவாள்களும், நேருக்கு நேர் மோதல்களுமே நினைவுக்கு வரும். எழுபத்தைந்து அல்லது சற்று அதிகமான வயதுடைய கிழவன், இளைஞன் ஒருவனை நேருக்கு நேர் மோதலுக்கு சவால் விட்டதைப் பார்த்திருக்கிறேன். பயங்கரமாகத் தோன்றும் இரு குறுவாள்களை எடுத்து வந்தான். ஒன்று வெள்ளிப் பிடி கொண்டிருந்தது. ஒன்று மற்றதைவிடப் பெரியதாக இருந்தது. இரண்டும் ஒரே அளவினதாய் இல்லை. அவற்றை மேசை மீது வைத்துவிட்டு, ""சரி இப்போது உன் ஆயுதத்தை எடுத்துக்கொள்'' என்றான். ""நீ பெரியதை எடுத்துக் கொள்ளலாம், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை'' என்ற பொருள் அப்பேச்சில் இருந்தது. அப்போது இளைஞன் மன்னிப்புக் கேட்டான். கிழவனது வீட்டில் பல குறுவாள்கள் இருந்தன. ஆனால் அவை இரண்டையும் வேண்டுமென்றே தெரிவு செய்தான். ""இக்கிழவனுக்கு குறுவாளைக் கையாளத் தெரியும், ஏனெனில் இன்னொன்றை அவனால் தெரிவு செய்ய இயலும்'' என்று அக்குறுவாள்கள் கூறின.

போர்னே: அது உங்கள் கதையை நினைவுபடுத்துகின்றன...
போர்ஹே: அம்மையக் கருத்தை என் கதையில் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு நபரின் அனுபவத்தைச் சொல்வதிலிருந்து கதைகள் பிறக்கின்றன.

போர்னே: அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அவ்வார்த்தையைக்குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னால் போதுமானது.
போர்ஹே: அதன் பொருள்: அவன் ஒரு போக்கிரி, மோசடிக்காரன். அதே வேளையில் அவனுக்கென்று ஒரு நெறி உண்டு. எச்சரிக்கை இல்லாது யாரையும் தாக்குவது பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. ஒட்டுமொத்த காரியமும் மிக மெதுமெதுவாக நிகழ்ந்தது. இன்னொருவரைப் புகழ்வதன் வாயிலாக ஒரு தொடங்கலாம். அப்போது, யாருக்கும் சண்டையிடத் தெரியாத பிரதேசத்திலிருந்து வந்தவன் அவன் என்று நாம் சொல்ல விரும்பலாம். ஒருவேளை அவனுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதன்பிறகு மற்றவரை புகழ்ச்சிச் சொற்களால் இடைமறித்து, "தெருவிற்குள் போவோம், உனது ஆயுதத்தைத் தெரிவு செய்துகொள்' என்பது போன்று கூறலாம். ஆனால் இது முழுவதும் மிக மிக மெதுவாக நிறைவேற்றப்பட்டது. அத்தகைய விவரிப்பு நழுவிவிட்டதோ என்று ஆச்சரியப்படுகிறேன். இப்போதெல்லாம் துப்பாக்கிகளை, சுழல் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அந்த அறநெறியெல்லாம் போய்விட்டது. தொலைவிலிருந்தே ஒருவரைச் சுட்டுவிடலாம்.

போர்னே: கத்திச்சண்டை மிக நெருக்கமானது.
போர்ஹே: நெருக்கமானது, ஆமாம். அவ்வார்த்தையைப் பயன்படுத்தினேன்; ஒரு கவிதையின் இறுதியிலே அதனைப் பயன்படுத்தினேன், ஒருவனது தொண்டை அறுபட இருக்கிறது. "நெருக்கமாக கத்தி அதன் கழுத்தில் மேல்' என்கிறேன்.

போர்னே: பழைய வடிவங்களையும் ஸ்தாபிதமாகிவிட்ட எழுத்தாளரையும்போல் எழுதிப்பார்த்து புது எழுத்தாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்.
போர்ஹே: இது நேர்மை சார்ந்த பிரச்னை என்று எண்ணுகிறேன். இல்லையா? எதையாவது புதுப்பிக்க விரும்பினால், ஏற்கனவே செய்யப்பட்டுள்ளவற்றை உங்களால் செய்துகாட்ட இயலும் என்று காட்டியாக வேண்டும். புது முயற்சி மூலம் ஆரம்பிக்கவியலாது. உதாரணமாக சுயேச்சையான கவிதை மூலம் தொடங்க முடியாது. சிற்றுணர்ச்சிப் பாடல் ஒன்றை முயன்று பார்க்க வேண்டும், அல்லது வேறுவிதமான செய்யுள் வகையைப் பரீட்சித்து, அப்புறம் புது விஷயங்களுக்குப் போக வேண்டும்.

போர்னே: விலகி வெட்டிச் செல்லும் நேரம் எது? புது முயற்சியில் இறங்குவது எப்போது என்று நீங்கள் உணர்ந்ததை உங்கள் அனுபவத்திலிருந்து கூறுங்களேன்?
போர்ஹே: முடியாது, நான் தவறு செய்துவிட்டேன். சுயேச்சையான கவிதையிலிருந்து தொடங்கினேன். அதனைக் கையாள்வது எப்படி என நான் அறிந்திருக்கவில்லை. மிகச் சிரமமானது, சாஸ்திரிய வடிவங்களை எழுதுவது எளிதானது. ஏனெனில் உங்களுக்கு உதவிடும் வகை மாதிரி அவற்றில் இருக்கிறது என்பதை பின்னரே கண்டுகொண்டேன். ஆனால் சுயேச்சை கவிதையில் உங்களுக்கென ஒருவகை மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கிறது, மற்றும் அதனை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நல்லது, உரைநடை வருவது கவிதைக்குப் பின்னர்தான். உரைநடை மிகச் சிரமமானது. எனக்குத் தெரியாது. உள்ளுணர்வால் எழுதியிருக்கிறேன். பிரக்ஞைபூர்வமாக கவியாக என்னை நான் கருதவில்லை.

போர்னே: மரபார்ந்த வடிவங்களுடன் தொடங்க வேண்டும் என்கிறீர்கள்? இது பார்வையாளர் சார்ந்த பிரச்னை இல்லையா?
போர்ஹே: இல்லை. பார்வையாளரை நான் நினைத்ததேயில்லை. எனது முதல் நூலை அச்சிட்டதும், அதனை புத்தகக் கடைகளுக்கோ, மற்ற எழுத்தாளர்களுக்கோ அனுப்பவில்லை. நண்பர்களுக்குத் தந்துவிட்டேன். 300 பிரதிகளை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். அவை விற்பனைக்காக இருந்ததில்லை. அந்நாட்களில் ஓர் எழுத்தாளர் புகழ்பெறுவது அல்லது வெற்றி } தோல்வி பற்றி யாரும் நினைத்ததில்லை. 1920, 1930- களில் அக்கருத்துக்கள் எங்களுக்குத் தொலைதூரமானவை. வெற்றி, தோல்வி - புத்தகங்களை விற்பது என்ற ரீதியில் யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு அல்லது ஒருவித விதியாக நாங்கள் எண்ணினோம். டிக்வென்ஸியின் சுயசரிதத்தை நான் படித்தபோது, தன்னுடைய வாழ்க்கை இலக்கிய வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டிருந்தார் எனக் கண்டுகொண்டேன். - மில்டனும், கோல்ரிட் ஜீம் அப்படியே அறிந்திருந்தனர் என எண்ணுகிறேன். தம் வாழ்க்கை இலக்கியத்திற்கும் வாசிப்புக்கும் எழுதுவதற்கும் அர்ப்பணிக்கப்படும் என்பதனையறிந்தனர்.

போர்னே: Borges and I என்னும் சிறு கட்டுரையும் The watcher என்னும் கவிதையும் இரட்டை Double- யின் பாலான உங்களது ஆர்வத்தைக் காட்டுகிறது. எழுத்தாளர் அல்லாத போர்ஹேயை சிறிது நேரம் பேசவிட்டு, தான் விரும்பினாலும் விரும்பாது போனாலும் எழுத்தாளர் போர்ஹேயின் மதிப்பீட்டைத் தரச் செய்யலாமா?
போர்ஹே: அவ்வளவாக நான் விரும்புவதில்லை. மூலப் பிரதியைகளே தெரிவு செய்வேன். செஸ்டர்னையும் காஃப்காவையும் தேர்ந்தேடுப்பேன்.

போர்னே: அர்ஜென்டினாவிலுள்ள உங்களது நூலகத்தில் உங்கள் நூல்கள் இடம்பெறாது. எழுத்தாளர் அல்லாதவரின் முடிவென்று நினைக்கிறீர்களா?
போர்ஹே: ஆம், நிச்சயமாக.

போர்னே: அச்சூழலில் தன்னை உணருமாறு செய்து கொண்டாரா?
போர்ஹே: ஆமாம், அவர் செய்துகொண்டார். ஆமாம் என்னைச் சுற்றிலும் அவரின் எந்த நூலையும் காண முடியாது உங்களால். ஏனெனில் நான் நோயுற்றவன், ஓய்ந்து போனவன் என்று அவருக்கு எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரித்தேன். நல்லது போர்ஹே மீண்டும் இங்கே இருக்கிறார். நான் என்ன செய்யக்கூடும்? ஒத்துப் போக வேண்டியதுதான். நான் அனுமானிப்பது போலவே ஒவ்வொருவரும் உணருகின்றனர்.

போர்னே: ழான் பால் சார்த்தரின் ஒரு வாசகம் என்னை எப்போதும் வசீகரிக்கப்படுத்தும். அவர் குறிப்பிட்டார்: Man is wizard unto manó. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்றுக் கொள்கிறீர்களா?
போர்ஹே: Man is wizard ?

போர்னே: கருத்துக்களை இட்டுக் கட்டுகிறான். பிரபஞ்ச விதிகளை உருவாக்குகிறான். சகமனிதர்கள் அவற்றை நம்புமாறு செய்கிறான். அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
போர்ஹே: குறிப்பாக அது கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தக் கூடியது என்று கருதுகிறேன். இல்லையா? மற்றும் இறைவியலாளருக்கும் பொருந்துவது Trinity பற்றி எண்ணிப் பார்த்தோமானால், அது எட்கர் ஆலன்போவைவிட புதிரானதாய் இருக்கும். பிதா, சுதன், பரிசுத்த ஆவி. அவை ஒன்றாகி விடுகின்றன. மிக மிகப் புதிரானது. ஆனால் யாரும் அதனை நம்புவதில்லை. குறைந்தபட்சம் நான் நம்புவதில்லை.

போர்னே: ஆற்றல் வாய்ந்தவையாக தொன்மங்கள் இருந்திட அவை நம்பவேண்டிய அவசியமில்லை.
போர்ஹே: இல்லை, இருந்தும் வியப்படைகிறேன். உதாரணமாக, நம் கற்பனை centaur- னை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பூனைமுகம் கொண்ட எருதினை ஏற்பதில்லை. இல்லை, அது சரியானது இல்லை, நயமற்றது. ஆனால் momptain, centaurகளை ஏற்றுக்கொள்கிறோம். அவை அழகாயிருப்பதால் , குறைந்தபட்சம் அவை அழகியவை என்று எண்ணுகிறோம். நிச்சயமாக அவை மரபின் அங்கமாயுள்ளன. ஆனால் வரலாற்றுச் சின்னங்களையும் நாணயங்களையும் அறிந்திராத தாந்தே, லத்தீன் எழுத்தாளர்கள் மூலமாக கிரேக்க தொன்மங்களை அறிவார். தாடியுடன் கூடிய மனித முகம் கொண்ட எருதாக minolaur-னை எண்ணினர். மிக அருவருப்பானது, எருதின் முகம் கொண்ட மனிதனாக அவனை நினைத்துக் கொள்ளும்போது, தாந்தேயின் பல பதிப்புகளில் அதுபோன்ற minolaur -னைப் பார்க்கலாம். ஆனால், தாந்தே, பாதி எருதை, பாதி மனிதனை வாசித்திருந்ததால், அவனை அப்படியாக எண்ணினார். நம் கற்பனை அதை ஏற்பதில்லை. ஆனால் பல தொன்மங்களை நாம் எண்ணிடும்போது, மிகவும் கேடான தொன்மம் என்று இருக்கிறது. அது தேசங்கள் பற்றின தொன்மம் நான் ஒரு சிலி தேசத்தவன் அல்ல, உருவகுவே நாட்டவன் அல்ல, அர்ஜென்டினாவைச் சேர்ந்தவன் என்று ஏன் நான் நினைத்துக் கொள்ள வேண்டும்? நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.நம்மீது நாமே திணித்துக்கொள்ளும் அத்தொன்மங்கள், வெறுப்பையும், யுத்தத்தையும் குரோதத்தையும் உண்டாக்கும் மிகக்கொடியவை. நாளடைவில் அரசாங்கங்களும் தேசங்களும் இல்லாது போய் நாமெல்லோம் சர்வதேசப் பிரஜைகளாகி விடுவோம்.


நூல்: மணல் பிரதி தொகுப்பு: தளவாய் சுந்தரம்

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

No comments: