Tuesday, December 30, 2008

உறங்குவதற்கு மட்டும் வரும் ஜெகதா



இரவுச்சுவர்களைத் தகர்த்துக்கொண்டு

எங்கிருந்தாலும் வந்துவிடுவாள் ஜெகதா

அவனோடு உறங்குவதற்கு மட்டும்

இலவம் பஞ்சுறுத்தாத தளும்புகிற

மெத்தையிலாது போனால்

அவள் இமைகளின் இருள் தாழ்ப்பாள்

தாழிடாது துன்புறுத்தும்

நினைவுகளை விழிகளாக்கி

அழுதழுது அவன்

அந்தச் சதுர அறையைக் குளமாக்குவான்

அதிலும் அலை மலையூதலிலாத

நீர் மெத்தையாகப் பார்த்து

ஒருக்களித்து மெல்லுடல் சாய்ப்பாள்

அவள் தலையணை விருப்பம் அறிந்து

முன்வந்து நெஞ்சு புடைத்துக் காட்டுவான்

துருப்பிடிக்காத பழைய விழிக் குத்தீட்டியை இறக்கி

அவன் இதயத்தைப் பிடுங்கி இரண்டாய் வகுந்து

ஒன்றைத் தலைக்கும்

மற்றொன்றைக் காலிடுக்கிலும் வைத்துக்கொள்வாள்

உள்ளங்கால்களிலிருந்து தலை வரை

நிகழ்நிகழ்வாய் உரித்தெடுத்த அவனின் தீராவலியைப்

போர்வையாக அவளுக்குப் போர்த்தி

கேவல்களால் விரல்களுக்குச் சொடுக்கெடுப்பான்

பிறழ்ந்த அவன் பெருமூச்சுகளின்

ஏக்க மூச்சின் சுகத் தாலாட்டில்

மிதந்துறங்கிப் போகிறவள்

அவள் சுவடுகள் குத்திக் கிழிக்கக் கிழிக்க

பின்னால் நடந்த அவன் கால்களின் வெடிப்புகளில்

ஈர்க்குச்சிகளை நுழைத்துநுழைத்து

ஆழம் பார்த்து கனவில் சிரிப்பாள்

பலவருட புளிப்பேறிய

அவள் பழரசச் சிரிப்பை

மிடறுமிடறாய் விழுங்கி

அவன் போதையில் பிதற்றுவான்.


நன்றி: உயிரோசை



2 comments:

தேவன் மாயம் said...

இரவுச்சுவர்களைத் தகர்த்துக்கொண்டு

எங்கிருந்தாலும் வந்துவிடுவாள் ஜெகதா

அவனோடு உறங்குவதற்கு மட்டும்

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு!!!

தேவா..

சிக்கிமுக்கி said...

எழுத்து சரியாகப் புரியாவிட்டாலும் படம் மிகச்சிறப்பாக உள்ளது!