Wednesday, December 3, 2008

என்னுடனே பிறக்கும் என் பிள்ளைகள்



தன்னையே தனங்களுக்குள் குழைத்தூட்டி
எனக்குள்ளே அம்மா தன்
உயிர்க்கோட்டை நீட்டி வரைந்தபோது
கண்விழிக்காத நாய்க்குட்டிகளைப் போல
உணர்ச்சி விழிக்காத
உடல் விழிக்காத
இதயம் விழிக்காத
என் பிள்ளைகள்
உதிரம் பருகி வெளுத்தன விதைப்பையிலிருந்தவாறே

பரிசோதிக்கப்படும் புதுக்குழாயாக
பொழுதெல்லாம் விழும் வேப்பம்பழங்களைப்போல
அடிக்கடி நான் வெளியேற்றிய
கழிவுகளை வெறுக்காது
அம்மா தூய்மையித்தது
பேரன், பேத்திகளதையும் சேர்த்து

பல்வண்ணப் பந்தொன்று
மைதானத்து மகிழ்வை ஒட்டியோடி வந்து
கபடமற்றதாயிருந்த
என் மென் பாதங்களில் பதுக்கினபோது
உள்வெளி நிழலின் நிழலில்
சுருள் பிரிந்து விரிந்த மைதானம்
முழுதும் நிரம்பிப் பிள்ளைகள்
என் பால்யத்தைப் பிரதியெடுத்து விளையாடின

குறுக்கிட்டு தலைகீறி
கடந்த காகம்போல
மேற்கில் மறையத் தொடங்கிட்ட
என் வளரிளம் பருவத்தென்னை வடுவரை
கணந்தோறும் இயங்கும் உன்னத பயிலகங்களில்
இடித்து அமர்ந்திருக்கும் வாரிசுகளுக்கு
தேர்ந்த ஆசிரியனாகிக் கற்பித்தன
என் வாழ்வின் நிரல்களிலிருந்து பிழிந்து கொண்ட உணர்ச்சிகள்

வெப்பவீர்யத்தால் வெளியேறி வீழ்ந்திறந்த
துருதுரு பிள்ளைகளைத் தவிர்த்திருந்தவர்களில்
தேர்ந்த ஒரு பிள்ளையின் நச்சரிப்பால்
இருபத்தெட்டு வருட இரவுகளைக் கடந்து
ஒரு பகலாகிப்போன நிசியில்
அவளகத்துக்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தேன்
அறிவு விருத்திக்காக
அங்கு காத்திருந்த பிள்ளையொன்றை
என் பிள்ளை கவர்ந்து கலந்துலாவி
வெட்கத்தால் அப்படியே வெளிப்படாமல்
பத்துமாதங்களாய் எழுப்பிய வசதியான உருவத்துள்
கற்றவற்றை அவசியமாய் மறைத்து
அடிவயிற்றை உந்தி உதைத்து
தலைநீட்டுகிறது
எங்களைக் கடந்து
காலத்தைத் தொடர்ந்து போக...

நன்றி: புதுவிசை

2 comments:

கவி அழகன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

அங்கு காத்திருந்த பிள்ளையொன்றை
என் பிள்ளை கவர்ந்து கலந்துலாவி

த.அரவிந்தன் said...

நன்றி.