Saturday, November 15, 2008

என் மகளின் புனித நதி


நிலையான முகவரியில் நில்லாது
என் ஒரு வயது மகள் பெருக்கும்
புனித உப்பு நதியில் மிதக்கிறதென் வீடு
சுழன்றடித்துப் போவதும்
சற்று வற்றித் தரை தட்டிக் கிடப்பதும்
பின்பு பெருக்கெடுத்துப் போவதும் அந்நதியின் விளையாட்டு
நீர் புகுந்தும் மூழ்காது
இழுத்துக் கிளம்புகையிலும் தரை
தட்டுகையிலும் குலுங்கி குதூகலிக்கும் வீட்டில்
தலையணை, படுக்கையிலிருந்து
பொருள்கள் எல்லாமே நதியின் நேசிப்புக்குரியவை
கரை தெரியாதளவு பிரவாகமெடுத்து
என் புத்தகங்களில் ஓடிக்கொண்டிருக்கும்
பல காட்டாறுகள்
எப்போதேனும் மகளின் நதியில்
சங்கமித்துப் புனிதம் பெறுகின்றன
உப்புப் பூத்த ஆடை
உப்பு மொய்த்த சுவாசத்துடன்
வெளியில் போவதற்கு
நான் கவலையுற்றதே இல்லை
பிரத்தியேகக் கவனத்துடனிருந்தாலும்
துள்ளித் தெறித்துவிடுகிற துளிகளின் கலப்
பால் சமையல் சுவை கரித்துப்போவதே இல்லை
முகம்சுளிக்காது காத்திருந்தால்
மிதந்து வரும் என் வீடு
என்றாவது ஒரு நாள்
உங்கள் வீட்டு வாசலில் தரை தட்டலாம்.
நன்றி: ஆனந்தவிகடன்

No comments: