Friday, November 14, 2008

விரல் மிருகங்கள்


நிழல் மேல் விரையும் வெயிலாக
கள்வமிலாது கடந்து சென்றவை
என் பார்வைகள் என்பதை
உங்களுக்கெப்படிப் புரியவைப்பேன் தாயே...

சீவப்பட்ட குருத்துகளானாலும்
கள் வடியாதவை
என் சிரிப்புகள் என்பதை
உங்களுக்கெப்படி உணர்த்துவேன் தாயே...

இருபுற சிறகுகள் பிய்க்கப்படுகிற பறவையாய்
நீங்கள் துடித்து
மராப்பைத் துணைக்கு இழுத்தபோது
இரத்தணுக்களிலெல்லாம் அவமானம் சொருகிச்சொருகி
நான் கொலையுண்டேன் என்பதை
உங்களிடமெந்தக் காகம் சொல்லும் தாயே...

அழிப்பான்கள் எதனாலும் அழிக்கமுடியாத
நீங்கா நடுக்கத்தையே
நரை நுரைக்கும் பருவச்சுருக்கத்திலும் கொடுக்க
இடிபாடுகளின் அசந்தர்ப்பங்களில்
விரல்களிலிருந்து பாயும் கொடிய மிருகங்களிடமிருந்து
எங்கும்
உங்களையெப்படிக் காப்பேன் தாயே...

நன்றி: ஆனந்த விகடன்

2 comments:

முரளி வேணுகோபாலன் said...

kavithai super..

கலையரசன் said...

கவித எழுதுறது ஈசி ன்னு ஏவன்டா சொன்னான்?

நன்றி அறிமுகப்படுத்தியதற்கு...