Monday, June 2, 2008

பாவம் மூலம் பாடம்!



""கலைக்குச் சேவை செய்யவே கலையைக் கற்றுக் கொள்கிறேன் என்பதில் எனக்கு மாறான கருத்து உண்டு. இதர வகையிலும் பயன்பாட்டுக்கு உரியவையாய் கலை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்கிறார் அம்பிகா காமேஷ்வர்.
வெறும் வார்த்தைகளுக்காக அவர் இப்படிச் சொல்லவில்லை. கடந்த 89-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார். பரதம், கர்நாடக சங்கீதம், நாடகம் மூலம் உடற்குறைப்பாடு, மன வளர்ச்சிக் ன்றியவர்களுக்குப் பாடம் நடத்தும் "ரமண சுன்ரித்யா ஆலயம்' பள்ளியை சென்னை அபிராமபுரத்தில் நடத்தி வருகிறார்.

நாட்டியப் பாவம் மூலம் பாடம் சொல்லும்
அம்பிகா தொடர்கிறார்:

""பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில். என்னுடைய ஐந்து வயதிலேயே கர்நாடகச் சங்கீதம் கற்கத் தொடங்கினேன். என்னுடைய அம்மா சுலோச்னா நடராஜன், எஸ்.ராமநாதன், ருக்மணி ராஜகோபாலன், டி.கே.பட்டம்மாள் ஆகியோரிடம் கற்றேன். அதைப்போலவே சின்னவயதிலேயே பரதநாட்டியமும், குச்சிப்புடியும் கற்றுக்கொண்டேன். நாட்டியத்தை மீனாட்சி, நரேந்திர ஷர்மா உட்பட பலரிடம் கற்றுக்கொண்டேன். ஏழு வயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகள் செய்து வருகிறேன்.

உடற்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது பெங்களூரில்தான். என்னுடைய உறவினர் ஒருவர் பார்வையற்றோர் பள்ளி ஒன்று நடத்தினார். அந்தப் பள்ளியில்தான் நாட்டியம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாட்டியப் பாவங்களையும் தொடுஉணர்ச்சி மூலமாகத்தான் அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எளிதில் புரிந்துகொண்டு ஆச்சரியப்படுத்தியதுடன் நாட்டியத்தில் அபாரத் திறமையும் காட்டினார்கள். இதன்பிறகுதான் இதில் ஆழமாக இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கினேன்.

சென்னை வந்தபிறகு, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான பள்ளிகளில் நாட்டியம் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். உடற்குறைபாடு குழந்தைகளுக்கு நாட்டியம் கற்பிப்பதில் முதுமுனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்கிறேன். அதன்பிறகு நாமே இது போன்றவர்களுக்கான பள்ளி நடத்தினால் என்ன என்று தொடங்கி நடத்தி வருகிறேன்.

ஐந்து வயதில் இருந்து 50 வயது உள்ளவர்கள்வரை என் பள்ளியில் படிக்கிறார்கள். மொத்தம் 110-க்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள். இதில் பெரும்பாலோர் ஸ்பெஷல் கேர் குழந்தைகள். வீட்டிலிருந்து நாங்களே அழைத்து வந்து இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஸ்பெஷல் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினை இருக்கும். மனக் குறைப்பாட்டுடன் ஒரு குழந்தைக்கு கை தூக்க முடியாமல் இருக்கும். ஒரு குழந்தைக்கு எழுத முடியாமல் இருக்கும். பேச முடியாமல் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான பயிற்சி கொடுப்பேன். அது நாட்டியம் மூலமாக, இசை மூலமாக எப்படித் தேவைப்படுகிறதோ அப்படிக் கொடுத்துக் குணப்படுத்துகிறோம். போதுமான அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஸ்பெஷல் கேர் குழந்தைகளுக்கு எங்களைப் போல் சொல்லிக் கொடுப்பதற்காகப் பலருக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.

நாட்டியம், இசை, நாடகம், ஓவியம், கிராஃப்ட்ஸ் போன்றவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அதன் மூலம் எப்படியெல்லாம் ஸ்பெஷல் கேர் குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறேன். இதில் படிக்க எல்லோரும் நாட்டியம் கற்றிருக்க வேண்டும். வேறு ஏதாவது கலைகள் தெரிந்து இருந்தாலும் சேர்ந்து பயிற்சிப் பெறலாம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி ஸ்பெஷல் குழந்தைகளுக்குச் சேவை செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற கலைகளை பள்ளி, கல்லூரிகளிலும் பாடத் திட்டமாக வைத்து பயிற்றுவித்தால், ஸ்பெஷல் கேர் பிள்ளைகளே இல்லை என்கிற நிலைக்குக் கொண்டு வரலாம். அதற்கான முயற்சிகளில்தான் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார் அம்பிகா காமேஷ்வர்.
ஸ்பெஷல் அம்மா!

No comments: