Thursday, November 29, 2007

யானை - குருடர் கதை!


யானை - குருடர் கதை!



யானை - குருடர் கதை ஒன்று. குருடர்கள் ஒவ்வொருவராக யானையைத் தடவிப் பார்த்து வெவ்வேறு கருத்துக்களைத்
தெரிவித்தார்கள். யானையின் காதுகளைத் தடவியவர் முறம் என்றார்: வாலைத் தடவியவர் துடைப்பம் என்றார் - எனப் போகும் .
கதை. இந்தக் கதையை வேலையோடும் ஒப்பிடலாம். வேலையை யானையாகக் கருதி கருத்துச் சொல்லும் சில கதாபாத்திரங்களின்
அறிமுகம்:


நண்பர் ஒருவரின் அடையாளம்: அழுக்குச் சட்டை; கோணிப்பை. புதியவர்களிடம் அவர் அறிமுகம் செய்துகொள்ளும் முறை:


"என் பேரு பொறுக்கி சார். ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
எட்டுத்தொகை சார்... நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்...'' என மூச்சிரைக்க வேகமாகச் சொல்வார்.
இறுதியாக "சார்... நான் நெருப்பாற்றில் நீந்திக்கிட்டு இருக்கேன். கோடம்பாக்கம் வரை போகணும். காசு கொடுத்து உதவுனா நல்லா
இருக்கும். வேணும்னா இந்தப் பழைய புத்தகத்தை வைச்சுக்கிட்டுக் கொடுங்க.'' என்று கோணிப் பையிலிருந்து பழைய புத்தகங்களை
எடுத்துக் கொடுப்பார். விரும்பியவர்கள் வாங்கிக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஏமாத்துக்காரர் என்று ஒதுங்கிப் போவார்கள்.
இதே யுக்தியை எல்லோரிடமும் பயன்படுத்தியதினாலோ என்னவோ சாதாரண எழுத்தாளர்கள் தொடங்கி பிரபல எழுத்தாளர்கள்
வரை நண்பருக்கு நெருக்கம்.


இந்த நண்பரிடம் ஒரு நாள் கேட்டேன்: "இப்படி ஏன் கஷ்டப்படுறீங்க... ரெண்டு ரூபா மூணு ரூபா கொடுக்குறாங்க. அதை
வைச்சுக்கிட்டு வாழ்க்கையை எப்படி ஓட்ட முடியும்? எங்கேயாவது ஓர் இடத்தில் வேலை பார்க்கக்கூடாதா?'' என்றேன். அதற்கு
நண்பர் சொன்ன பதில்: "என்னை... என்ன... உங்களை மாதிரி யாரிடமாவது அடிமைத்தொழில் பார்க்கச் சொல்லுறியா?'' என்றார்.


நண்பரின் இந்தக் கூற்றுக்குப் பதில் அளிக்கிறது ஒரு முதியவரின் வாழ்க்கை.


இரயில்வே பாதுகாப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். 75 வயது இருக்கும். வசதி வாய்ப்புக்கும் குறைவில்லை. ஓய்வடைந்த
பிறகும் முதியவரால் வீட்டில் சும்மா இருக்கமுடியவில்லை. வீட்டுக்கருகே உள்ளே ஒரு சிக்னலில் போக்குவரத்துக் காவலர்களோடு
இணைந்து சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இதனை அவரது மகன்கள் ஏற்கவில்லை. மானம் போவதாகக் கூறி முதியவரோடு
சண்டையிட்டனர். அப்போது முதியவர் மகன்களிடம் சொன்னார்: "ஏதாவது வேலை செஞ்சாத்தான் சாப்பாடே எனக்கு உள்ள
இறங்கும். வெயில்ல நின்னாலும் எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு. காசு பணத்துக்காக இதை நான் செய்யவில்லை.'' என்று
சொல்லிவிட்டு மகன்களைப் பிரிந்து தனியாக வசித்து வருவதுடன் சாலை பாதுகாப்பு பணியையும் தொடர்கிறார் முதியவர்.


இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் விடுத்து வேறு சில கதாபாத்திரங்களும் உண்டு. ஆடு மேய்கிற வேலையானாலும், அரசாங்க
வேலைதான் செய்வேன்'' என்று படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லாமல் வயதைக் கடத்திக் கொண்டிருப்பவர்கள் கணக்கில்
அதிகம். அதேசமயம் அரசாங்க வேலையையும் உதறி வந்தவர்களும் உண்டு. - சில விகிதம். எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்க
அலுவலகத்தில் இளநிலை உதவியாளர். திடீரென அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அவர் செய்ய தொடங்கியது
விவசாயம். வேலை துறவுக்கு அவர் சொன்ன காரணம்: "வயல்ல ஏதாவது வேலை செஞ்சாதான் எனக்குத் தூக்கமே வரும்.
ஆபீசுக்கும் போயிட்டு விவசாயத்தையும் பார்க்க முடியவில்லை.'' என்றார்.


அரசாங்க வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள்போல் வெளிநாட்டில் வேலை செய்வதே சிறப்பெனச் சொல்வோர்
பட்டியலையும் போடலாம். அதற்கு நிகராய் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு, தாய் மண்ணிலேயே தொழில் தொடங்குவோர்
பட்டியலையும் தேடலாம். இத்தோடு "சம்பாதிக்கத்தான் வேலைக்கே சேர்ந்தேன். அரசாங்கம் கொடுக்கிற சம்பளமெல்லாம்
போதலை' எனச் சொல்லி கிம்பளத்துக்கு அலையும் பேய்களையும் காணலாம்: யுத்தக் களத்தில் தந்தையையும், கணவனையும்
நாட்டிற்காகப் பறிகொடுத்துவிட்டு மகனையும் இராணுவத்தில் சேர்க்கத் துடிக்கும் தாய்களையும் காணலாம். இப்படி நல்லதும்
அல்லதுமாய் சொல்லும் கதாபாத்திரங்கள் பல உண்டெனினும் நான் விரும்பும் ஒரு கதாபாத்திரம்.


சென்னை அண்ணாசாலை நடைபாதையில் பிச்சை எடுக்கும் ஒரு முதியவர். யாரிடமும் காசு வலிய கேட்கமாட்டார். தட்டை
ஏந்தியபடி நடைபாதையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார். காசு விழுந்தாலும் சரி, விழாவிட்டாலும் சரி! இவரிடம்,
"ஓரமாக அமர்ந்து பிச்சை எடுக்கலாமே' என்றால், "என்னால் இந்த வயசுல வேறு வேலை செய்யமுடியாது. மெதுவாக நடக்கத்தான்
முடியும். இப்படி நடக்கறததான் நான் செய்யிற வேலையா நினைக்கிறேன். உட்கார்ந்துகிட்டே வாங்கிச் சாப்பிட மனசு வரல.''
என்றார்.


"பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்றார்கள். இவர் பிச்சையெடுப்பது கற்பதற்காக இல்லாவிட்டாலும் , இவரிடம் கற்க
வேண்டியவையாய் நான் கருதுபவை:


1. முடிந்ததைச் செய்கிற முனைப்பு.

2. கடமையைச் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காத குணம்.

3. உள்ளத்திற்கு அடிபணிந்து உண்மையாய் நடக்கிற பாங்கு.

4. "என்னால் முடிந்தால் எந்தப் பணியையும் செய்வேன்' எனச் சொல்லும் நெஞ்சுரத்தின் அடையாளமாய் விபத்துகளுக்கு
அஞ்சாமல், அண்ணாசாலை நடைபாதையிலேயே நடக்கும் தீரம்.


நடைபாதையில் நடப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று எண்ணுகிறவர்களுக்கு...


வயதானதால் மட்டுமே வேறு எதுவும் செய்யமுடியாமல், சொந்த பந்தங்களின் உதவியும் இல்லாததால் பிச்சையெடுக்கும் இவர் ஒரு
குருடர்.



(நடைவண்டிச் சாலைகள்-11)

No comments: