Thursday, June 11, 2009

நீர்மாலை

நிசி விறைத்த பனியில்
மூழ்கிக்கிடந்தது
வேலிக்கம்பிகளுக்குள் காலி மனை
அதில் சற்றுமுன் முளைவிட்ட
நெல்விதையொன்று
உள் பரவும் காற்றில்
தன் சகங்களின் வாடையை நுகரத் துடித்தது
வேரில் சுழலும் ஊற்றில்
தன் சகங்களின் உறிஞ்சோசையைக் கேட்கத் துடித்தது
ஏதும் உணராததில் சுணங்கி
இருளை நகர்த்தித் தள்ளத் தொடங்கி
துவண்டு
வெளிச்சத்துக்கு வழிவிட இறைஞ்சியது
விடி சிறகோசைகளில்
மேலும் சிறு துளிர்த்த உயரத்திலிருந்து எக்கி
பிஞ்சு பச்சையம் பதற
முன்னும்பின்னுமாக வலமும் இடமுமாக
அசைவற்ற பார்வையால் தேடித்தேடிப்பார்த்து
பெருகின தன் அடர்காடு காணாது தவித்தது
அசை செடி முட்கள்
நெருங்கி வந்துபோன திகைப்பில்
தானேவொரு களையாய் வேரிடுவதாகத் துணுக்குற்றது
அதைச் சீந்தாது கால்கள் கடந்ததும்
தனித்து உயிர்க்காது
சவத்தின் இறுதி நீராடலுக்கு
நிரப்பி வரும் நீர்போல
துளிதுளியாய் ஊற்றை
உள்ளுக்குச் சுமக்கத் துவங்கியது.
நன்றி : வடக்கு வாசல்

2 comments:

கலையரசன் said...

யப்பா.. கவித நம்ம படிக்க
மட்டுதான் செய்யனும் போல..
என்னமா எழுதுறீங்க...

த.அரவிந்தன் said...

கேலி அல்லவே...