Tuesday, November 24, 2015

400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள் - சா.கந்தசாமி






புத்தகம் படிப்பது எப்படி?

ஐரோப்பியக் குடும்பங்களின் தின நிகழ்வு இது. குழந்தைகளின் 3 வயதில் இருந்து 12 வயது வரையில் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, தாயோ, தந்தையோ அல்லது பணம் வசதி படைத்தவர்கள் தாதிகளையோ வைத்து புத்தகத்தைப் படித்துக் காட்டுகின்றனர். அது பாடப் புத்தகம் இல்லை. கதை, கட்டுரை, கவிதை போன்ற புத்தங்கள். அதைக் கேட்டுக் கேட்டு படிப்பின் மீது ஒரு ருசியை குழந்தைகள் தங்கள் மனதில் ஏற்றிக் கொள்கின்றனர். 12 வயதுக்கு மேல் அந்தச் சிறுவர்கள் தாமே இதரப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்தப் பழக்கத்தை இங்கும் பின்பற்றினால், புத்தகம் படிப்பது எப்படி என்ற கேள்விக்கு இடம் இருக்காது.


சிறந்த புத்தகத்தைத் தேர்வு செய்வது எப்படி?

ஆரம்பக் காலத்தில் நான் நூலகங்களுக்குச் சென்று, பல புத்தகங்களைப் படித்து, அதன் பிறகே எனக்கான புத்தகத்தைக் கண்டறியத் தொடங்கினேன். கொஞ்சம் சிரமப்பட்டு சில புத்தகங்களைப் படித்துவிட்டால், உங்கள் சொந்த அறிவே சொல்லும் எது சிறந்த புத்தகம், எது தரமில்லாதது என்று.


புத்தகம் புரியாவிட்டால் என்ன செய்வது?

புத்தகம் புரியாமல் இருக்காது. மொழியைத்தான் புரியவில்லை என்கிறீர்கள். ஆனால் உண்மையில் ஒரு புத்தகம் என்பது மொழியிலேயே இல்லை. மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும், புத்தகத்தில் மொழி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உங்கள் அறிவு கண்டுபிடிக்க முடியாதது. அறிவுக்கு மொழியில்லை. மொழியை அறிவு கிரகித்துக் கொள்ளும். மேலும் எந்த மொழியில் இருந்து ஒரு படைப்பு மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும், அந்தப் படைப்பை மனசு மொழிபெயர்த்துக் கொள்வதை நீங்கள் உணரலாம்.
எனினும் படிப்பது கடினமான வேலை. அதில் ருசி உண்டாக்கிக் கொண்டால் போதும். புத்தகம் புரியும்.

வாழ்நாளுக்குள் எல்லாப் புத்தகங்களையும் படித்து விட முடியுமா?

முடியாது.அனைத்தையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.


பாடப்புத்தகத்தை விட, இதரப் புத்தகங்கள் பயனளித்துவிடுமா?

மதிப்பெண் வாங்குவதற்காக நினைவில் இருந்து எழுதுவதுதான் பாடப் புத்தகம். ஆனால் இதரப் புத்தகங்கள்தான் மனதுக்குள் சென்று யோசிப்பதற்குத் தூண்டும். எந்தத் தொழிலிலும் சொந்த அறிவின்படி முடிவு எடுப்பதற்கு இதரப் புத்தகங்களே பயன்படும்.


ஒரு படைப்பு சாகாவரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியமா?

அவசியம் ஒன்றுமில்லை. ஆனால் நல்ல புத்தகம் என்றால் இருக்கும். நம்முடைய முப்பாட்டனார், பாட்டி தற்போது இல்லை. எனினும், நம்முடைய மனைவியாக,பேத்தியாக இருந்துகொண்டே உள்ளனர். பேச்சு அவர்கள் கொடுத்ததுதான். எனவே நல்ல புத்தகம் இருக்கவே செய்யும்.


ஒரே ஒரு புத்தகமாக உங்கள் தேர்வு?

சங்க இலக்கியப் பாடல்கள். குறிப்பாக குறுந்தொகை. அதில் உள்ள 400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள்.

No comments: