Monday, March 22, 2010

ஜூலியோ கொத்தஸார் சிறுகதை


ஜூலியோ கொத்தஸார்
1940-ஆம் ஆண்டு கோடையில் ஒரு மதியம். புயனஸ் அயர்ஸிலிருந்து ரகசியமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியரை ஓர் இளைஞன் சந்திக்கிறான். அவனுடைய முதல் சிறுகதையை அவரிடம் கொடுக்கிறான். இதழ் ஆசிரியர் பத்து தினங்கள் கழித்து வந்து அவரைப் பார்க்கும்படிச் சொல்கிறார். பத்து தினங்கள் கழித்து இளைஞன் மீண்டும் வருகிறான். இதழ் ஆசிரியர் கதை பிடித்திருப்பதாகவும், அச்சுக்குக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார். 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு' என்னும் தலைப்பைக் கொண்டுள்ள அச்சிறுகதை நோரா போர்ஹஸின் கோட்டோவியங்களோடு அவ்விதழில் பிரசுரமாகிறது. வருடங்களுக்குப் பிறகு அவ்விதழ் ஆசிரியரைச் சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை வேண்டி அந்த இளைஞன் அணுகுகிறான். அப்போது அக்கதையைப் பிரசுரித்ததற்கான காரணத்தை அவ்விதழ் ஆசிரியர் எழுதுகிறார். அச்சிறுகதையைப் பிரசுரித்த இதழ் ஆசிரியர் பெயர்: ஜோர்ஜ் லூயி போர்ஹே. அந்த இளைஞனின் பெயர் ஜூலியோ கொத்தஸார். இங்கு பிரசுரமாகியுள்ள இச்சிறுகதை ஜூலியோ கொத்தஸாரின் Blow up and other stories என்னும் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு

ஜூலியோ கொத்தஸார்

தமிழில்: ராஜகோபால்


நாங்கள் அந்த வீட்டை விரும்பினோம், ஏனெனில் அதன் பழைமையும் விஸ்தாரமான இடமும் நீங்கலாக, அது (இப்பொழுதெல்லாம் பழைய வீடுகளின் கட்டுமானப் பொருட்கள் ஏலத்தில் அதிக விலைக்குப் போகின்றன) எங்களுடைய முன்னோரின், தந்தை வழி பாட்டனாரின், பெற்றோரின், எங்களுடைய குழந்தைப் பருவ ஞாபகங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தது.
ஒருவருடைய வழியில் மற்றவர் குறுக்கிடாமல் எட்டு மனிதர்கள் வரை தாராளமாகப் புழங்கும் வசதியுடைய வீடு அது. அதில்தான் நானும் ஐரினும் வசிக்கப் பழகியிருந்தோம். உண்மையில் அது வினோதமானதே. காலையில் ஏழு மணிக்கு விழித்தெழும் நாங்கள் வீட்டைத் துப்புரவு செய்யத் தொடங்குவோம். பதினோரு வாக்கில் சுத்தம் செய்யப்படாத அறைகளை ஐரினிரின் பொறுப்பில் விட்டுவிட்டு நான் சமையலறைக்குச் செல்வேன். துல்லியமாக மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவிற்கு அமருவோம். பின, கழுவ வேண்டிய சில எச்சில் தட்டுகளைத் தவிர பிற வேலையேதும் மிஞ்சியிருக்காது. வெறுமை சூழ்ந்து, அமைதி தவழும் அவ்வீட்டோடு உறவாடியபடி உணவருந்துவது எங்களுக்கு உவப்பான விஷயம். மேலும், அவ்வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் எங்களுக்கு எளிதாகத்தான் இருந்தது. எது எங்களைத் திருமணம் செய்துகொள்ளவிடாமல் தடுத்தது என்று யோசிக்கும் வேளையிலெல்லாம் நாங்கள் யோசிப்பதை நிறுத்திக்கொள்வோம். ஐரின், குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதுமின்றி இரண்டு காதலர்களை நிராகரித்திருந்தாள். என்னை விட்டுச்சென்ற மரியா எஸ்தரோ, நாங்கள் ஒருவாறு சமாளித்து நிச்சயம் கொள்வதற்கு முன்னமே என் கரங்களில் மரித்தாள். எங்கள் முன்னோர்களால் நிறுவப்பட்ட குலத்தொடர்ச்சி உடைய இவ்வீட்டில் பகிர இயலாத மெüனம் நிறைந்து வழிந்தது. முதலில் தங்கை தமையனான எங்களுடைய எளிய திருமணத்தின் மூலம் இந்த மெüனம் முடிவுற்றுவிடும் என்ற எண்ணம் எங்களுக்கு நிலவியது. ஆனால் நாங்களோ சோர்வுற்றபடி நாற்பதுகளில் நகர்ந்துகொண்டிருந்தோம். என்றேனும் நாங்கள் மரிக்கலாம்; நாங்கள் அறியாத எங்கள் தூரத்து உறவினர்கள் இவ்விடத்தை மரபுரிமையாகப் பெற்று, இவ்விடத்தைச் சிதைத்து, செங்கற்களை விற்று, இம்மனையின் மூலம் வசதி பெறலாம் அல்லது நாங்களேகூட இதைச் சிறப்பாகச் சிதைத்து விற்கலாம்.
ஐரின் எவரையும் தொந்தரவு செய்வதில்லை. காலையில் வீட்டு வேலைகள் முடிந்தவுடன் எஞ்சிய மணித்துளிகளைப் படுக்கறையில் உள்ள சாய்விருக்கையில் அமர்ந்தவாறு பின்னல் வேலையில் ஈடுபட்டபடி கழிக்கத் தொடங்குவாள். அவள் ஏன் பின்னல் வேலையில் அதிகம் ஈடுபட்டாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. செய்வதற்கு வேலைகள் ஒன்றும் இல்லாதபோது இது பெரிய தப்பித்தலாக இருப்பதைப் பெண்கள் கண்டறிந்திருக்கலாம். ஆனால் அவள் அப்படிப்பட்ட பெண் அல்ல. தேவைகளின் பொருட்டே குளிர்காலத்துக்கு ஏற்ற கம்பளிகள், கால் உறைகள், காலையில் அணிவதற்கு ஏற்ற மேலங்கிகள், அவளுக்கென்று சில படுக்கை உறைகள் போன்றவற்றை நெய்து வந்தாள். சில சமயம் அவள் மேலங்கி ஒன்று பின்னத் தொடங்குவாள். மனதிற்கு உவப்பற்ற விஷயத்தை அதில் பார்த்தவுடன் நெய்வதை நிறுத்திவிடுவாள். போரில் தோல்வியைடந்ததுபோல் குவியலாக காட்சியளிக்கும் அந்தக் கம்பளியிழைகள் அதன் மெய் உருவை அடைவதற்கு முயன்றுகொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். சனிக்கிழமைகளில் நான் கம்பளியிழைகள் வாங்குவதற்கு வெளியில் செல்வது வழக்கம். ஐரினுக்கு என்னுடைய ரசனைகளில் மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் தேர்ந்தெடுத்த வண்ணங்கள் அவளுடைய மனத்திற்கு உவப்பூட்டியுள்ளதால் நான் ஒரு நூற்கண்டைக் கூடத் திருப்பியளிக்க நேர்ந்ததில்லை. இப்படி வெளியில் செல்வதைப் பயன்படுத்தி புத்தகங்கள் ஏதேனும் அவர்களிடம் உள்ளதா என்று கேட்பதும் என்னுடைய வழக்கமாக இருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்பதுக்குப் பிறகு அர்ஜென்டினாவிலிருந்து குறிப்பிடும்படியாக ஒன்றும் வெளிவரவில்லை.
ஆனால் இவ்வீட்டைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன். குறிப்பாக ஐரின் பற்றியும் வீடு பற்றியுமே. இங்கு நான் முக்கியமில்ல. இப்பின்னல் வேலைகள் இல்லையென்றால் ஐரின் என்ன செய்திருப்பாள்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு புத்தகத்தை ஒருவரால் திரும்பவும் வாசிக்க முடியும். ஆனால், ஒரு கம்பளிச் சட்டையைப் பின்னி முடித்த பிறகு அதை மீண்டும் பின்ன இயலாதே. இயலுமாயின் அது ஒருவகை மடத்தனமே. ஒருநாள், நிலைப்பெட்டியின் கீழ் அடுக்கு கற்பூர உருண்டைகளாலும் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிற சால்வைகளாலும் நிறைந்து கிடப்பதைப் பார்த்தேன். கற்பூர வாசனைக்கு மத்தியில் அவை குவியலாகக் கிடந்ததைப் பார்த்தபோது அதுவொரு கடைபோல் காட்சியளித்தது. இவற்றைக் கொண்டு அவள் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்கும் துணிச்சலை நான் இழந்திருந்தேன். நாங்களோ பொருள் ஈட்ட வேண்டிய அவசியமற்று இருந்தோம். ஒவ்வொரு மாதமும் பண்ணையிலிருந்து அதிக வருமானம் வந்துகொண்டிருந்தது. பணமும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஐரினோ பின்னல் வேலையில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தாள். அவளிடம் அசாத்தியத் திறமையிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே என் நேரம் கழிந்து கொண்டிருந்தது. குறும்புக்காரச் சிறுவனை ஒத்த வெண்ணிறக் கைகளும் , பிரகாசமான ஊசிகளும் தரையில் கிடக்கும் ஓரிரு பின்னற் கூடைகளும், உருண்டோடும் நூலிழைகளும் பார்ப்பதற்குக் கவித்துவமானதுதான் இல்லையா?
அவ்வீட்டின் வடிவமைப்பை எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்? சமையலறை, திரைச்சீலைகளோடு கூடிய வரவேற்பறை, மற்றும் ஒரு நூலகம். பின்கட்டிலுள்ள மூன்று படுக்கையறைகளில் ஒன்று ரோட்டி ரிகிஸ் பினோவைப் பார்த்திருக்கும். நடைக்கூடத்திலுள்ள பெரிய கருவாலி மரக் கதவு வாயிற் முகப்பை அவ்விடத்திலிருந்து பிரிக்கும். முன்கட்டில்தான் குளியலறை, சமையலறை, கூடம் மற்றும் எங்களுடைய படுக்கையறைகள் அமைந்துள்ளன. இனாமல் பூச்சு கொண்ட, டைல்கள் பதிக்கப்பட்ட முன்னறையின் வழியாக ஒருவர் மெல்லிரும்பு கொண்ட கிராதிக் கதவு தம்மை வரவேற்பறைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடியும். முன்னறையின் வழியாக நுழைந்து வரவேற்பறையைக் கடந்தால் எங்கள் படுக்கையறைகளுக்குச் செல்லும் கதவுகளை இருபுறத்திலும் பார்க்கலாம். அதற்கு எதிர்ப்புறத்திலுள்ள நடைக்கூடம் வீட்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்லும். அந்நடைக்கூடம் வழியாகவே சென்று எதிர்ப்படும் கருவாலி மரக் கதவைத் திறந்தால் வீட்டின் மற்றொரு பகுதிக்குச் சென்றடைந்துவிடலாம். அக்கதவிற்குச் சற்றுமுன் தென்படும் இடப்புற வழி சமையலறைக்கும் குளியலறைக்கும் இட்டுச் செல்லும். அக்கதவு திறந்திருக்கும்பொழுதுதான் வீட்டின் விஸ்தீரணத்தை ஒருவரால் உணரமுடியும். அக்கதவு மூடியிருப்பின் இப்போதெல்லாம் கட்டப்படுகிற, நகருவதற்குப் போதுமான அறைகள் அற்ற அடுக்குமாடிக் குடியிருப்பை ஞாபகமூட்டும். ஐரினும் நானும் வீட்டின் இப்பகுதியில்தான் எப்போது வசித்து வந்தோம். அரிதாகத்தான் இக்கருவாலி மரக்கதவைத் தாண்டியச் செல்வோம்; அதுவும்கூட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகத்தான். தட்டுமுட்டுச் சாமான்களில் படியும் தூசியின் அளவு நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். புயனஸ் அயர்ஸ் சுத்தமான நகரமாக இருக்கலாம். அது மக்கள் தொகையோடு சரி. காற்றில் தூசி நிரம்பி வழிகிறது. சலைவக் கல் தளத்தின் மேற்புறத்திலும்; வைர வடிவங்கொண்ட தோற்கருவியினால் ஆன மேஜைத் தொகுதியின் மேற்புறத்திலும் மெல்லிய இளங்காற்றானது தூசியை வாரி இறைக்கிறது. சிறகுகளாலான துடைப்பானைக் கொண்டு இவற்றைச் சுத்தம் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவைப்படும். காற்றில் தூசிகள் மேலெழுந்து பறக்கும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பியோனோவின் மேலும் தட்டுமுட்டுச் சாமான்களின் மேலும் தூசி படிந்துவிடும்.
இப்படிப்பட்ட ஞாபகங்கள் எப்போதும் என்னிடம் உண்டு. காரணம் இவை எவ்வித அமளியும் இல்லாமல் எளிதாக நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஐரின் அவளுடைய படுக்கையறையில் இருந்தவாறு பின்னிக்கொண்டிருந்தாள். அப்போது இரவு எட்டு மணியிருக்கும். திடீரென்று "மாட்' பானம் அருந்தலாம் என்று தீர்மானித்தேன். மாட் பானம் தயாரிக்க தண்ணீர் தேவைப்பட்டது. நடைக்கூடம் வழியாக கருவாலி மரக்கதவு நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சிறிது திறந்திருந்தது. கூடத்தில் நுழைந்து சமையலறை நோக்கி நூலகத்திலிருந்தோ சமையலறையிலிருந்தோ சப்தம் கேட்கும் மட்டும் நடந்துகொண்டிருந்தேன்; ஒரு நாற்காலி கார்பெட்டின் மேல் நகர்த்தப்படுவதுபோல அல்லது கீழ்ஸ்தாயியில் முணுமுணுக்கப்படும் ஓர் உரையாடல் போலவோ அச்சப்தம் தெளிவற்றுக் கேட்டது. அந்நேரமோ அல்லது அந்நேரத்திற்குப் பிறகோ அவ்விரண்டு அறைகளிலிருந்தும் விலகிக் கதவை நோக்கிச் செல்லும் நடைக்கூடத்தின் முடிவில் அதை நான் மீண்டும் கேட்டேன். உடன் என்னையே கதவிற்கு எதிராக எறிந்துகொண்டு, உடல் எடையின் துணைகொண்டு கதவைச் சாத்தி மூடினேன். அதிர்ஷ்டவசமாக சாவி எங்களுடைய பகுதியிலிருந்தது. மேலும் பாதுகாப்பின் பொருட்டு அவ்விடத்தில் பெரிய தாழ்ப்பாள் ஒன்றையும் போட்டேன்.
சமையலறைக்குத் திரும்பி கொதிகலத்தைக் கொதிக்கவிட்டு மாட் இலை வடிசலைத் தட்டில் வடித்தபடி அறைக்குத் திரும்பியபோது நான் ஐரினிடம் சொன்னேன்:
""நடைகூடத்திற்குச் செல்லும் கதவை மூட வேண்டியதாயிற்று. அவர்கள் பின்கட்டை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''
பின்னல் வேலையைக் கைவிட்டவள் சோர்வுற்ற கூர்மையான கண்களால் என்னைப் பார்த்தாள்.
""உறுதியாகத் தெரியுமா?''
ஆமோதித்தேன்
""அப்படியென்றால் ...?'' ஊசிகளைத் திரும்பவும் எடுத்தவள்,
""இனி இப்பகுதியில் தான் நாம் வாழ வேண்டும்'' என்றாள்.
மிகுந்த கவனத்தோடு மாட் பானத்தைப் பருகத் தொடங்கினேன். ஆனால் அவளோ வேலையை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஒரு சாம்பல் நிறச் சட்டையை அவள் பின்னிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. அச்சட்டையை நான் மிகவும் விரும்பினேன்.
முதலில் ஒரு சில தினங்கள் துயரம் தருவதாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் இருவரும் பல பொருட்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் விட்டுவிட்டு வந்திருந்தோம். உதாரணத்திற்கு என்னுடைய பிரெஞ்சு இலக்கியத் தொகுதிகள் அந்நூலகத்தில்தான் இருக்கின்றன. ஐரினோ பல பொருட்களோடு, அவளுடைய ஒரு ஜோடிக் காலணிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள். பனிக்காலத்தில் அவற்றைத் தான் அவள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். நான் காட்டு ரோஜாவில் செய்யப்பட்ட புகைக் குழாயை இழந்ததற்கும் ஐரின் பழைமையேறி ஹேஸ் பிரிடின் குப்பியை இழந்ததற்குமாக வருந்திக்கொண்டிருந்தோம். இவை தொடர்ச்சியாக நிகழத் தொடங்கியது. (ஆனால், முதல் ஒரு சில தினங்கள் மட்டுமே இவை நிகழ்ந்தன.) நாங்கள் ஏதேனும் மேஜையையோ, இழுப்பறை பெட்டியையோ மூடும்போது ஒருவரை ஒருவர் சோகத்தோடு பார்த்துக்கொள்வது வழக்கமாயிற்று.


""இது இங்கில்லை''
நாங்கள் இழந்தவற்றோடு மேலும் ஒன்று சேர்ந்துகொள்ளும். ஆனால் இதிலும் சில அனுகூலங்கள் இருந்தன. வீட்டைச் சுத்தம் செய்வது எளிதாயிற்று. நாங்கள் நேரம் கழித்து விழித்தெழுந்தாலும்... உதாரணத்திற்கு ஒன்பதரை மணிக்கு அல்லது பதினோரு மணிக்கு எழுந்தாலும் கைகளைக் கட்டியபடி வெறுமனே உட்கார்ந்திருப்போம். ஐரின் மதிய உணவு தயாரிக்க உதவும்பொருட்டு என்னோடு சமையலறைக்கு வரத் தொடங்கினாள். நாங்கள் சிலவற்றைப் பற்றி ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். நான் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருக்கும்போது, மாலையில் நாங்கள் உணவு அருந்துவதற்கு ஏற்ற உணவு வகைகளை ஐரின் தயாரிக்க வேண்டும். இவ்வேற்பாட்டின் வழி எங்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது. காரணம், சாயுங்கால வேளைகளில் படுக்கையறைகளை விட்டுவந்து சமைக்கத் தொடங்குவது எப்போதும் தொல்லை தருவதாகவே இருந்தது. இப்போது ஐரினின் அறையிலுள்ள மேஜையில்தான் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான விஷயங்களால் ஐரினின் பின்னல் வேலைகளுக்கு அதிக நேரம் கிடைத்தது. அவன் மனநிறைவோடிருந்தாள். என்னுடைய புத்தகங்களால் சிறிது ஈர்ப்புணர்விற்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருப்பினும் அவற்றை என் சகோதரியின் மீது திணிக்கவில்லை. என் தந்தையுடைய தபால்தலைச் சேகரிப்புகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தைக் கொல்லத் தொடங்கியது. அதிக வசதிகளை உடைய ஐரினின் படுக்கையறையில் நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கு ஒருவர் அவரவர் பிரத்யேக விஷயங்களால் மனநிறைவு அடையும்படி எங்களுக்கு நாங்களே மகிழ்ச்சியூட்டிக் கொண்டோம். எப்போதாவது ஐரின் இப்படிச் சொல்வாள்:
""இந்த வடிவத்தைப் பார், இப்போதுதான் கண்டுபிடித்தேன். இது கிளாவர் போல் இருக்கிறது இல்லையா?''
ஓரிரு கணங்களுக்குப் பின், சிறிய சதுர வடிவக் காகிதத்தை அவள் முன் தள்ளுவேன். அதன் வழி ஏதேனும் ஒரு ஸ்டாம்பையோ அல்லது யுப்பன் இட் மல்மேடிலிருந்தோ வந்த மற்றொன்றின் சிறப்பையோ அவள் பார்ப்பாள். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம்.சிறிது சிறிதாக, சிந்திப்பதை நிறுத்திக்கொண்டோம். சிந்திக்காமலும் உங்களால் வாழ முடியுமே.
(எப்போதெல்லாம் ஐரின் உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்குகிறாளோ அப்போதெல்லாம் நான் உடன் விழித்துக்கொள்கிறேன். பின் விழித்தபடிதான் நேரம் கழியும். தொண்டையில் இருந்தல்ல கிளியிடமிருந்தோ சிலையிடமிருந்தோ வெளிப்படும் ஒரு குரலிற்கு அல்லது கனவிலிருந்து வெளிப்படும் ஒரு குரலிற்கோ நான் பழக்கப்பட்டவன் அல்லன். ஐரினோ, உறக்கத்தில் நான் கட்டிலையும் படுக்கை விரிப்புகளையும் அபரிமிதமாக உலுக்குவதாகத் தெரிவிக்கிறாள். எங்களுக்கிடையில் வரவேற்பறை ஒன்று இருந்தபோதும் எங்களால் வீட்டில் நிகழும் யாவற்றையும் கேட்க முடிகிறது. இருவராலும் உறங்க முடிவதில்லை என்பதால் ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் சுவாசத்தையும் இருமலையும் வெளிச்சம் வேண்டி ஒருவர் விளக்கு போடச் செல்வத்தையும் பார்க்க முடிகிறது.
இரவிற்குரிய சப்தங்களைத் தவிர்த்துவிட்டால் வீடானது அமைதியோடிக் கிடக்கும். பகலிலோ, ஒரு வீட்டிற்குரிய சப்தங்களோடு பின்னல் வேலையில் ஈடுபடும் உலோக ஊசியின் சப்தம், ஸ்டாம்பு ஆல்பத்தைப் புரட்டுவதால் ஏற்படும் சலசலப்பொலி போன்றவற்றை ஒருவரால் கேட்க இயலும். அந்தக் கருவாலி மரக் கதவோ மிகப் பெரியது. இதை முன்பே உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை ஒட்டியுள்ள சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ நாங்கள் உரக்கப் பேச முற்படுவது வழக்கம். ஐரின் தாலாட்டுப் பாடல்களைப் பாடத் தொடங்குவாள். எப்போதும் அதிக சப்தங்களால் நிறைந்திருக்கும் சமையலறையில், தட்டுகளின், குவளைகளின் சப்தங்களோடு பிற சப்தங்களின் குறுக்கீடும் இருக்கும். அபூர்வமாகத்தான் நாங்களும் அங்கு மெüனத்தைக் கைக்கொள்வோம். ஆனால் எங்கள் அறைகளுக்கோ வரவேற்பறைக்கோ திரும்பும் சமயம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு மிக மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்கும்போது மங்கிய வெளிச்சத்தில் வீடு அமைதியில் மூழ்கிக் கிடக்கும். ஐரின் அவளுடைய உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்கியவுடன் தவிர்க்க இயலாமல் நான் விழித்துக்கொள்கிறேன்.)
விளைவுகளைத் தவிர்த்துவிட்டால், இது ஒரே ஒரு காட்சி மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கு ஒப்பானதே. அன்றைய இரவில் நான் மிகுந்த தாகத்தோடு இருந்தேன். நாங்கள் உறங்கச் செல்வதற்கு முன் ஒரு குவளைத் தண்ணீருக்காகச் சமையலறைக்குப் போகிறேன் என்பதை ஐரினிடம் தெரிவித்தேன். படுக்கையறைக் கதவுக்கு அருகிலிருந்த (அவள் பின்னிக் கொண்டிருந்தாள்) சமலையலறையிலிருந்து ஒரு சப்தம் வெளிப்பட்டது. சமையலறையாக இல்லாவிடின் அது குளியலறையாக இருக்கலாம். நடைக் கூடத்தின் அமைப்பு, சப்தத்தைத் தெளிவற்றதாக்கி இருந்தது. திடீரென்று நான் தயங்கி நிற்பதை ஐரின் கவனித்தாள். சபதம் ஒன்றும் எழுப்பாமல் என்னருகில் வந்து நின்றாள். நாங்கள் அச்சப்தத்தைக் கவனிக்கத் தொடங்கினோம். எங்கள் பகுதியில் கருவாலி மரக் கதவிற்கு அருகில் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை ருசுப்படுத்துவதற்கு ஏற்ப சப்தம் மேலும்மேலும் வலுக்கத் தொடங்கியது. சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ அல்லது நடைக்கூடத்தின் வளைவிலோ நான் நின்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய எங்களுக்கு மிக அருகில்தான் அவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட அவகாசமில்லை. வலுக்கட்டாயமாக ஐரினின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு எஃகுக் கிராதிக் கதவை நோக்கி ஓடினேன். எங்களுக்குப் பின்னே உள்ளடங்கிய ஆனால் வலுத்த சப்தத்தை ஒருவரால் கேட்க முடியும். இரும்புக் கிராதியை அறைந்து சாத்தினேன். கூடத்திற்கு வந்த பிறகே நாங்கள் ஓட்டத்தை நிறுத்தினோம். இப்போது ஒன்றும் கேட்கவில்லை.
""அவர்கள் நம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்றாள் ஐரின். பின்னற்கூடை அவளுடைய கைகளிலிருந்து நழுவி விழுந்தது. நூலிழைகள் கதவை நோக்கி ஓடி மறைந்தன. நூல் பந்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிடப்பதைப் பார்த்த அவள், அவற்றைச் காணச் சகிக்காமல் பின்னுவதைக் கைவிட்டாள்.
""எதையேனும் எடுப்பதற்கு நேரம் உள்ளதா?'' நம்பிக்கையற்றவாறுதான் கேட்டேன்.
""இல்லை. ஒன்றுமில்லை.''
எங்கள் கைகளில் இருந்ததுதான் எங்களுக்கு மிஞ்சியது. என் படுக்கையறை அலமாரியில் பதினைந்தாயிரம் பிசோக்கள் இருந்ததை நினைகூர்ந்தேன். இப்போது நேரம் கடந்துவிட்டது.
மிஞ்சியிருந்த என் கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரவு பதினொன்று ஆகிவிட்டிருந்தது. ஐரினின் இடையைச் சுற்றி அணைத்துக்கொண்டேன் (அவள் அழுதுகொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன்). இப்படித்தான் நாங்கள் தெருவுக்கு வந்து சேர்ந்தோம். அவ்விடத்தை விட்டுக் கிளம்பியபோது என் உடல் ஒரு கணம் நடுங்கியது. முன்கதவை இறுக்கமாகத் தாழிட்டுச் சாவியை சாக்கடையை நோக்கி எறிந்தேன். அந்நேரம் மட்டும் அப்படி ஒரு சாத்தான் நுழைந்து வீட்டை ஆக்கிரமித்துக்கொள்ளாவிட்டால் நான் இதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.


நூல்: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்) தமிழில்: ராஜகோபால். விலை ரூ.80

ஜோர்ஜ் லூயி போர்ஹே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், ஃபிலிஸ் பெர்டோ ஹெர்னாண்டெஸ், ஜுலியோ ரோமன் ரிபியோரா, லூயிஸô வெலின்சுலா, ஆல்பெர்தோ சிம்மல் போன்றோர் சிறுகதைள் உள்ளடக்கிய நூல்.

வெளியீடு: நிழல்
12/28 இராணி அண்ணாநகர்
கே.கே.நகர்
சென்னை - 78
தொலைபேசி: 9444484868

2 comments:

மதுரை சரவணன் said...

நன்றி. வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in