Friday, February 13, 2009

பூசணித் தாதி


விட்ட மழையிலிருந்தது
ஒதுங்கும் காடு
காக்கி கால்சட்டை அணிந்த சிறுவன்
பச்சை மிளிரலிலிருந்த
ஒரு பூசணிக் கொடியைக் கண்டான்
அதன் கொடிகளில் விழுந்து படர்ந்திருந்த
மின்னல் அவன் கண்களில் அடிக்க
ஒரு தாதியைப் போல் செயல்படத் தொடங்கினான்
இரு கைகளாலும்
அந்தப் பச்சிளம் பூசணிக் குழந்தையின்
கால் பகுதியைப் பிடித்தான்
குலுங்கி வலியால் துடித்த
தாயின் சத்தத்தைக் கவனியாது
வெடுக்கென இழுத்தான்
அதன் பிசுபிசுப்பான ஈரத் தலையை
மார்போடு அணைத்து
வீட்டிற்கு விரைந்தான்
அவன் அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு
அவன் கண்களில்
அவன் தந்தையாக ஏறிநின்று
பகிர்வளித்த சந்தோஷத்தில் குதித்தான்.
நன்றி:வார்த்தை

2 comments:

ஆதவா said...

குழந்தைகளின் உலகமே இப்படித்தான்... ஒவ்வொரு செயலுக்கும் பெருமிதம் கற்பிக்கும்.....

நல்ல நடை..... அழகான வித்தியாசமான கரு... தொடருங்கள்

த.அரவிந்தன் said...

நன்றி. உஙகளுடைய கவிதைகளையும் தொடர்ந்து படிக்கிறேன்