Thursday, October 9, 2008

கவிதை

கற்பனையிடம் கையெழுத்து




வேர் விரித்து, கிளைத்து, பூத்து, காய்த்து, கனிந்த
அந்தக் கவிதை மரத்தை
ஆழ் யோசிப்புக் குழி பற்றுதலில் உயிர்க்கிறவாறே
பெயர்த்தெடுத்துக் காகிதத்தில் நிறையாய் நடமுடிவதில்லை
எனினும்
அதன் சல்லிவேர்கள்
முதல் சுனையாய் என்னை உறிஞ்ச முனைந்ததுமே
செல் சுவர்களால் வளர்ந்த
அதன் பாடுபொருளுக்கு நன்றி நவின்று விழா நடத்துவேன்
பட்டுப்போன பழைய களைப்புற்ற வார்த்தைகள்
கிளை மேடையிலேயே உறங்க
துருதுரு மிளாறு புனைவார்த்தைகள்
உற்சாகப் போதையில் கைதட்டி ஆரவாரிக்கும்
இந்த மரத்தில் இடம்பிடிக்க இயலாத
பழுத்தயிலை வார்த்தைகளை எல்லாம் திரட்டி
பாடுபொருளுக்கு நான் மாலையிடுவேன்
தலைகுனிந்தவாறே ஏற்கையிலது
முந்தைய பாடுபொருள்களில் எல்லாம்
வேடன் நிர்ப்பந்தித்து தரித்த
என் அக்கறை வலையில் அந்நியப்பட்டு
கிளைகளெதிலும் உட்காராமல் போன
ஒரு நிமிடம் நினைத்து வெட்கும்
அகன்று யோசிக்க நேரமளிக்காது
உச்சிப் பொருள்பூவிலிருந்து உருவிய
மகரந்தத் தலைப்பு விருதைக்
காற்றின் சிலிர்ப்பு உணர்ச்சியால்
கொடுத்து விழாவை முடிக்கையில்
என் கற்பனையிடம் கையெழுத்து வாங்க
வேறு சில பாடுபொருள்கள் முட்டிமோதும்.


த.அரவிந்தன்




No comments: