Friday, May 30, 2008

நடவு... நெறிப்படுத்தினால் அடவு!



"செக்கச் சிவந்தவளே கண்ணம்மா
எம்பக்கம் வந்து பேசினாக்க என்னம்மா
கண்சாட காட்டுற
காலில் கோலம் போடுற
தாவித்தாவி நடக்கற
தாவணிய முறுக்குற
பாத்துபாத்து பேசு கண்ணம்மா
பரிசம் போட வாயேன் செல்லமா'
- ஒரு கிராமிய நிகழ்ச்சியில் வேல்முருகன் பாடுகிறார். அந்தப் பாடலுக்குப் பறையடித்து ஆடுகிறார் அவர் மனைவி கலா.
கிராமியப் பாடலுடன் ஆடலையும் தரும் இந்த இசை ஜோடிக்கு மக்கள் மத்தியில் அதிக "வந்தனம்... வந்தனம்'.
திரைத் துறையிலும் குரல் பதித்து வரும் வேல்முருகனை ஓர் இசைவேளையில் சந்தித்தோம். ஓடை தண்ணீர் ஓட்டமாய் பேசினார்.

""ஆடு மாடு மேய்க்கப் போகிறபோது பாடுவது எனக்கிருந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இளையராஜா பாடல்கள், புஷ்பவனம் குப்புசாமி பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன். உடன் வருபவர்கள் பலர் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரிக்க இதுவும் ஒருவகையில் காரணம் என்று சொல்லலாம்.
முதலில் பிறர் பாடல்களை மட்டும் பாடி வந்தேன். புஷ்பவனம் குப்புசாமியின் "ராசாத்தி உன்னை எண்ணி' பாடலைப் பாடித்தான் என்னுடைய சொந்தவூரான விருத்தாசலத்தில் உள்ள முதனை அரசு பள்ளிக்கூடத்தில் படித்தபோது பரிசு வாங்கினேன்.
போகப்போக வயல், வரப்பு, ஆறு என ஒன்றுவிடாமல் எல்லாவற்றைப் பற்றியும் சொந்தவரி போட்டு பாடத் தொடங்கிவிட்டேன். எனக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணன் பெரியசாமிதான் வளர்த்தார். வேப்பங்கொட்டை பொறுக்கி விற்பதுபோன்ற சின்னச்சின்ன வேலைகள் செய்துதான் படித்தேன். கோயமுத்தூரில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரிகல் முடித்தேன்.
இதன்பிறகு இசைக் கல்லூரியில் கர்நாடக இசை பாடுவதற்குப் பயின்றேன்.கல்லூரிக் காலகட்டத்தின்போதுதான் என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கினேன். "இராணுவ வீரர்கள்' பற்றி நான் எழுதி, பாடிய பாடலுக்கு அப்துல்கலாம் உட்பட பலரின் பாராட்டுகள் கிடைத்தன. இதோடு என்னுடைய மனைவி கலாவையும் இங்குதான் சந்தித்தேன்.
கல்லூரியில் எனக்கு அவர் ஜூனியர். மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர். மூன்றாம் ஆண்டு நான் படித்தபோது அவர் இரண்டாம் ஆண்டு பரதம் கற்றுக் கொண்டிருந்தார். நட்பு ரீதியாகத்தான் இருவரும் பழகிக் கொண்டிருந்தோம். முதலில் அவர்தான் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார். அதுவும் என்னிடம்கூட சொல்லவில்லை. அவருடைய அப்பா அம்மாவிடம்தான் சொல்லியிருக்கிறார். அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான் என்னிடம் சொன்னார். நன்றாக யோசித்துக் கொள்ளுமாறு நான் சொன்னேன்.
அதற்கு அவர் இதில் யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அப்பா, அம்மா விரும்புவதுபோல என்ஜினீயரை மணந்து கொள்வதற்கு என்றைக்குமே விருப்பம் இருந்ததில்லை. இசை தெரிந்த உங்களோடு வாழவே விரும்புகிறேன். நாமிருவரும் இசை துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்றார். என்னுடைய அண்ணன் உதவியுடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இருவரும் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் செய்யத் தொடங்கினோம். இதுவரை 500க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். கிராமியப் பாடல் நான் பாட அதற்கு அவர் பரதமும் ஆடுவார், பறையடித்தும் ஆடுவார். பாட்டின் தன்மையைப் பொறுத்து ஆட்டத்தை முடிவு செய்வோம்.
கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டு கிராமியப் பாடல்கள் பாடுவதற்கு அதிக ஈர்ப்பே காரணம். கிராமியப் பாடல்களில் இருந்துதான் கர்நாடக இசையே வந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. இதைப்போலதான் பரதநாட்டியமும். நாற்று நடுகிற பெண்கள் நடவின்போது நாற்றை மிதித்துவிடக்கூடாது என்பதற்காகக் காலைத் தூக்கி வைத்து நடுவார்கள்.
பரதம் கற்றுக் கொள்கிறவளுக்கு அடிப்படை பயிற்சி அடவு. நடவை ஒத்த ஒன்றுதான் அடவும். நடவை நெறிப்படுத்தினால் அடவு. இதனால் கிராமியப் பாடல்களுக்கு பரதம் ஆடுவது ஒன்றும் தவறில்லை. என்னுடைய மனைவி பறையாட்டத்தையும் முறைப்படிதான் கற்றுக்கொண்டு ஆடுகிறார்.

கிராமியப் பாடல் பாடுகிறவர்கள் சினிமாக்களில் பாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. குத்துப் பாடல் வகையிலான பாடல்களையே பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் கிராமியப் பாடல்கள் வளர்வதற்கு இது சிறிதளவிற்கேனும் உதவுகிறது என்று நினைக்கிறேன்.
சினிமாவில் பாடுவதன் மூலம் கிடைக்கிற அறிமுகத்தில் கிராமியப் பாடல்கள் பாடுவதற்கு நிறைய பேர் அழைக்கிறார்கள். வரவேற்பும் கிடைக்கிறது.
கிராமிய இசை மட்டும் அல்ல, அழிந்து வருகிற பல கலைகளைச் சினிமாவில் பயன்படுத்தத் துவங்கினால் அந்தக் கலை வளர்வதற்கு வாய்ப்பாகத்தான் அமையும். இதன் காரணமாகத்தான் நான் சினிமாவில் பாடுகிறேன்.
தற்போது "சுப்பிரமணியம்' என்ற படத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில், யுகபாரதியின், "மதுரை குலுங்க..குலுங்க.. நீ நையாண்டி பாட்டு பாடு.. புழுதி பறக்கபறக்க நீ போடாத ஆட்டம் போடு' வரி வரும் திருவிழா பாடல் பாடியிருக்கிறேன். இதைப்போல "வெடிகுண்டு முருகேசன்' படத்தில் தினா இசையில் பசுபதியுடன் சேர்ந்து ஒரு பாடலும் பாடியிருக்கிறேன். இரண்டும் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்து கிராமிய இசையை வளர்க்க உதவும் என்று நினைக்கிறேன்.
கிராமியக் கலைகள் அழிந்துவிடாமல் இருக்க அரசாங்கம் எடுக்கும் முதன்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டியது பள்ளியில் இருந்தே எல்லாக் கலைகளையும் சொல்லிக் கொடுப்பதுதான். அப்படிச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களாக மூத்த கலைஞர்களைப் போடுகிறபோது கலையும் வாழும். கலைஞர்களும் வாழ்வார்கள்'' என்கிறார் வேல்முருகன். அருகிலிருக்கும் அவர் மனைவியின் கொலுசு "ஆம்' என்கிறது.

2 comments:

Unknown said...

வேல்முருகன், கலா தம்பதியினரின் பாடல்களைக் கேட்டது இல்லையென்றாலும், கிராமிய இசையை வளர்க்கப் பாடுபடும் இருவரும், பாராட்டுக்குரியவர்கள்!

த.அரவிந்தன் said...

பகிர்வுக்கு நன்றி!