Monday, March 24, 2008

கோபம்... மோகம்... பாகம்!




ஒளியிலே தெரிந்த தேவதையா "இப்படி நடித்துள்ளார்' என்று திகைக்கிறளவு கவர்ச்சியாகத் தோன்றுகிறார் "சிலந்தி' படத்தில் மோனிகா. இதில் அவரின் சில ரசிகர்களுக்குக் கோபம். சில ரசிகர்களுக்கு மோகம்.
இது குறித்து மோனிகா என்ன சொல்கிறார்?

"அழகி' படத்துக்குப் பிறகு "தேவதை' பட்டத்தோடு நீங்கள் வலம் வந்தாலும் அதிக படங்களில் நீங்கள் நடிக்கவில்லையே?
தேவதை பட்டத்தை "அழகி' படம் வாங்கிக் கொடுத்தாலும் அதில் நான் நந்திதாதாஸின் இளவயது பாத்திரத்தில்தான் நடித்திருந்தேன். இதனால் அந்தப் படத்திற்குப் பின் என்னை நடிக்க அழைத்தவர்கள் இரண்டாம் நாயகி பாத்திரங்களில் நடிப்பதற்கே அழைத்தார்கள். இந்த நேரத்தில் "தெலுங்கு' படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அதனால் தெலுங்கு படங்களில் நடித்தேன்.

கதாநாயகியாகவா?
ஆம். சிவராமா ராஜு, ஈ.வி.வி.சத்யநாராயணா ஆகியோரின் படங்கள் உட்பட நாலு படங்கள் நடித்தேன். ஆனால் தெலுங்கில் "தேவதை' பாத்திரங்களில் நடிக்கவில்லை. க்ளாமர் கலந்துதான் நடித்தேன். அங்கும் நல்ல பெயர்தான் கிடைத்தது.

"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் வடிவேலோடு திடீரென இணைந்து நடித்தீர்களே? மன அளவில் வருத்தமாக இருந்ததா?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை யாரார் நடிகர் நடிகைகள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஷங்கர் நிறுவனம். வித்தியாசமான கதை. நிச்சயம் பெரிய வெற்றிபெறும். எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததுபோலவே பெரிய வெற்றி பெற்றது. இங்கு வெற்றி பெற்றது போலவே லண்டனிலும் அமோக வெற்றி பெற்றது. லண்டனில் இப்படம் வெற்றி பெற்றதில் எனக்குதான் கூடுதல் சந்தோஷம்.
என் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் பலர் சேர்ந்து எனக்கு ரசிகர் மன்றம் உருவாக்கி இருப்பதுடன் என் பெயரில் இணையதளம் ஒன்றையும் நடத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இது இந்தப் படத்தில் நடித்ததின் மூலமே சாத்தியமானது.

இதற்குப் பிறகுகூட கதாநாயகியாக சோபிக்காததற்கு காரணம் நீங்கள் தமிழ் நடிகை என்பதாலா?
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மும்பை நடிகைகளாக இருக்க வேண்டும், தமிழ் பேசத் தெரியாதவர்களாக இருக்கவேண்டும் என்கிற மனோபாவம் இங்கு அதிகமாக இருப்பதால் இருக்கலாம்.

"சிலந்தி' படத்தில் நீங்கள் கவர்ச்சியாக நடிப்பதற்கு இதுதான் காரணமா?
"அழகி' படத்தில் நடித்ததற்காக பெரும் சந்தோஷம் அடைகிறபோது எனக்கு ஏற்படுகிற சிறு வருத்தம், தேவதையாக நடித்துவிட்டேன் என்பதுதான். விளம்பரங்களில் நடிக்க அழைக்கிறவர்கள்கூட சேலை அணிந்துகொண்டு தேவதையாக வலம் வருவதுபோலவே நடிப்பதற்கு அழைக்கிறார்கள். இந்தப் பாத்திரம் இப்போது வருகிற படங்களுக்கு அதிகளவில் தேவைப்படாது.
இதன் காரணமாகவே எனக்குக் குறைவான வாய்ப்பு கிடைப்பதாக நினைக்கிறேன். இதன் காரணமாகவும் கவர்ச்சி பாத்திரத்தில் நடிக்கிறேன் எனலாம். கவர்ச்சியாக நடிப்பது ஒன்றும் வெறுக்கத்தக்கது அல்ல. நடிப்பில் அதுவும் ஒரு பாகம். அதற்காக எல்லாப் படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று அர்த்தமில்லை. கதைக்கேற்ற வகையில்தான் நடிக்கிறேன். தெலுங்கு படங்களிலேயே கவர்ச்சியாக நடித்தேன் என்றாலும் "சிலந்தி'யில்தான் அதிக கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். இது கதைக்கு அவசியம் தேவையாக இருந்தது.

சிநேகா போன்று குடும்பப்பாங்கான பாத்திரங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
சில படங்களில் அவரும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். மற்ற மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இது அவரவர் விருப்பம்.

ஒரு படத்தை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
நான் வசதியான குடும்பத்திலிருந்தோ, சினிமா தொடர்புடைய குடும்பத்திலிருந்தோ வரவில்லை. நடுத்தர குடும்பத்திலிருந்தே கஷ்டப்பட்டு நடிக்க வந்திருக்கிறேன். எனக்குப் பணம் முக்கியமில்லை. நல்ல நடிகை என்கிற பெயர் எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்குத் தகுந்தாற்போல் நல்ல கதையுடன் பெயர் கிடைக்கிற வகையிலான கதாபாத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

நடிப்பைத் தவிர சினிமாவில் வேறு எதில் ஆர்வம்?
இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் ஆர்வம் இருக்கிறது. முறையாக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்.

வேறு ஏதாவது படத்தில் நடிக்கிறீர்களா?
"வர்ணம்' என்கிற தமிழ் படத்திலும், சிங்களப் படமொன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

No comments: