Monday, February 18, 2008

தலைகீழ்- ஷில்பா!





"சாவரியா...சாவரியா' என்ற ஹிந்தி பாடலை யாராவது பாடுகிற சத்தம் கேட்டால் சுற்றும் முற்றும் தேடிப் பாருங்கள். பாடுவது -விஜய் டிவியில் "அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சி மூலம் பலரைப் பேட்டி காணும் ஷில்பாவாக இருக்கலாம். அடிக்கடி அவர் முணுமுணுக்கும் பாடலாம் இது. ஹிந்துஸ்தானி இசையில் பாடுவதற்குப் பயிற்சி பெற்று வரும் கேரளப் பெண்ணான அவரை ஓர் இசைவேளையில் சந்தித்தோம்.

பேட்டி எடுப்பது சிரமமா? பேட்டிக் கொடுப்பது சிரமமா?

கொடுப்பதுதான். எடுக்கிறபோது கேள்விதான் கேட்கப்போகிறோம். நம் இஷ்டம்போல் கேட்கலாம். ஆனால், பேட்டி கொடுக்கிறபோது அப்படியில்லை. யோசித்துப் பேசவேண்டும். சொல்கிற தகவல் தவறாகிவிடக் கூடாது. அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பேட்டிக் கொடுப்பதுதான் சிரமம்.

கல்லூரியில் படித்த காலத்திலிருந்த இயல்பிற்கும் இப்போது தொகுப்பாளினியாக இருப்பதற்கும்
ஏதாவது மாற்றத்தை உணர்கிறீர்களா?

இல்லை. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். கலகலப்பான காரெக்டர் என்னுடையது. என் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அந்தக் கலகலப்பும் புன்னகையும்தான் "ரேடியோ ஒன்'னில் பணியாற்றவும், ஜெயா டிவியில் "உங்க ஏரியா உள்ளே வாங்க' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் உதவியது என்று நினைக்கிறேன். இப்போது விஜய் டிவியில் "அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கும் இதுதான் உதவுகிறது. இதனால் என்னளவில் எவ்வித இயல்பு மாற்றமும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

"அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியில் பலரைப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த பிரபலத்தின் பேட்டி?

பிரபலங்களிடம் எடுத்த அனைத்துப் பேட்டிகளுமே சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தன. இதில் நான் மிகவும் விரும்பி எடுத்தது நடிகர் மாதவனுடைய பேட்டி. பிரமிப்புடனே அவருடன் பேட்டி எடுத்தேன். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் பேசத் தொடங்கிய பிறகு அந்தப் பயம் போய்விட்டது. பெரிய பிரபலம்போல் பேசாமல் வெகு இயல்பாகப் பேசினார். "ஸ்கூல் போகிற பெண்போல இருக்கிறாய்' என்று என்னைக் கேலியும் செய்தார். மாதவனுடன் நான் எடுத்த பேட்டிக்குத் தோழிகள் மத்தியில் அதிகப் பாராட்டு கிடைத்தது. அதுவே என்னைக் கவர்ந்த பேட்டியும்.

ஹிந்துஸ்தானி இசை கற்றுவருகிறீர்கள்... திரைப்பாடல் பாட விருப்பமிருக்கிறதா?

ஹிந்துஸ்தானி இசை எனக்கு உயிர். செüம்யா மதன்கோபாலிடம் நாலைந்து வருடங்களாகக் கற்று வந்தேன். இப்போது ராமமூர்த்தியிடம் கற்றுவருகிறேன். இருப்பினும் முழுதாய் கற்றோம் என்கிற எண்ணம் எனக்கு வரவே இல்லை. இசை என்பது கடல். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட விருப்பம் உள்ளது. யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்கவில்லை. நிச்சயம் பாடுவேன்.

நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததா?

சீரியலில் நடிப்பதற்கு இரண்டு பேர் அழைத்தார்கள். எனக்குத்தான் விருப்பமில்லை. எதையும் முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். நடிப்பதற்கு எனக்கு ஆர்வமே இருந்ததில்லை. தொகுத்து வழங்குவது என்பது நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நன்றாகப் பேசுகிறோம் என்பதற்காக நடிக்கமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. திரைத்துறையிலிருந்து அழைப்பு வந்தாலும் நிச்சயம் நடிக்கப் போகமாட்டேன்.

வேறெதில் ஆர்வம்?

இசை...இசை..இசைதான். வேறெதிலும் ஆர்வமில்லை. ஹிந்துஸ்தானி இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். திட்டமிட்டு பயிற்சி பெற்று வருகிறேன். சாதிப்பேன்.

பிடித்தது கேரள வாசமா? சென்னையா?

கேரளாவை எல்லோருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் "கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கிறளவுக்குப் பார்க்கிற இடமெங்கும் பசுமையைப் போர்த்திக்கொண்டிருப்பதுதான். எனக்குப் பிடிக்காததற்கு முக்கியக் காரணமும் அதுதான். அழகழகான கட்டடங்கள் இருக்கிற இடம்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதன்படி எனக்கு சென்னைதான் மிகவும் பிடிக்கும். நான் எல்லாவற்றிலும் தலைகீழ்!

No comments: